தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாக விளையாட்டுக்களைக் கண்டு இரசிப்பதை விட விளையாட்டு அரங்கத்திற்குச் சென்று, மக்களுடன் ஆரவாரித்து பெரும் சப்தங்களுக்கிடையில் ஒரு ஆட்டத்தை காண்பதென்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது. ஆனால் இரானில் விளையாட்டு அரங்கத்திற்குச் சென்று போட்டிகளைக் காண பெண்களுக்கு அனுமதி இல்லை.
2005 உலகக்கோப்பைக்குத் தேர்வாகப்போகும் அணியை அறியும் போட்டி இரான் மற்றும் பெகரைன் நாடுகளுக்கிடையே நடக்கிறது.அந்த ஆட்டத்தைக் காண சில பெண்கள் ஆண்களை போன்று உடையணிந்து தேசிய கொடியை முகத்தில் வரைந்துக்கொண்டு ஆண் ரசிகர்கள் கூட்டமாக செல்லும் வாகனங்களில் பயணிக்கின்றனர். சில ஆண்கள் இவர்களை பெண்கள் என்று கண்டுபிடித்தும் எதுவும் சொல்லாமல் விட்டுவிடுகின்றனர். அதிக கட்டணத்தில் கருப்பில் டிக்கட் எடுத்து நுழைந்தும் சில பெண்கள் பிடிபட்டுவிடுகின்றனர். அவ்வாறு பிடிக்கப்பட்ட ஆறு பெண்களை கொண்டு கதையை இளமைத் துள்ளளோடு சொல்லி இருக்கிறார் Jafar Panahi.
பிடிபட்டுவிட்டோமே என்ற கவலை சிறிதும் இல்லாது ஆட்டம் என்னவாகும், யார் வெல்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பிலும், அவர்களை பிடித்து வைத்திருக்கும் காவலதிகாரிகளை கிண்டல் செய்துக்கொண்டும், ஒவ்வொருவராய் வந்து சேரும் பிடிபட்ட பெண்களை வரவேற்றபடியும், அரங்கத்தில் ஓசை எழும்போதெல்லாம் அங்கிருக்கும் காவலதிகாரியை என்னவானது என்று பார்த்து கூறும்படி ஏவியும், அவர்களை அதட்டும் அதிகாரியிடம் திரும்பத்திரும்ப வாயடித்துக்கொண்டும் பரபரப்பான ஆரவாரத்தோடு நகர்கிறது படம்.
பெண்களுக்கென்று தனி கழிப்பறை இல்லாத இடத்தில், பிடிபட்ட பெண்ணொருத்தி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று சொல்ல அவளை யார் கண்ணிலும் படாதவாறு அழைத்துச்செல்ல ஒரு காவலதிகாரி படும் அவஸ்தைகளும், ஆண்கள் கழிப்பறையில் அவன் மெனக்கெடல்களும், அதனால் அவன் சந்திக்க நேரும் கடுப்புகளும் வசவுகளும் பின் அவள் கழிப்பறையிலிருந்து தப்பித்து சென்றுவிட்ட ஏமாற்றத்தையும் நகைச்சுவையோடு அற்புதமாக காட்சியமைக்கப்பட்டிருக்கிறது.
காவலதிகாரிகளாக நடித்திருந்த எல்லோரும் வெகு சிறப்பாகச் செய்திருக்கின்றனர். அங்கு சென்று அவர்கள் உயிரை எடுப்பதை விட வீட்டிலிருந்தே பார்த்து தொலைத்திருக்கலாமே என்ற எரிச்சலும் இந்தக்கூட்டத்தில் வந்து இப்படி அகப்பட்டு கொண்டுவிட்டனரே என்ற கரிசனமும் கலந்த உணர்வை அழகாக வெளிக்காட்டி இருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அவர்களுக்கென கமென்ட்ரி சொல்லவும் ஒருவன் ஒப்புக்கொள்கிறான். அவர்களின் தலைமை அதிகாரியின் ஆனைக்கு உட்பட்டே இவர்களை பிடித்து வைத்திருக்கின்றனர் என்பதும் அவர்களுக்கு அதில் அத்தனை ஈடுபாடில்லை என்பதும் அவர்கள் செய்கையிலிருந்து விளங்குகிறது.
தன் பெண் அங்கு சென்றிருக்கக்கூடும் என்று தேடிக்கொண்டு வரும் ஒரு பெரியவர் பெண்கள் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சென்று காவலதிகாரியிடம் விசாரிப்பது பரிதாபமாக இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணாக பார்வையிடும் அவர் தன் பெண்ணின் தோழியை அடையாளம் கண்டுக்கொண்டு இதென்ன வேஷம் இதற்கு தானா உங்களை படிக்க அனுப்புகிறோம் என்று அவளை அடிக்கச்செல்கிறார். காவலதிகாரிகள் அவரை தடுத்து சமாதானம் கூறி அனுப்பும் காட்சியும் சிறப்பானது.
ஏன் மற்ற நாட்டு பெண்கள் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர், இரானிய பெண்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதில்லை என்று ஒரு பெண் வினவ கூட்டமாக ஆட்டத்தை காணவரும் ஆண்கள் அவர்களை கேலி செய்ய கூடுமென்றும், ஏராளமான கெட்ட வார்த்தைகள் கேட்க நேரிடும் என்றும் அவர்களின் பாதுகாப்பு கருதியே அனுமதிக்கப்படுவதில்லை என்றும் ஒரு காவலதிகாரி சொல்கிறான். பிற நாட்டு பெண்களுக்கு அவர்கள் மொழி தெரியாததால் மோசமான வசவுகளும் வார்த்தைகளும் அவர்களுக்கு புரியாது என்பதால் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்கிறான். கழிப்பறைக்கு அழைத்துச்சென்ற காவலன் அப்பெண்ணின் கண்களை மூடிக்கொள்ள சொல்கிறான் கழிப்பறை சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் மோசமான வார்த்தைகளை அவள் படிக்கக்கூடாதென்பதற்காக. இப்படி போர்த்தி போர்த்தி பாதுக்காப்பாக வளர்க்கப்படும் பெண்களின் மனநிலை எவ்வாறாக இருக்கும்?
விளையாட்டு முடிய சிறிது நேரம் இருக்கும்போதே உயரதிகாரி அங்கு வந்து அவர்களை தலைமைச்செயலகத்துக்கு அழைத்து வரும்படி கூற எல்லோரும் சிற்றுந்தில் ஏற்றப்படுகின்றனர். அத்தனை நேரம் கேலியும் கிண்டலுமாக இருந்த பெண்கள் சற்று இறுக்கம் கொள்வதும், அவர்களுடன் ஏற்றப்படும் மற்ற பையனின் உரையாடல்களும், அதிகாரியின் உடையணிந்து ஆண் வேடம் இட்டு வந்த பெண் தனக்கு மட்டும் தண்டனை கூடுதலாக இருக்கும் என்று வருத்தம் கொள்ளுதலும், வழியில் தங்கள் வீடு வந்து விட்டதாகவும் தான் இங்கு இறக்கி நடந்து சென்று விடுவேன் என்று தன்னை இறக்கிவிடும் படியாக கோறும் பெண்ணின் அப்பாவித்தனமும், அவளை கேலி செய்யும் மற்ற பெண்களின் உரையாடல்களும், வண்டியில் அவர்கள் கமென்ட்ரி கேட்க ஏண்டனாவை பிடித்துக்கொண்டே வரும் காவலதிகாரியின் கரிசனமும், ஆட்டத்தின் இறுதி நேர பதட்டமும், இறந்து போன தனது நண்பனின் நினைவிற்காகவே முதல் முறையாக தான் அரங்கத்திற்கு வர முயற்சித்தகாக கூறும் பெண்ணின் நெகிழ்ச்சியும் வெகு சிறப்பாக அமைந்திருக்கின்றன.
எந்த ஒரு பெண்ணின் பெயரும் சொல்லப்படவில்லை இப்படத்தில். புகைபிடிப்பதாக வரும் பெண்ணின் அடாவடித்தனமான கிண்டலும், சுட்டிதனமும், மிகுந்த பேச்சுக்களும் அபாரம். இறுதியில் சுபமாகவே முடிக்கப்பட்ட இப்படம் நமது கல்லூரிகால கலாட்டாக்களையும் சேட்டைகளையும் நினைவூட்டத் தவறவில்லை.