நான் கடலை விட்டு அகன்ற போது ஒரு அலை மட்டும் மற்ற அலைகளை விட முந்நோக்கி வந்தாள். உயரமாகவும் தக்கையாகவும் இருந்தாள். மிதக்கும் ஆடைகளை பற்றி இழுத்து மற்றவர்கள் அவளை கூக்குரலிட்டு அழைத்தும் என் கரங்களை பற்றிக்கொண்டு என்னோடு துள்ளிக்கொண்டு வந்துவிட்டாள். அவளது நண்பர்கள் முன்னிலையில் அவளை அவமானப்படுத்துவது என்னை சங்கடத்திலாழ்த்தும் என்பதால் ஒன்றும் சொல்ல வேண்டாமென்று இருந்துவிட்டேன். இருப்பினும் மூத்தவர்களின் கோபப்பார்வைகள் என்னை உறையச்செய்தது. நாங்கள் நகரை அடைந்த போது இங்கே இருப்பது சாத்தியமில்லை, நகர வாழ்க்கை கடலை வீட்டு அகலாத அலையின் கற்பனைக்கு எட்டாத அளவு மாறுபட்டது என்பதை விளக்கினேன். என்னை கூர்ந்து கவனித்தாள். நான் இனிமையாய், உறுதியாய் பரிகாசமாய் முயற்சித்தேன். அவள் அழுதாள், கத்தினாள், அனைத்தாள், பயமுறுத்தினாள். நான் மன்னிப்புகோற வேண்டியதாயிற்று.
அடுத்த நாள்முதல் தொல்லைகள் ஆரம்பமாகின. நடத்துனர், பயணிகள், காவலர்கள் பார்த்துவிடாமல் ரயிலுக்குள் எப்படி ஏறுவது. ஒரு அலையை தண்டவாளத்தில் ஏற்றி செல்வதற்கு எவ்வித விதிமுறைகளும் நிச்சயமாக கூறப்படவில்லையெனினும் சொல்லப்படாததே இச்செயல் எத்தனை தீவிரமாகக் கருத்தப்படுமென்பதற்கான ஒரு அறிகுறி. தீவிர யோசனைக்கு பிறகு வண்டி கிளம்ப ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ரயில்நிலையம் அடைந்தேன். இருக்கையை பிடித்தேன். யாரும் பார்க்காத தருணத்தில், பயணிகளுக்கான தண்ணீர் குவலையை காலி செய்து என் தோழியை பத்திரமாக அதில் ஊற்றினேன்.
அடுத்திருந்த தம்பதியரின் குழந்தை அவர்களின் அபார தாகத்தை கூறிய போது முதல் சம்பவம் ஆரம்பமானது. அவர்களை தடுத்து சிற்றூண்டிகளும் எலுமிச்சை சாறும் வாங்கித்தருவதாக உறுதியளித்தேன். அவர்கள் ஒப்புக்கொள்ளவரும் நேரத்தில் மற்றுமொரு பயணி தாகத்துடன் வந்தாள். அவளுக்கும் வாங்கித்தருவதாக சொல்லலாம் என்று நினைத்து பின் அவளுடன் வந்த நபரின் முறைப்பை பார்த்து சொல்லாமல் விட்டுவிட்டேன். அப்பெண்மணி ஒரு காகித கோப்பையை எடுத்துக்கொண்டு நீர்குவலையின் அருகில் சென்று குழாயை திறந்தாள். கோப்பை பாதி நிறைவதற்குள் என் தோழிக்கும் அவளுக்குமிடையில் தாவிச்சென்றேன். என்னை ஆச்சரியமாக பார்த்ததாள். அவளிடம் மன்னிப்பு கேட்கும் நேரத்தில் குழந்தைகளில் ஒன்று மறுபடியும் குழாயை திறந்து விட்டது. பெருங்கோபத்தோடு குழாயை மூடினேன். அப்பெண்மணி கோப்பையை தன் உதடுகளுக்கு கொண்டுசென்றாள்.
“ஆ…..இத்தண்ணீர் உப்புக்கரிக்கிறது”
அச்சிறுவனும் இதையே எதிரொலித்தான். பல பயணிகள் எழுந்தனர். அப்பெண்ணின் கணவர் நடத்துனரை அழைத்தார் :
“இந்த ஆள் தண்ணீரில் உப்பை கலந்துவிட்டார்”
நடத்துனர் கண்காணிப்பாளரை அழைத்தார்
“நீ தண்ணீரில் ஏதோ பொருளை கலந்துவிட்டாயா?’
கண்காணிப்பாளர் காவலரை அழைத்தார்
நீதான் தண்ணீரை விஷமாக்கினாயா?
காவலர் தலைவரை அழைத்தார்
நீ தானே விஷம் வைத்தவன்?
தலைவர் மூன்று காரியஸ்தர்களை அழைத்தார். பயணிகளின் பார்வைகளுக்கும் முணுமுணுப்புகளுக்கும் மத்தியில் அவர்கள் என்னை ஒரு காலியான பெட்டிக்கு அழைத்துச்சென்றனர். அடுத்த நிறுத்தத்தில் என்னை இழுத்துச்சென்று சிறையில் அடைத்தனர். சில நாட்களுக்கு நீண்ட விசாரனைகளை தவிர்த்து வேறெதுவும் யாரும் என்னிடம் பேசவில்லை. ‘இந்த வழக்கு மிகவும் கடுமையானது. உண்மையில் நீ குழந்தைகளுக்கு விஷம் கொடுக்க எண்ணவில்லையா? என்று தலையாட்டிக்கொண்டே சொன்ன சிறை அதிகாரி உட்பட என்கதையை நான் விளக்கினாலும் யாரும் நம்புவதாக இல்லை.
ஒரு நாள் என்னை நீதிபதி முன் ஆஜர் படுத்தினர்.
உன் வழக்கு மிகவும் கடுமையான ஒன்று என்று அவரும் சொன்னார். இவ்வழக்கை நான் குற்றவியல் நீதிபதிக்கு ஒப்புவிக்கிறேன் என்றார்.
ஒரு வருடம் கடந்தது. கடைசியாக என்னைப்பற்றின தீர்மானத்திற்கு வந்தனர். யாரும் என் செயலால் பாதிக்கப்படவில்லை என்பதால் எனக்கான தண்டனை மிதமானதாக இருந்தது. குறுகிய காலத்திற்கு பின் நான் விடுதலையாகும் நாளும் வந்தது.
சிறையின் உயர் அதிகாரி என்னை அழைத்தார். ‘இப்போது நீ விடுதலையாகிறாய், நீ பாக்கியசாலி. அதிர்ஷ்டவசமாக யாரும் உன் செயலால் பாதிக்கப்படவில்லை. ஆனால் இச்செயலை நீ மீண்டும் செய்ய முற்படாதே. அடுத்தமுறை இவ்விஷயம் இத்தனை எளிதில் முடிவடைந்துவிடாது என்றார். எல்லோரும் பார்த்த அதே சந்தேகப்பார்வையால் தான் அவரும் என்னை பார்த்தார்.
அன்று மதியமே நான் ரயிலை பிடித்தேன். ஒருமணி நேர அசௌகரியப்பயணத்திற்கு பிறகு நகரத்தை அடைந்து அங்கிருந்து ஒரு வண்டி பிடித்து வீட்டை அடைந்தேன். என் வீட்டு வாசலில் சிரிப்பொலியும் பாட்டு சத்தமும் கேட்டது. ஆச்சர்ய அலை இதயத்தை கடந்து செல்லும்போது ஏற்படுத்தும் ஆச்சர்ய அதிர்வைப்போல எனது இதயத்தில் ஓர் வலியை உணர்ந்தேன். அங்கு என் தோழி எப்போதும் போல் சிரித்துப்பாடிக்கொண்டிருந்தாள்.
நீ எப்படி திரும்பி வந்தாய்?
வெகு சாதாரணம். ரயில் வண்டியில் என்னை வெறும் உப்பு தண்ணீர் தான் என்று யாரோ உறுதி செய்த பின்னர் ரயில் இஞ்சினில் ஊற்றினர். மிகவும் கடினமான பயணமாக இருந்தது அது. வெகு விரைவில் நான் வெள்ளை ஆவியாகி மாறி பின் நல்மழையாகி விழுந்தேன். மிகவும் இளைத்தேன். என்னிலிருந்து பல துளிகளை இழந்தேன்.
அவளின் இருப்பு என் வாழ்கையை மாற்றியது. வீட்டின் இருண்ட தாழ்வாரங்களும், அழுக்கு இருக்கைகளும் சூரியனாலும் காற்றாலும் சப்தங்களாலும் பச்சை மற்றும் நீள நிற பிரதிபலிப்புக்களாலும் ஏராளமான சந்தோச செழிப்பு மிக்க முழக்கங்களாலும் எதிரொலிகளாலும் நிறைந்தன. ஒரு அலை என்பது எத்தனை அலைகள்? அவள் எப்படி ஒரு கடலை, பாறையை, அணைச்சுவரை, இதயத்தை, நெற்றியை தன் நுரைகளால் மகுடம் சூட்டுகிறாள்.
நிராகரிக்கப்பட்ட மூலைமுடுக்குகளும், தூசு தும்புகள் நிறைந்த இடங்களெல்லாமும் அவளின் மென்மையான கரங்களால் தீண்டப்பட்டன. எல்லாம் புன்னகைக்க துவங்கின. எல்லாம் பற்கள் மின்ன சிரித்தன. சூரியன் மகிழ்ச்சியோடு என் பழைய அறையில் நுழைந்து பிற வீடுகளை, நகரை, மாநிலத்தை, நாட்டை நிராகரித்து பல மணி நேரங்கள் என் வீட்டில் தங்கினான். இப்படி பதுங்கி நடப்பதை நேரம் கடந்த சில இரவுகளில் அதிர்ச்சியுடன் நட்சத்திரங்கள் பார்த்திருந்தன.
…….தொடரும்
நன்றி : உயிர்மை – நவம்பர் 2009
ஆங்கிலத்தில் வாசிக்க : My Life with the Wave by Octavio Paz
[...] நவம்பர் 10, 2009 nathiyalai ஆல் முதல் பகுதி [...]