Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Dunya Mikhail’ Category

நன்றி :  எஸ்.ராமகிருஷ்ணன், http://www.dunyamikhail.com/, http://iraq.poetryinternationalweb.org/, http://www.wordswithoutborders.org/

தன்யா மிகேல் (Dunya Mikhail) பாக்தாத், இராக்கில் 1965ஆம் ஆண்டு பிறந்தவர்.  தற்போது மிச்சிகனில் வசித்து வருகிறார்.  இதுவரை அரபி மொழியில் நான்கு கவிதை தொகுப்புகளும், ஆங்கிலத்தில் இரண்டு தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார்.  2001ஆம் ஆண்டு  அவருக்கு ‘UN Human Rights Award for Freedom of writing’ வழங்கப்பட்டது.  நியூயார்க் பொது நூலகம் ‘போர் கடுமையாக உழைக்கிறது’  (“The War Works Hard”) என்ற நூலை 2005ஆம் ஆண்டின் சிறந்த 25 நூல்களில் ஒன்றாக தேர்ந்தெடுத்தது.  இவர் மேலும் பல விருதுகளை பெற்றுள்ளார்.    இரான் – இராக் போர்களின் அனுபவங்களை பேசுகிறது இவருடைய கவிதை தொகுப்புகள். போர்களின் கோர விளைவுகளை விவரிக்கும் கவிதைகள் அவை.  அவரின் சில கவிதைகள் இங்கு….

போர் கடுமையாக உழைக்கிறது


போர் எவ்வளவு மகத்தானது!
எத்தனை ஆவலும் திறமையும் மிக்கது!
விடியற்காலையில் ஒலியெழுப்பி
அவசர ஊர்தியை பல இடங்களுக்கு அனுப்பி வைக்கிறது
செத்த உடல்களை காற்றில் வீசுகிறது
காயமடைந்தோருக்கு ஸ்ட்ரெச்சர்களை உருட்டிச்செல்கிறது
தாய்மார்களின் கண்களில் மழையை வரவழைக்கிறது
பூமியை ஆழத் தோண்டுகிறது 
சிதைபாடுகளில் இருக்கும் பல பொருட்களை இடம் பெயர்க்கிறது
சிலர் வாழ்க்கையற்றும் புண்களோடும்
பலர் வாட்டமும் வலியுடனும் ……
இது குழந்தைகளின் மனதில் பல கேள்விகளை எழுப்புகிறது
வானத்தில் எரியாயுதங்களையும் வெடிகளையும் வெடிக்கச்செய்து
கடவுளுக்கு பொழுதுபோக்களிக்கிறது
கன்னிவெடிகளை நிலங்களில் விதைத்து
பொத்தல்களையும் கொப்பளங்களையும் அறுவடை செய்கிறது
குடும்பங்களை புலம்பெயரச்செய்கிறது
மதபோதகர்கள் சாத்தானை பழிக்கும்போது
அவர்கள் உடன் நிற்கிறது
(பாவம் சாத்தானோ, ஒற்றைக்கையோடு கொழுந்துவிட்டு எரியும் தீயில்)
இரவுபகலாக போர் தொடர்ந்து உழைக்கிறது
நீண்ட உரை நிகழ்த்த கொடுங்கோலனை ஊக்குவிக்கிறது
படைத்தலைவர்களுக்கு மெடல்களை அணிவித்து கௌரவிக்கிறது
கவிஞர்களுக்கு பலகருக்களை வித்திடுகிறது
செயற்கை கால்கள் செய்யும் தொழிர்ச்சாலைகளுக்கு உதவுகிறது
ஈக்களுக்கு உணவளிக்கிறது
வரலாற்றுப்புத்தகங்களின் பக்கங்களை கூட்டுகிறது
கொல்லப்பட்டவனுக்கும் கொல்பவனுக்குமிடையில் சமத்துவம் நிலைநாட்டுகிறது
காதலர்களுக்கு கடிதம் எழுத கற்றுத்தருகிறது
இளம் பெண்களை காத்திருக்க பழக்குகிறது
கட்டுரைகளாலும் படங்களாலும் செய்திதாள்களை நிறப்புகிறது
அனாதைகளுக்கு புதிய வீடுகளை உருவாக்கித்தருகிறது 
சவப்பெட்டி செய்பவர்களுக்கு புத்துணர்ச்சியூட்டுகிறது
சவக்குழி தோண்டுபவர்களுக்கு முதுகில் தட்டிக்கொடுக்கிறது
தலைவரின் முகத்தில் புன்னகையை வரைகிறது
போர் நிகரற்ற சிரத்தையோடு உழைக்கிறது
இருந்தும் எவருமே அதனை ஒரு வார்த்தை கூட புகழுவதில்லை.
** 

 

பை நிறைய எலும்புகள்

என்ன ஒரு பாக்கியம்
அவனுடைய எலும்புகளை கண்டுபிடித்துவிட்டாள்
மண்டையோடும் பையில் இருக்கிறது
எல்லா நடுங்கும் கைகளில் இருக்கும்
எல்லாப்பைகளைப்போலவே
அவள் கையிலும் பை இருக்கிறது
அவன் எலும்புகள், ஆயிரக்கணக்கான பிற எலும்புகள்
திரண்ட சுடுகாட்டில் இருப்பதுபோலவே
வேறு எந்த மண்டையோடும் போலல்லாத அவன் மண்டையோடு
இரண்டு கண்கள், அல்லது
அவனுக்கான கதையை சொல்லும் சங்கீதத்தை கேட்டு மகிழ்ந்த துளைகள்
எப்போதுமே சுத்த காற்றை அறிந்திராத மூக்கு
அவன் அமைதியாய் முத்தம் கொடுத்த போது இருந்ததைபோல் அல்லாது
பிளந்த நிலத்தை போன்ற வாய்
சத்தங்களுடனும் மண்டயோட்டுடனும்  எலும்புகளுடனும் புழுதிகளுடனும்
பல கேள்விகளை தோண்டிக்கொண்டிருக்கும் இவ்விடமல்ல. 
இருள் விளையாடும் இம்மௌனங்களில்
இவ்விடத்தில் இப்படி ஒரு மரணத்தில் மரணிப்பதற்கு என்ன அர்த்தம்?
இந்நெடுங்குழிகளில் பாசத்துக்குரியவர்களை சந்திப்பதற்கு என்ன அர்த்தம்?
பிறப்பின் தருவாயில் தாய் கொடுத்து எலும்புகளை
மரணச்சந்தர்ப்பத்தில் அவளுக்கு கைநிறைய திருப்பி கொடுக்கவா?
உங்கள் உயிரை எடுக்கும்போது சர்வாதிகாரி ரசீது தரவில்லை என்பற்காக
இறப்பு பிறப்பு சான்றிதழ்கள் இல்லாமல் பிரிந்துபோகவா?
சர்வாதிகாரிக்கும் இதயமுண்டு
எப்போதும் வெடிக்காத பலூன் போல
மண்டையோடும் உண்டு
பிறவற்றை போலல்லாது மிகப்பெரிய மண்டையோடு
அது தாய்நாட்டிற்கு ஈடாக்க
ஒரு மரணத்தை பல மரணங்களால் பெருக்கி
அக்கணக்கை அதுவே தீர்த்து வைத்தது
சர்வாதிகாரி ஒரு மிக உயர்ந்த துயரத்தின் இயக்குனர்
அவருக்கு பார்வையாளரும் உண்டு
ஒரு பார்வையாளர் கைதட்டுவார்
எலும்புகள் உரசி ஒலியெழுப்பும் படி
பையிலிருக்கும் எலும்புகள்….
தங்களுடையது கிடைக்காமல் வாடும்
பக்கத்து வீட்டுக்காரர்களை போலல்லாமல்
இறுதியாக
அவள் கைகளில்
நிரம்பிய பை
 **
நான் அவசரத்தில் இருந்தேன்

 

நான் நேற்று என் நாட்டை தொலைத்துவிட்டேன்.
அவசரத்தில் இருந்ததால்
நினைவற்ற மரத்திலிருந்து முறிந்த கிளையைப்போல
எப்போது என்னிடமிருந்து நழுவி விழுந்தது என்பதனை கவனிக்கவில்லை
தயவுகூர்ந்து யாராவது இப்பக்கம் நகர்ந்து செல்லும்போது காலில் இடறினால்
ஒருவேலை வான் பார்த்த திறந்து கிடக்கும் பெட்டியிலோ
அல்லது திறந்த காயத்தை போல் ஒரு பாறையில் செதுக்கப்பட்டோ
அல்லது அகதிகளின் போர்வைக்குள் சுருட்டப்பட்டோ
அல்லது அழிக்கப்படும் பரிசுபெறாத லாட்டரி சீட்டை போலவோ
அல்லது உதவியற்று மறக்கப்பட்ட உத்தரிகத்திலோ
அல்லது சிறுவர்களின் கேள்விகளைப்போல வேகமாக இலக்கற்று முன்னகர்ந்துக்கொண்டோ
அல்லது போர் புகையில் மேலெழுந்துக்கொண்டோ
அல்லது தலைப்பாதுகையில் மண்ணில் உருண்டுகொண்டோ
அல்லது அலிபாபா ஜாடியில் திருடப்பட்டோ
அல்லது சிறைக்கைதிகளை ஊக்கப்படுத்தி தப்பிக்கவைத்த
காவலதிகாரியின் சீருடையில் மாறுவேடம் அணிந்து மறைந்துக்கொண்டோ
அல்லது சிரிக்க முயற்சிக்கும் பெண்ணின் மனதில் ஒடுங்கிக்கொண்டோ
அல்லது அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்களின் கனவுகளைப்போல சிதறிக்கிடக்கிறதா.
யாருக்காவது காலில் இடறுமெனில்
தயவுசெய்து என்னிடம் திரும்ப கொடுத்துவிடுங்கள்
தயவுசெய்து திரும்ப கொடுத்து விடுங்கள் சார்
தயவுசெய்து திரும்ப கொடுத்து விடுங்கள் மேடம்
அது என்னுடைய நாடு
நேற்று அதை தொலைத்த போது
நான் அவசரத்தில் இருந்தேன்

 
**************************
 
ஒரு மந்திரக்கோல் பற்றி
கனவு காண்கிறேன்
அது என் முத்தங்களை
நட்சத்திரங்களாக மாற்றுகிறது
இரவில் நீ அதை பார்த்து
தெரிந்து கொள்ளலாம்
அவை ஏராளமானவையென்று

 
***********************

ஒரு கதவை வரைந்து
அதன்பின்
அமர்ந்துக்கொண்டேன்
நீ வந்த உடனே
திறப்பதற்கு தயாராய்

இக்கவிதைகள் உயிர்மை ஆகஸ்ட் 2009 இதழில் வெளியாகியுள்ளது.

Read Full Post »