Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘அமிதவ் கோஷ்’ Category

மூன்று பகுதிகளாக வெளியாகவிருக்கும் அமிதவ் கோஷ் – ஐபிஸ் ட்ரைலாஜியின் முதல் தொகுப்பு Sea of poppies 2008ல் வெளியானது. அந்த ஆண்டு புக்கர் பரிசு தேர்வு பட்டியலில் இப்புத்தகமும் இடம்பெற்றது.  ஆனால் தேர்வு பெறவில்லை, மாறாக White Tiger வென்றது.  இப்புத்தகத்தை 1838 காலகட்டத்தின் வரலாற்றுப்புனைவு எனலாம். அக்காலகட்டத்தின் வரலாற்று நிகழ்வுகளோடும் வாழ்கை மற்றும் தொழில் முறைகளோடும் விரியும் பிரம்மாண்டமான தகவல் களஞ்சியம் இப்புதினம்.  இப்புத்தகத்தின் நன்றியுரையில் அமிதவ் கோஷ் பட்டியலிட்டிருக்கும் reference list நீண்டுக்கொண்டே போகின்றது. அதை வாசித்தப்பின்னர் இந்நாவலுக்கென தகவல்கள் சேகரிக்கும் முயற்சியில் எண்ணற்ற பக்கங்களை புரட்டியிருக்கும் அவரது உழைப்பை வியக்காமல் இருக்க முடியவில்லை. 

இப்புதினத்தில் பாப்பிவிதைகளை பயிரிடும் முறைகளும், உழவில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் நெருக்கடிகளும், தொழிற்சாலைகளில் ஓபியம் தயாரிக்கப்படும் வழிமுறைகளும், அங்கு பணிபுரிவோர் எதிர்க்கொள்ளும் உடல் நல கேடுகளும், ஓபியத்திற்கு நிரந்தர அடிமையாகும் மனிதர்களின் சீர்குலைவுகளும் நுணுக்கமான தகவல்களோடு விவரிக்கப்பட்டிருக்கின்றன.

பெரும்பாலும் இதிலுள்ள எல்லா விவரனைகளுமே தகவல் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. கடல் வழிப் பயணம், பயணத்திற்கு முன் கப்பலில் நியமிக்கப்படவேண்டிய பணி ஆட்கள், அவர்களுக்கான அதிகாரங்கள், ஓபியம் ஏற்றுமதியில் East India Companyயின் நிலைபாடுகள், முதல் ஓபியப்போருக்கு முன்னாலான ஓபிய ஏற்றுமதியில் நிலவிய குழப்பங்கள், சிக்கல்கள் என பலவற்றை தொட்டிருக்கின்றது இந்நாவல்.  அவை மட்டுமல்லாமல் கூலியாட்களை மொரிஷியசிற்கு அனுப்பும் வழமை, அதுகுறித்து எழும் வதந்திகளை கேட்டு பணிக்கு செல்வோரிடத்து ஏற்படும் பீதி, அவர்களை வேலைக்கு நியமிக்கும் குமாஸ்தாக்கள், கப்பலில் அவர்களின் மேற்பார்வையாளர்களின் அடக்கு முறைகள் என பலவற்றையும் குறிப்பிடலாம். 

முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவரான பிகாரில் வசிக்கும் தீத்தியை தனது மூத்த மகனிற்குத் திருமணம் செய்துவைக்கும் தாய் அவளது குடும்பவிருத்திக்கென முதல் இரவில் தீத்தி அறியாமல் அவளுக்கு ஓபியம் புகட்டி தனது இளைய மகனை உறவுக்கொள்ளச்செய்வதாக எழுதப்பட்டிருக்கும் முதல் பகுதியே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

தனது அறியாமையாலும் வேறு பலரின் சூழ்ச்சிகளாலும் ராஜாங்கத்தையும் சொத்து முழுவதையும் இழந்து சிறைவைக்கப்படும் மற்றொரு முக்கிய கதாபாத்திரமான ராஜா நீல் ரத்தனின் சிறை அனுபவங்களை விவரிக்கும் பக்கங்களையும் கடப்பது கடினமாகவே இருந்தன. ராஜ போகத்துடன் வாழ்ந்தவனிடத்திலிருந்து சட்டென யாவும் பிடுங்கப்படும்போது அவன் மனம் கொள்ளும் அதிர்ச்சி, மாற்றம், சகிப்புத்தன்மை, பக்குவம் என எல்லாமே கச்சிதமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 

வெகு நாட்கள் ஓபியம் உட்கொள்ளும் பழக்கத்திற்கு அடிமையான உடலில் ஏற்படும் சீர் குலைவுகளை தீதியின் கணவர் வாயிலாகவும், ஓபியம் உட்கொள்ளும் பழக்கத்தை சட்டென நிறுத்துவதனால் ஏற்படும் உடல் உபாதைகளை ராஜா நீலுடன் ஒரே அறையில் சிறைவைக்கப்படும் கைதியின் மூலமும் விரிவாக அறிந்துக்கொள்ளமுடிகின்றது. 

மற்ற கதாபாத்திரங்களான அமெரிக்க மாலுமி (second mate) சாச்சாரி, பிரென்ச் பெண்மணி பௌலட், அவளின் தம்பி ஜோடு, குமாஸ்த்தா பாபு, பிரிட்டிஷ் தொழிலதிபர் பெஞ்சமின் மேலும் பலரை கொண்டு கட்டமைக்கப்பட்ட இக்கதையில் அக்காலகட்டத்தில் நிலவிய சட்டத்திட்டங்கள், வணிக வியாபார முறைகள், தாவரவியல், ஐதிகம், கப்பல் போக்குவரத்து, கடல் வழி பயணத்தில் சந்திக்க நேரும் அபாயங்களும், அதற்கான அணுகுமுறைகள், கப்பலின் கட்டமைப்பு என ஓவ்வொரு கதாப்பாத்திரத்தின் வாயிலாகவும் பல தகவல்களை வாசகர்களுக்கு தரும் உத்தியை பயன்படுத்தியிருக்கின்றார்.  

நிலம், நதி, கடல் என்று பகுதிகளைக்கொண்ட இப்புதினம் கூலிகளையும், இரு கைதிகளையும், இவர்களின் மேற்பார்வையாளர்களையும், கப்பல் ஊழியர்களையும் கொண்டு மொரிஷியசிற்கு பயணிக்கும் ஐபிஸ் நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருக்க கதை நிறைவு பெறுகின்றது.  புதினங்களில் நிரந்தர முடிவுகளை வாசித்து பழகிய மனதிற்கு நடுக்கடலில் இறுதி பக்கத்தின் இறுதி வரியை அடைந்து விட்டது சமாதானமாக இல்லையென்ற போதிலும் அடுத்த தொகுப்பிற்கென காத்திருத்தலன்றி வேறொன்றும் செய்வதற்கில்லை. 

அமிதவ் கோஷின்  மற்ற நாவலான The Shadow Lines (1988) சாகித்ய அகெதமி விருதை வென்றிருக்கின்றது. இவரது The Circle of Reasons (1986),  The Calcutta Chromosome (1995), The Glass Palace (2000), The Hungry Tide (2005) போன்ற நாவல்களும் பல விருதுகளை வென்றிருக்கின்றன.  இவரது அடுத்த படைப்பான River of smoke இவ்வாண்டு வெளியாக உள்ளது. மேலும் The Imam and the Indian, Dancing in Cambodia and at large in Burma, Incendiary Circumstances கட்டுரை தொகுப்புகளும் In an Antique Land என்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமும் வெளியாகியுள்ளன.

Read Full Post »