Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘ரசித்த கவிதைகள்’ Category

தென்கொரியாவில் 1953 பிறந்த Yi Yŏn-ju வின் படைப்புகள் அந்நாட்டு பெண்கவிஞர்களின் படைப்புகளில் முக்கியமானதாக கருதப்படுகின்றது. பெரும்பாலான கவிதைகள் புறநகர்ப்பெண்களின் நிலையை பேசும் படைப்பாகவும் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலாகவும் அமைந்துள்ளது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு ‘A Night Market where there are Prostitutes’ 1991ல் வெளியானது. இரண்டாம் தொகுப்பான ‘Juda, a Lamb of Redemption’ 1993ல் இவரது தற்கொலைக்கு பிறகு வெளியானது. இவர் பல கலைகளில் தேர்ந்தவராக இருந்தார். இலக்கிய வட்டங்களில் மட்டுமல்லாது ஓவியர்கள், பாடகர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்டார். இவரின் இரு கவிதைகள்……

 

மனநோய்

‘நிச்சயமாய் நான் எதுவுமே செய்யவில்லை’
என ஒரு பெண்மணி விம்மியழுதாள்

‘தொழிற்சாலையின் அருகிலும் செல்லவில்லை
ஒருமுறை கூட பேரணியில் பங்கேற்கவில்லை’
என கதறினாள்

‘யார்… ஏன் தீக்குளிந்து இறந்தார் என்றோ
கட்டிடத்தின் மேற்தளத்திலிருந்து குதித்தார் என்றோ
அறிந்துக்கொள்ளவும் எனக்கு விருப்பமில்லை’
என தலைமுடியை விரித்து புலம்பியழுதாள்

‘ஒரு விலங்கைப்போல்
வெறுமனே அமர்ந்திருப்பதைத் தவிர
வேறு எதுவுமே நான் செய்யவில்லை

என்னை யார் இங்கழைத்து வந்தது?
எதற்காக அடைப்பட்டிருக்கின்றேன்?

என் கருவறை ஒரு துருபிடித்த இரும்புத்துண்டு
தீக்குளிக்க ஒரு மகனையோ அல்லது
போராட்டம் நடத்த ஒரு மகளையோ
கூட என்னால் பிரசவிக்க இயலாது’
என நிலைகுலைந்து தரையை உரசினாள்

மருத்துவர் வந்து சென்றார்
ஒரு வார்த்தை கூட உரைக்காமல்

செவிலி வந்து அவளை அறைந்தாள்
பின் வெளியேறினாள்
படாரென கதவு மூடப்பட்டது

‘நிச்சயமாய் நான் எதுவுமே செய்யவில்லை’
என வாடிய அவள் முணுமுணுத்தாள்
மனநோய்ப்பிரிவின்
இரும்புக்கதவுகளை பற்றிக்கொண்டு

1970ல் ஏழைத்தொழிலாளிகள் சுரண்டப்படுவதை எதிர்த்து Chŏn T’ae-il, என்ற தொழிலாளி தீக்குளித்துக்கொண்டார். தென்கொரியாவில் இச்சம்பவம் நாடு முழுவதுமான தொழிலாளர் இயக்கத்தை முடுக்கிவிட்டது. காவலர்களையும் வாடகைக்கு குண்டர்களையும் கொண்டு அரசாங்கம் தொழிலாளிகளின் வேலைநிறுத்தப்போராட்டங்களை முறியடித்தது. சமயங்களில் நம்பிக்கையிழந்த தொழிலாளிகள் கட்டிடத்தின் மேற்தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர். இத்தனை வலுவான அடக்குமுறைகள் இருந்தும் 1970 – 1980 காலகட்டங்களில் பெண் தொழிலாளிகள் தனி இயக்கத்தை துவங்கினார்கள்.

***************************
 

குடும்ப புகைப்படம்

எல்லோரையும் துரோகித்துவிட்டு
ஓடிப்போகிறாள் தாய்
கைகளை தரையில் அடித்து
அழுகிறார் தந்தை
பின் எல்லா இரவுகளையும்
சீட்டாட்டத்தில் கழிக்கிறார்
தந்தையைத்தேடி குழந்தை
சூதாட்ட விடுதியின் கதவைத் தட்டுகிறது

தமக்கை பசையை விழுங்குகிறாள்
கிழிந்த உள்ளாடையை புரட்டி அணிந்துக்கொண்டு
அடித்தளத்தில் குப்பைக்குவியலுக்கு அருகில்
தன் மணிக்கட்டை கத்தியால் அறுத்துக்கொள்கிறாள்

அக்குடும்பத்தின் மூன்று வயது குழந்தை
தட்டுத்தடுமாறி வளர்ந்து
தாயின் தந்தையின் தமக்கையின் செய்கைகளை
விரைவில் பற்றிக்கொள்கிறது

ஒவ்வொரு இரவிலும் நகரங்கள்
ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ச்சியடைகின்றன
மேலும் இன்று
ஒரு எண்ணெய் விளக்கின் முன்
நான்
திரியை துண்டு துண்டாக்குகின்றேன்

நன்றி : அகநாழிகை சமூக கலை இலக்கிய இதழ் – டிசம்பர் 2009

Read Full Post »

10069

நீண்ட நாட்களுக்குப்பிறகு நிறைவோடு வாசித்த கவிதை தொகுப்பு பிரான்சிஸ் கிருபா எழுதிய வலியோடு முறியும் மின்னல். இதில் நூற்றிற்கும் மேற்பட்ட கவிதைகள் உள்ளன. இத்தொகுப்பு எளிதில் கடக்க கூடியதாக இருக்கப்போவதில்லையென்று யூமா வாசுகி முன்னுரை வாசித்ததுமே புரிந்துவிட்டது. தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் நன்றாக இருந்தன எனினும் எப்போதும் போல் வலியை சொல்லு கவிதைகளே வெகுவாகப்பிடித்துப்போனது. அதில் சில சிறிய கவிதைகளை மட்டுமே இங்கு இடுகிறேன்.

 

எப்போதோ எதற்காகவோ செய்த தவறுகளெல்லாம் தீடிரென்று நினைவிற்கு வந்து வதைத்துக்கொண்டிருப்பதுண்டு. பல குற்ற உணர்வுகளில் சிக்கி தவித்து தன்னைத்தானே வதைத்துக்கொண்டிருக்கும் மனம். அப்படி தைத்துக்கொண்டிருக்கும் மனதை நீயேனும் ஏன் மன்னிக்கூடாது என கெஞ்சுகிறது இக்கவிதை.
 

கணங்கள்தோறும்
என்னை நானே
தண்டித்துக்கொண்டிருக்கும்
போது….ஏன்
நீயேனும் கொஞ்சம்
என்னை மன்னிக்கக்கூடாது

 

பற்றிக்கொள்ள ஒரு விரல் தரும் ஆசுவாசத்தை, அதன் பின் முழுமையாய் உடனிருக்கும் மனிதனனப் பற்றிய நம்பிக்கையை அற்புதமாக நடைபடும் வழிகளையும், வீதியையும், நிலத்தையும் அவள் இல்லாமல் தான் தனித்து நடக்கும் வேதனையின் துணைக்கு புகுத்தியிருக்கிறார் இக்கவிதையில்.

 

நடைபடும் வழிகள்
கடைகள் வரை நினைக்கின்றன
பிள்ளைகள் பற்றிக்கொள்ள
ஒருவிரல் போதுமென்று

ஒற்றை விரலக்குப் பின்னே
முழுசாய் ஒரு மனுஷி ஒரு மனிதன்
வீணாயிருப்பதை
விளக்க முயல்கிறது வீதி

முயன்றாலும்
நான் மட்டும் நீயின்றி நடந்தால்
ஏனென்றே தெரியாமல்
வலியில் துவள்கிறது நிலம்
.

 

ஏற்கவோ நிராகரிக்கவோ முடியாத நிலையில் கைமீறிப்போகின்ற காலத்தை நிறுத்தமுடியாமல் தவிக்கும் மனங்களை பற்றிய கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் நீங்கிப்போகின்றவைகளை விதவிதமாக இப்படி எழுதி வாசித்துக்கொள்ள மட்டுமே முடியும் என்று சொல்லித் தேற்றிக்கொள்ள நன்றாகத்தானிருக்கிறது.

 

இரவின் ஜன்னல் வழியே
எட்டிப்பார்க்கின்றன கனவுகள்
நேரம் காலமறியாமல்
விடிந்துவிடுகிறது பொழுது.
முகத்தை சுளித்துத் திருப்பிக்கொள்கின்றன கனவுகள்.
காலையில் ஏந்தும்
முதல் காப்பிக் கோப்பையில்
கனவுப் பிணங்கள் இறந்து மிதக்கின்றன.
ஈயைப்போல் எடுத்துத் தூரப் போடவோ
அல்லது புகாரோடு
அந்த காப்பியை நிராகரிக்கவோ
முடியாமல் தவிக்கும்போது
ஆறிப்போகிறது அன்றைய சூரியன்

 

எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை அவர்களுக்கு தேவையான அல்லது ஆசைப்படும் வாழ்வெனினும் ஏங்கித்தவிக்க தவராமல் வாய்க்கிறது யாவருக்கும். மர நாற்காலியை மட்டுமல்லாத மனித மனதின் ரணங்களை, இயலாமைகளை, ஏமாற்றங்களை, வாய்க்கப்பெறாதவைகளை இன்னும் எத்தனையோ வலிகளை தன்னுள் கொண்டுள்ளது இக்கவிதை.

பார்வை


ஆளற்ற கூடம்
அங்கே அந்த மர நாற்காலி அமர்ந்திருந்தது.
அதன் மேல்
வயலினை சாய்த்து வைத்துவிட்டு
வெளியேறியிருக்கிறான் இசைத் தொழிலாளி.
‘என்னிலும் நாலு தந்திகள் முறுக்கி
செல்லமாக தோளில் ஏந்து வைத்து
ரம்பத்தால் வருடினால் என்ன’
என்பது போல் யாரையோ
பார்க்கிறது மர நாற்காலி.
எதிரே திறந்திருக்கிறது
இசைக் குறிப்பு புத்தகம்.

 

நிறைய கவிதைகள் இத்தொகுப்பில் பிடித்திருந்தாலும் இக்கவிதையே என்னை மிகவும் ஈர்த்தது. மனதை பக்குவப்படுத்திக்கொள்ள பயன்படும் உன்னத கவிதையாக தோன்றுகிறது இது. துயரம் மிகுகையில் வார்த்தைகள் இத்தனை கச்சிதமாக தங்களை கோர்த்துக்கொள்ளுமோவென வியக்கவைத்தது.

 

முத்தமிட்டு என்னை
சாம்பலாக்கித் தந்துவிட்டு
கவலைப்படும் பூக்களாக
உன் கண்களை மாற்றிக்கொள்ளும்போது….
இலக்கின்றி நடக்கத் தொடங்குகிறேன்,
கொலை வாள் நீட்டி
மன்னித்துக் காட்டிய வழியில்

 

அடிகோடிட்ட வரிகளையெல்லாம் மீண்டும் வாசிக்கையில் எங்குமே சந்தோஷமான வரிகள் காணக்கிடைக்கவில்லை. சந்தோஷங்கள் எளிதில் கடந்து விடுகின்றனவோ, துக்கங்களும் அவநம்பிக்கைகளும் மட்டுமே சற்று தங்கிச்செல்கின்றனவோ எனத் தோன்றியது. வியக்க வைக்கும் உவமைகளைகொண்டு துயரங்களை பதித்திருக்கிறார் நிறைய கவிதைகளில். அவற்றில் சில வரிகள்…..
 

கண்ணீர் நாறிய தலையணையுறைக்குள்
பன்றிக்குட்டிகள் சிரித்துப் புரண்டன
மின்னல் கொடியிழுந்து
மேக ரதம் செலுத்தும் கற்பனையை
மூட்டைப் பூச்சியைப் போல நசுக்கினேன்.
 

**

கோபத்தை என்மீது துப்பிவிட்டுப் போகிறாய்
எச்சில் துளிகள் துப்பல் தொகுப்பில் இயல்பாக உலரும்.
அதைத் துடைத்தொழிக்க அவசரப்படமாட்டேன்
 

**
 

பெருஞ்சிரத்தையோடு வடிகட்டிய வெளிச்சத்தில்
பிச்சைப் பாத்திரம் நிரம்பிய பின்னும்
குருடனாகக் கெஞ்சும் உன் அறையை விட்டு
வெளியேறவே முதலில் விரும்புகிறேன்
 

**


பொறுக்க ஏலாமல்
அகதியான நாளின் நுனியில்
கூடடைந்த மலைத் தேனீக்களாய்
இதயத்தை மொய்த்துக் குமையும்
ஆயிரமாயிரம் வார்த்தைகள்
 

 **

 
“தேவைகள் எல்லாச் சமயங்களிலும் காலைப்பிடித்து தூக்கிவிடுகின்றன பலவீனமான தீர்மானங்களை”, “என்னைக்காணாமல் நகங்களைக் கடித்து இன்னும் கொஞ்சம் துப்பியிருக்கலாம் நீ “, “சூரியனை நம்பக்கூட தயக்கமாக இருக்கிறது சந்தேகம் எப்படிப் புலருமென்று தெரியாத பட்சத்தில் “, “மனதின் மிகப்பழைய வரைபடத்தின் வரம்புக்குள்ளேயே மலர்கின்றன பூக்கள்” என்று வெவ்வேறு கவிதைகளில் குறிப்பிடும்போது ஒரே மனம் தன் நிலைகளுக்கும் சூழலுக்கும் சம்பவங்களுக்கும் ஏற்ப எவ்வாறாக வேறுபடுகின்றதென்பதை அறியமுடிகின்றது.

 

இத்தொகுப்பில் தாங்கமுடியாத பரிசு, மரணத்தின் நிறம், கதிர் ரோமங்கள் கருகும் மெழுகுவர்த்தி, ஆளொழிந்த வீட்டில், தீயின் இறகு, புகைச்சித்திரம், கிளிகளின் தொலைபேசியில், முத்தமிட, வானத்தைத் தோற்றவன், எதிர்மிச்சம், கடலுக்குப் பெயர் வைக்கவேண்டும் போன்ற கவிதைகளும் மேலும் பல தலைப்பில்லா கவிதைளும் மிகச்சிறப்பானதாக அமைந்திருக்கின்றன.
 

‘அதிகரித்து வருகிறது முன்னறிமுகமில்லா ஒரு புன்னகைக்கான நிச்சயம்’ என்னும் பிரான்சிஸ் கிருபாவின் வரிகளுக்கேற்பவே இத்தொகுப்பை வாசிக்கும் போது நிறைவுப்புன்னகைகான நிச்சயம் அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது பக்கங்கள் நகர்ந்துக்கொண்டிருக்க.

Read Full Post »

பிறப்பதும் இறப்பதும் பிறந்திடா திருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறந்ததைத் தெளிந்ததும்
துறப்பதும் தொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும்
இறப்பதும் பிறப்பதும் பிறந்தவீ டடங்குமே
– சித்தர் சிவவாக்கியர்

சித்தர் பாடல்கள் பரம்பொருளை மனதில் வைத்து எழுதிய பாடல்கள் எனினும் நிறைய பாடல்கள் காதல் உணர்வுகளுக்கும் மிகப்பொருத்தமாக இருக்கிறது.  உதாரணத்திற்கு இப்பாடல் எத்தனை அழகாய் காதல் நிறைந்த உள்ளத்தை பாடுவதாக அமைந்திருக்கிறது. காதல் பிறப்பதும் இறப்பதும், பிறக்காமலே இருப்பதும், அதை மறப்பதும் நினைப்பதும்…மறந்ததை மீண்டும் நினைவுப்படுத்திக்கொள்ளுதளும், அவற்றை மீண்டும் துறப்பதும் தொடுப்பதும், சுகித்து உட்கொள்ளுதலும்…இறப்பதும் பிறப்பதும்…..இவை அனைத்தும் அவனுள் அடக்கமே. 

நெஞ்சு படபடக்கிறது
நீர்வீழ்ச்சியென்று
அருவியை
யாராவது
சொல்லிவிட்டால்…
– விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன் மணிவிழா பற்றி குங்குமம் வார இதழில் வந்த பதிவு இணையத்தில் வாசிக்க கிடைத்தபோதுதான் இந்தக்கவிதை அறிமுகமானது.  ஏராளமான கவிதைகள் இருந்தும் இக்கவிதையை அவரை பற்றிய குறிப்புடன் இட்டிருக்கிறார்களே ஏனென முதல் வாசிப்பில் எண்ணத்தோன்றியது.  .
ஏன் இந்தப்படபடப்புன்னு யோசிக்கும்போது புரிந்தது…அருவியை நீர்வீழ்ச்சி என்பது எத்தனை அபத்தமானது.  வீழ்வதெல்லாம் வீழ்ச்சி அல்லவே.  விழுதலும் எழுதலும் நகர்தலும் தொடர்தலும் வாழ்வின் இயல்பாகிப்போனப்பிறகு பிரம்மாண்டமாக கொட்டும் அருவியை எங்ஙனம் நீர்வீழ்ச்சியென்று அழைப்பது.

பத்திரத்துக்கு
முந்தின இரவில் போட்டதை
அணைக்க விட்டுப் போயிருக்கலாம்.
திங்கட்கிழமை முதல்பஸ் பிடித்து
வேலைபார்க்க வெளீயூர் போகிற
அப்பாவை வழி அனுப்பிய மகள்
அடுப்பில் பால் பொங்க
ஓடிப்போயிருக்கலாம்
அயத்துப் போய்.
அதிகாலையில்
வாசல் தெளிக்க ஏற்றி
‘கோலம் நல்லா வந்த’
நிறைவில்
குதுகலமாக மறந்து
போயிருக்கலாம்.
புதிதாக புழங்கும்
விருந்தினர் யாரோ
விசிறிக்கு அழுத்திய பொத்தானில்
வெளியே இந்த
விளக்கு எரிவது தெரியாமல்
அறைக்குள் இருக்கலாம்.
உச்சி வெய்யிலில்
தெருவில் போகிற எனக்கு
உறுத்திக் கொண்டிருக்கிறது
ஒரு வெளிச்சத்தில்
இன்னொரு வெளிச்சம் தோற்பது.
-கல்யாண்ஜி (தொகுப்பு : அந்நியமற்ற நதி)

ஒரு வெளிச்சத்தில் இன்னொரு வெளிச்சம் தோற்பது எத்தனை சோகமான விஷயம்.  மறதியால் நிகழ்ந்ததெனினும், ஒரு வெளிச்சம் இன்னொரு வெளிச்சத்தால் தோற்கடிக்கபடுவது அவலம் இல்லையா.  ஒன்றைவிட மற்றொன்று பெரியதாக வருமெனில் அங்கே ஒன்று தோற்றுத்தான் ஆகவேண்டும்.  ஆச்சரியம் என்னவெனில் தோற்கடிக்கப்பட்ட வெளிச்சம் தோற்கடிக்கப்பட்டுக்கொண்டே இருப்பினும், என்றுமே வெளிச்சமாகவே, வேண்டிய பொழுதுகளில்  வெளிச்சம் கொடுத்துக்கொண்டே நிலைக்கும். 

உடைந்த
இரு ஐஸ் துண்டுகள்
மெல்லத் திரும்பிவிட்டன
தம் பூர்வீக வெளிகளுக்கு

அறியக்கூடும்
இந்த ஆகாயமோ
இந்தக் காற்றோ
இந்தக் கடலோ
உடைந்த இரு ஐஸ் துண்டுகளின்
ஏகாந்தமான தொடுதல்களை

நாமிருந்தோம்
அவல சாட்சிகளாய்

ஒரு ஐஸ்கட்டியின்
நுண்ணிய முறிவுகளுக்கு

ஒரே கோப்பையில்
அருகருகே மிதக்க வேண்டியிருக்கும்
அதன் நிர்பந்தங்களுக்கு

பாதி மூழ்கி
பாதி எழும்
மீள முடியாத
அதன் விதிகளுக்கு

எப்படி நெருங்கி வந்தாலும்
ஒட்ட இயலாத
அதன் உடல்களுக்கு

நம் சில்லிட்ட கைகளோடு
– மனுஷ்ய புத்திரன் (தொகுப்பு – இடமும் இருப்பும்)

இயலாமைகளும், கட்டாயங்களும், முறைமைகளும், கசந்த கடமைகளும் சூழ்ந்த நிர்ணயிக்கப்பட்ட வாழ்வை அவலத்துடன் வாழ்ந்து உருகி வடிவிழக்கும் அவதியை ஐஸ்கட்டியின் முறிதல்கள் அழுத்தமாக உணர்த்திச்செல்கிறது.  ‘ஒரே கோப்பையில் அருகருகே மிதக்க வேண்டியிருக்கும் அதன் நிர்பந்தங்களுக்கு’, ‘பாதி மூழ்கி பாதி எழும் மீள முடியாத அதன் விதிகளுக்கு’, ‘எப்படி நெருங்கி வந்தாலும் ஒட்ட இயலாத அதன் உடல்களுக்கு’   அடடா…மனிதவாழ்க்கையையல்லவா சுட்டுகின்றது இவ்வரிகள். 

Entering the forest he moves not the grass
Entering the water he makes not a ripple. 
அவன்
வனத்தில் நுழையும்போது
புற்கள் நசுங்குவதில்லை
நீரில் இறங்குகையில்
சிற்றலையும் எழுவதில்லை
– ஜென் கவிதைகள்  (தமிழில் யுவன் சந்திரசேகர், தொகுப்பு : பெயரற்ற யாத்ரீகன்)

அவன் எந்த மனதில் பிரவேசித்தாலும் அங்கு அவன் சின்ன காயத்தையோ சலனத்தையோ கூட ஏற்படுத்தாதவன் என்ற மென்மையை சொல்கிறது.

அவன் பேச்சில…..சொல்ல விழையும் கருத்துக்களில் எம்மனமும் புண்படுவதே இல்லை என்ற அவனின் திறமையை….சஞ்சலமுறச்செய்யாத அவனின் நேர்த்தியை சொல்கிறது

அவன் வரவின் சுவடோ எங்குமே பதியப்படாமல், எந்த மனதிலும் அவனுக்கான அலைகள் எழாமல்…அவன் நிராகரிக்கப்படுவதை சொல்கிறது.

ஒரு கவிஞன் அங்கீகரிக்கப்படாமல் போனதை….புறக்கணிக்கப்பட்டதை சொல்லும்விதமாகவும் இருக்கிறது. 

நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இன்னும் எத்தனை வண்ணத்துப்பூச்சியை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறதோ இக்கவிதை.  இதை போல் பலபொருளை தன்னுள் தாங்கிக்கொண்டிருக்கும் இன்னொரு கவிதை.

நிசப்தம்
விரவிக்கிடக்கும்
இந்த
இரவின் விளிம்பில்
சொற்கள்
உன் விரல்களின் நுனியிலிருந்து
உதிரத் தொடங்குகின்றன
– வா. மணிகண்டன் (தொகுப்பு – கண்ணாடியில் நகரும் வெயில்)

இக்கவிதையை வாசித்துமுடித்த நொடியில் தோன்றியது இதுதான்…..இரவில் கிழிந்த மனதிற்கு எவ்வளவோ சமாதானம் சொல்லிமுடித்தப்பின்னரும் எழும் மனக்கூச்சலை வலிந்து அடக்கி அமைதியாக்க முற்பட்டு நிசப்தம் நிரம்பி வழிய, அக்கையறு நிலையில் நிதானமாக கண்களிலிருந்து கண்ணீர் உதிர்க்க துவங்குகின்றது. 

எந்த சமரசத்துக்கும் இடம்தராத
கலகக்காரனின் வேடத்தை அணிந்துகொண்டேன்
நினைவின் கிடங்கிலிருந்து
என் குழந்தையின் புன்னகைக் கீற்றினை
எடுத்துக்கொண்டேன்
இதுவரை எழுதப்படாத பாடல் ஒன்றை
எழுதி வைத்துக் கொண்டேன்
ஆறுதல் செய்யவியலாமல்
கிளைக்கும் அச்சத்தை
அடக்கிக்கொண்டேன்
இன்றிரவு நிகழவிருக்கும்
வெறுமையை எதிர்க்கவென
– முபாரக்

ஒரு மரணம் அல்லது பிரிவு நிகழ்ந்த பின் தொடரப்போகும் முதல் இரவில் வெறுமையின் கோரக் கைகள் எத்தனை கொடூரமாய் தாக்கிச் சிரிக்கும்.  அறிந்தே நிகழும் வெறுமையை போராடி தோற்கடிக்கவும் முடியுமா?  வெறுமையை வேறு எதை கொண்டு நிரப்பினாலும், எதிர்த்தாலும், வெறுத்தாலும் நம்மை குதறாமல் அது விடப்போவதென்னவோயில்லை.  எனினும் தோற்கடிக்கப்படவேண்டிய ஆயத்தங்களை செய்துக்கொண்டே இருக்கிறோம்.  அது நம்மை முட்டாளாக்கி இன்னும் கொடூரமாகத்தாக்கி திக்குமுக்காடவைக்கும்.

இங்கிருந்து நான் போன
பின்னும்
சம்பங்கிப்பூ பூக்கும்
வேருக்குள்
எவ்வளவு வைத்திருக்கிறதோ

வானம் நீருற்றும்வரை
வாடி
அதற்குப்பின்னும் துளிர்த்து
சம்பங்கிப்பூ பூக்கும்
– தேன்மொழி (தொகுப்பு : இசையில்லாத இலையில்லை)

ஒரு நிரந்தர நீங்குதல் உண்டாக்கும் வேதனை படாரென்று தாக்கி மெல்ல மனதினுள் பரவும். ஆரம்பத்தில் தாங்கிக்கொள்ளக்கூடியதாகவே தோன்றும்.  வேருக்குள் தங்கியிருக்கும் நீர் கொடுக்கும் தைரியத்தில் வாழ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் நாட்கள் நகரும்.  தேக்கிவைத்த நீர் வரண்ட நேரத்தில் மீண்டும் நீரூற்றிய கரத்திற்கு ஏங்கிவாடும். இயற்கை கருணையோடு நீர்வார்க்கலாம்…அதிகம் பொழிந்து வேரோடு சாய்த்து அழிக்கலாம்.  தேவைக்கேற்ப ஊற்றிய கரங்கள் போலாகாதெனினும் பிறகரங்கள் ஊற்றும் நீருண்டு மீண்டும் துளிர்க்கலாம்.  நீங்கிய கரத்தின் ‘பூக்கும்’ என்ற நம்பிக்கையிற்காகவும், நீங்கிய கரம் குற்றவுணர்விலிருந்து மீளவும் மீண்டும் பூப்பதாய் பூத்துக்காட்டலாம். 

நின்றதன்று இருந்ததன்று நேரிதன்று கூறிதன்று
பந்தமின்றி வீடுமின்றி பாவகங்கள் அற்றது
கந்தமன்று கேள்வியன்று கேடிலாத வானிலே
அந்தமின்றி நின்றதொன்றை எங்ஙனே உரைப்பதே
– சித்தர் சிவவாக்கியர்

எப்போதுமே நிலையாக நின்றதன்று, இருந்தன்று, எதிர்பட்டதன்று, கூறமுடியுமானதன்று, பந்தமற்று, வீடற்று, உருவமற்று, மணமற்று, கேள்வியற்று கேடில்லாத மனவானிலே முடிவற்று நிற்குமொன்றை எப்படி விளக்குவேன்.

Read Full Post »

திரும்பாத முத்தம்

 ————————————–

 இடப் படாத முத்தமொன்று

 இரவின் முடிவற்ற கரிய தோள்களில்

 வந்தமர்ந்தபோது

 பனிக் காலத்தின் ஆயிரம்

 உறைந்த கண்கள்

 அதை உற்றுப் பார்த்தன  

 

 இடப்படாத அந்த முத்தம்

 தன் கூச்சத்தின்

 இறகுகளைப் படபடவென

 அடித்துக்கொண்டது  

 

 திசை தப்பி வந்த

வேறொரு உலகத்தின் பறவையென

அன்பின் துயர வெளியின் மேல் அது

பறந்து பறந்து களைத்துப்போயிருந்தது  

 

 

அதற்கு

தான்

அந்த கணம் வந்தமர்ந்த

இடம் குறித்து

எந்த யோசனையுமில்லை

ஒரு தந்திரமில்லை

ஒரு கனவு இல்லை  

 

நடுங்கும் கைகளால்

நான் அதைப் பற்றிக்கொள்ள

விரும்பினேன்  

 

இடப்படாத அந்த முத்தம்

சட்டென திடுக்கிட்டு

எந்தக் கணமும் பறந்துபோய்விடலாம்  

 

யாராலும் பெற்றுக்கொள்ள முடியாத

காதலின் ஒரு தானியத்தை

தற்கு எப்படியாவது ஊட்டிவிட முயன்றேன் 

 

இடப்படாத முத்தங்கள்

எதையுமே பெற்றுக்கொள்வதில்லை

எவ்வளவு தூரம் பறந்தாலும்

அவற்றிற்குப் பசி எடுப்பதில்லை  

 

அவை

பிசாசுகளைப் போல காற்றில் வாழ்கின்றன

பனியைப்போல தனிமையில் நிகழ்கின்றன  

 

ஒரு வேளை

நீ அந்த முத்தத்தை

இட்டிருந்தால்

து முத்தமாகவே இல்லாமல்

போயிருக்கலாம் 

**************************************************************

உன்னை இழந்துவிட்டிருக்கும் இக்கணத்தில்  

—————————————————————————

உன்னை இழந்துவிட்டிருக்கும் இக்கணத்தில்

திரும்பத் திரும்ப தோன்றுகிறது

உன்னை இன்னும் சற்றே அடைந்திருக்கலாமென  

 

 

அடைந்திருந்த கணங்களிலோ

அதற்கு மேல் அடைய எதுவுமே இருந்திருக்கவில்லை  

 

 

இழப்பின் கணங்கள்

இந்தக் குளிர் இரவில்

தின்று வாழ்கின்றன

அடைதலின் கணங்களை  

– மனுஷ்ய புத்திரன் (தொகுப்பு : கடவுளுடன் பிரார்த்தித்தல்)

Read Full Post »

சற்று முன்பிருந்த அன்பும்

புகையிலை விடுக்கும் புகையும்

சிறுகச் சிறுக

விடுத்துச் செல்வது

சாம்பலை மட்டுமே

****

நதியோட்டத்தில்

மிதந்து செல்லும் கிளையில்

பாடிகொண்

டிருக்கின்றன

பூச்சிகள், இன்னமும்

****

பாறைக்கருகில் நிற்கும்

ஊசியிலை மரமும் தன்

ஞாபகங்களைக் கொண்டிருக்கிறது

போலும் ; ஓர்

ஆயிரம் வருடங்கள் கழித்தும்

அதன் கிளைகள்

தரையைநோக்கி

எப்படி வளைகின்றன பாரேன்.

****

திட்டவட்டமான விதிகள் இல்லை

ஜன்னலை எப்போது

திறந்து வைப்பது

எப்போது மூடுவது என்பது பற்றி

இதெல்லாம்,

நிலவோ பனியோ

தம் நிழல்களை எவ்விதம்

படியவைக்கின்றன என்பதைப்

பொறுத்தது

****

அவன்

வனத்தில் நுழையும்போது

புற்கள் நசுங்குவதில்லை

நீரில் இறங்குகையில்

சிற்றலையும் எழுவதில்லை

– ஜென் கவிதைகள்

  தமிழில் – யுவன் சந்திரசேகர்

Read Full Post »

உறவு அது அப்படித்தான்

 கவர்ந்திழுக்கும் அத்தர் நெடியடிக்கும்

 அணைத்துப் பிசையும் பூப்பூவாய்ப் பூக்கும்

 மனங்கள் இணைத்து ஆக்கங்கள் மலரும்

 காலடியில் அடிவானங்கள் குவியும்

 அதன்பின் எகிறிக் குதித்து இரத்தம் கசியும்

துருவின் துகள்கள் புற்றுப்போல் குவிந்து

பார்வைகள் திரியும்

கசப்பு மண்டி அடித்தொண்டை அடைத்து

மலக்கிடங்கில் விழுந்து சாகும்

மீண்டும் உயிர்த்தெழுந்து வாசம் பரப்பி

வளைய வரத் தொடங்கும்.

 

**************************************************

 

இந்த வாழ்க்கை

———————-

இந்த நிமிஷம் வரையிலும் இருந்ததுபோல்

இனி என் வாழ்க்கை இராது என

ஒரு கோடி முறை எனக்குள் சொல்லிக்கொள்கிறேன்

என்ன பயன்? 

என்னை நான் இகழ்ந்துக்கொண்டதைத் தவிர 

நான் என் காலை வைக்க வேண்டிய படி எது?

நான் குலுக்க வேண்டிய கை

நான் அணைக்க வேண்டிய தோள்

நான் படிக்க வேண்டிய நூல்

நான் பணியாற்ற வேண்டிய இடம்

ஒன்னும் எனக்கு தெரியவில்லை

இப்படி இருக்கிறது வாழ்க்கை

 

– சுந்தர ராமசாமி

Read Full Post »

உன்னையொருவன் தாக்குகையில்
உணர முடியும் பகையென்று
தன்னைத் தானே தாக்குமிவன்
தன்மைக்கிங்கே யாது பொருள்?

அடிமேலடிகள் விழுந்துவிட
அம்மிக்கல்லு நகருமெனில்
முடிவேயின்றி இவன் தன்னை
முட்டிக்கொள்வது சோகரசம்

இன்னொரு கன்னம் காட்டிடுக
இயேசு சொன்னது அமைதிக்கு
தன்னுயிர் சொட்ட தாக்குமிவன்
தருகிற தகவல் வறுமைக்கு

கண்ணடி பட்டால் காதலெனும்
கவிதைகளுண்டு ரசிப்பதற்கு
தண்டனைபோல கசையடித்து
தட்டுகளேந்தும் நிலையெதற்கு?

கதிரடி பட்டால் நெல் குவியும்
கணக்கு உள்ளது வயற்காட்டில்
முதலடி பட்டால் நஷ்டம்வரும்
மூத்தோர் சொல் மனக்கூட்டில்

தன்னைப்போல பிறவுயிரை
தரிசிக்கத்தானே வேண்டுமென
தன்னைத் தாக்கி உலகியலைத்
தண்டிக்கிறானோ?  புரியவில்லை

இன்னொரு ஜென்மம் வந்தாலும்
இப்படியே நாம் அடிபடுவோம்
என்பதைச் சொல்லித் தரத்தானோ
எதிரே வருகிறான்?  தெரியவில்லை

அன்னைதந்த பால்முழுதும்
அய்யோ வழியுது உடலெல்லாம்
முன்னம் யாரோ செய்தபிழை
முற்றிவிட்டது தெருவெல்லாம்

சலங்கை கட்டிய பாதங்கள்
சாட்டையடியில் குலுங்கிவிடும்
அலங்கோலத்தை வெளிக்காட்டும்
ஆவணமென்பது விளங்கிவிடும்

அடிபோல் உதவ மாட்டார்கள்
அண்ணன் தம்பி ஆனாலும்
தடந் தோள் துடிக்கும் இவனென்றும்
தரைமேல் நடக்கும் வேதாளம்

– யுகபாரதி (தொகுப்பு : தெருவாசகம்)

Read Full Post »

அவன் விடைபெற்றுக்கொள்ளும் நிமிடங்கள்
என் மனத்தில் துடிக்கத் தொடங்கவே
பரபரத்து ஓடினேன் பார்க்க
அப்போது அவன் சூன்யத்தில்
ஆனந்த ஓய்வுகொண்டிருந்தான்
புழு அவனைத் தின்றுக்கொண்டிருக்கும் நிலையிலும்
கண்களில் உயிரின் பிரகாசம் மின்னிற்று
ஆனந்த ஓய்வில் அவன் எழுதியிருந்த கவிதையை
– கடைசி வரிகளா அவை – பார்த்தேன்
மரக்கிளைக் குருவி ஒன்று அருவியைப் பார்ப்பது போல்.
மரணம் இறங்கும் விதத்தைப் பார்க்கிறான்
அதற்கு மேல் ஒரு மயிரிழை இல்லை
ஈரக்கசிவு இல்லை இன்னும் கொஞ்சம் எனும் இரங்கல் இல்லை
கடைசிப் புள்ளியில் தளம் கட்டும் துக்கம் இல்லை.

ஆற்றாமை என் தொண்டையை அடைக்க
இழை அறாது என் மனதில் ஓடும் மரணத்தை
மிக மோசமாக மீண்டும் வெறுத்தேன்
அப்போது அவனுடைய ஆனந்த ஓய்வு
அதன் பரிபூரணத்தை அடைந்து முடிந்திருந்தது
இறந்துகொண்டே திரும்பினேன்.

– சுந்தர ராமசாமி

Read Full Post »

மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்
தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்
புதிய காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய், புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமை காணோமெனப் பொருமுவாய், சீச்சீ!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்.
அங்ஙனே,
என்னிடத் தென்றும் மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்,
கண்ணினோர் கண்ணாய், காதின் காதாய்ப்
புலன்புலப் படுத்தும் புலனா யென்னை
உலக வுருளையில் ஒட்டுற வகுப்பாய்,
இன்பெலாந் தருவாய், இன்பத்து மயங்குவாய்,
இன்பமே நாடி யெண்ணிலாப் பிழை செய்வாய்,
இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்,
இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய்,
தன்னை யறியாய், சகத்தெலாந் தொளைப்பாய்,
தன்பின் னிற்குந் தனிப்பரம் பொருளைக்
காணவே வருந்துவாய், காணெனிற் காணாய்,
சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய்,
பொதுநிலை அறியாய், பொருளையுங் காணாய்,
மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
நின்னொடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்;
இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே
விரும்புவன்; நின்னை மேம்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன்; முத்தியுந் தேடுவேன்;
உன்விழிப் படாமல் என்விழிப் பட்ட
சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி
உன்றனக் கின்பம் ஓங்கிடச் செய்வேன்.

Read Full Post »

இவ்விடம்
அதிகம் பரிச்சயமில்லையெனினும்
இங்கிருந்து கிளம்புவதென்பது
வீண் துக்கத்தினை உண்டாக்குகிறது

நீ என்னைத்
தீவினையின் எல்லையில் விட்டு
முன்னகர்ந்து செல்வதை அனுசரித்து
தடைசெய்ய மனமின்றி விலகிச் செல்கிறேன்

இடங்களும் மனிதர்களும் உருவாக்கும்
இந்த உறவும் பிரிவும்
படர்வதற்குள் கிளம்புகிறேன்
என் ஆதிகாலக் குகை வாழ்விற்கு

எல்லோருக்கும் போலவே
இங்கிருந்து எடுத்துச் செல்ல
ஞாபகங்கள் உண்டு
விட்டுச்செல்லத்தான் எதுவுமில்லை
விட்டுச் செல்கிறேன்
புறக்கணிப்பின் வெறுமையை
நிராகரிக்கும் வலிமை என்னிடம் எப்போதுமிருந்ததில்லை
என்கிற சிறு குறிப்பை

– சல்மா (தொகுப்பு – ஒரு மாலையும் இன்னொரு மாலையும்)

Read Full Post »

Older Posts »