Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Booker Novels’ Category

அன்றாட அலுவல்கள் நெறிக்கும் அவசரச் சூழல்களில் உழன்றுக் கொண்டிருக்கும் பலருக்கும் எதிர்கொள்ள வேண்டிய பணிகளில் மட்டுமே கவனமிருக்க கடந்தவைகள் கடந்தவையாகவே நிலைத்துவிடலாம். ஓடிக்கடக்கும் காலங்களில் தற்செயலாக சில தினங்கள் சிறு அவகாசம் கிடைத்தால் தன் வாழ்நாளில் காலம் ஆசிர்வதித்த அல்லது நிராகரித்த பல கணங்கள் நினைவிலிருந்து துளிர்க்கும். அத்தகைய நினைவுகளில் மூழ்கி புதிய பரிமாணங்களோடு தொடரும் நினைவோட்டத்தில் எல்லாவித உணர்வுகளும் கலந்திருக்கக்கூடும். ஓய்விற்கு பிறகு தொடரவேண்டிய ஓட்டத்தில் இவ்வுணர்வுகள் தடங்கள்களாக மாறும் அபாயங்களும் உண்டு.

கஸோ இஷிகுரோ எழுதிய The Remains of the day முதிர்ந்த வயதில் அபூர்வமாக தனக்கு கிடைத்த ஆறு நாட்கள் ஓய்வில் அவர் மேற்கொள்ளும் பயணமும், பயணத்தினூடாக அவர் சந்திக்கும் இடங்களும், மனிதர்களும், அனுபவங்களும் கொண்டும் நகரும் நிகழினூடே கடந்தவைகளும் கதையாக பகிரப்பட்டிருக்கின்றன. வேலை வேலை என்று தன் காலம் அனைத்தையும் யாரோ ஒருவருக்காக உழைத்து கழித்துவிட்ட பிறகும் எஜமானருக்கு விஸ்வாசமாக இருந்ததிற்காக பெருமிதம் கொள்ளும் அந்த முதியவரின் மனநிலையை வாசிக்க சற்று ஆயாசமாகவே இருந்தது. இன்றைய சூழலுக்கு இவையெல்லாம் அந்நியபட்டே நிற்கின்றன.

1989 ஆண்டு புக்கர் பரிசை வென்ற இந்நாவல் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. புத்தகத்தை விட திரைக்கதை இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்றே தோன்றுகின்றது. சொல்லப்படாதவைகளை எழுத்தின் வாயிலாக உணர்ந்துக்கொள்வதைவிட திரையின் வாயிலாக உணர்ந்துகொள்வது இன்னும் அதிக அழுத்தத்தை தரக்கூடும். இப்புத்தகம் அவ்வளவாக ஈர்க்கவில்லை என்றபோதிலும் வாசிப்பை பாதியில் நிறுத்திவிடத் தோன்றவில்லை. ‘கைட் ரன்னர்’ புத்தகத்தின் பக்கக்குறி ஆரம்ப சில பக்கங்களில் இருந்ததை பார்த்த தோழி இதை இன்னும் வாசிக்கவில்லையா என்றதற்கு படம் பார்த்துவிட்டதால் வாசிக்கப்போவதில்லையென்றேன். இது தவறான அனுகுமுறை என்றும் முதலில் புத்தகத்தை வாசித்துவிட்டு பிறகு அதை திரைப்படமாகவும் பார்ப்பது நல்ல அனுபவமாக இருக்குமென்றாள். இம்முறை இதை நடைமுறைபடுத்திப் பார்க்கவேண்டும்.

இங்கிலாந்தில் போர் சூழலுக்கு முந்தைய காலகட்டங்களில் நிகழும் இக்கதை பல வித அரசியல் கூறுகளோடும், தனிமனித நேர்மை, விஸ்வாசம், கடமையுணர்ச்சி என பலவற்றை தொட்டுச்செல்வதோடு, எது தன்மானம் என்பதையும் அதன் வரையரைகளையும் கால மாற்றத்திற்கும் மனித குணங்களுக்குமேற்ப அது வித்தியாசப்படுவதையும் கதைசொல்லியின் வாயிலாக விரிவாக பேசுகின்றது. பல ஆண்டுகள் கழித்து தன்னுடன் வேலை செய்த பெண்மணியை பார்க்க பயணிக்கும் ஆறு நாட்களை ஒவ்வொரு நாளையும் ஒரு பகுதியாக காலை, மதியம், மாலை என விவரித்து கொண்டே வந்து அவளை சந்தித்த ஐந்தாம் நாளை மட்டும் விழுங்கிவிட்ட போக்கு அருமையாக இருந்தது. நான்காம் நாளுக்கு பிறகு ஆறாவது நாளில் அவளுடனான சந்திப்பும் உரையாடலும் ஒரு நினைவாகவே தொடரும்போது உணரப்படாதவைகளும் உணர்த்தப்படாதவைகளும் என்றென்றைக்கும் அவ்வாறே நீடித்துவிடுவதே சில சந்தர்ப்பங்களில் நல்லதென்றே தோன்றியது. காலம் கடந்து அறியப்படும்போது ‘after all, there’s no turning back the clock now’ என்ற சப்பைக்கட்டை மட்டுமே ஆறுதலுக்காக சொல்லிக்கொள்ள முடியும்.

2005ல் வெளியான இவரது ஆறவது நாவலான ‘Never Let me Go’ ‘The Remains of the day’ விட அதிகமாகவே பிடித்திருந்தது. கிளோனிங்கால் உருவான மனித உயிர்களை பற்றிய அறிவியல் புனைவு இது. எந்த ஒரு அறிவியல் விவரங்களுக்குள் நுழையாமலும் அதே சமயம் அவர்கள் சந்திக்க நேரிடும் அபாயங்களை நுட்பமாக விளக்கியும் அதனூடே முக்கோணக்காதல் கதையை அறிவியலோடு கலந்து அளித்திருக்கின்றார் கஸோ இஷிகுரோ. இதிலும் கதை சொல்லியான ஒரு க்ளோனின் வாயிலாக அவர்களின் சிறுவயது முதல் சராசரி குழந்தைகள் போல் அவர்கள் வளர்க்கப்படும் விதத்திலிருந்து துவங்கி படிப்படியாக வளர்ந்து இறுதியில் தங்கள் உறுப்புகளை தானம் செய்து மடிகின்றவரை அமைதியான நதியைப்போல நகர்கின்றது இக்கதை.

இவர்களின் உருவாக்கம் பற்றியோ அல்லது எப்படி மரணிக்கின்றார்கள் என்பது பற்றியோ பேசாமல் இவர்களின் இடைப்பட்ட காலத்தை மட்டுமே பேசியிருக்கின்றது. இவர்களின் மரணத்திற்கு கூட death என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. ‘complete’ என்றே சொல்லியிருக்கின்றார். அதே போல் ‘deferral’, ‘carer’, ‘possible’ போன்ற வார்த்தைகளும் கூட வேறு பரிமாணங்கள் கொண்டவை. அவர்களின் உறுப்புகளை தானம் கொடுப்பதற்காகவே அவர்கள் உருவாக்கப் பட்டிருக்கின்றார்கள், சிலருக்கு ஒன்றிரண்டு தானங்கள் வரையே தாக்குப்பிடிக்க முடியும், சிலருக்கு நான்கு வரை கூட கொடுக்க இயலும், அவர்களால் உடல் உறவு கொள்ளமுடியும் ஆனால் பிள்ளைகளை பெற முடியாது போன்ற தகவல்கள் அவர்களின் பருவத்திற்கேற்ப படிப்படியாக அவர்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. மேலும் சில செய்திகள் வதந்திகளாகவும், சில கற்பனைகளாகவும் அவர்களிடம் உலாவுகின்றன. கதையின் முற்பகுதி விளையாட்டாக நகர பிற்பகுதி கதையின் ஆரம்பத்தில் நிலவிய பல புதிர்களுக்கு விடைகளாகமாறி அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இவ்விறு கதைகளிலுமே பல ஆண்டுகள் கடந்த பிறகு நடந்த சம்பவங்களை கதை சொல்லி திரும்பிப்பார்ப்பதாகவே அமைத்திருக்கின்றார் இஷிகுரோ. கதைசொல்லியின் நினைவிலிருந்து சொல்லப்படும் சம்பவங்கள் எவ்வித வரையரைகளுக்கு உட்படாமலும் அதே சமயம் எல்லாவித உணர்வுகளுக்கு உட்பட்டும் எழுதுவது விருப்பமானதாக இருக்கின்றதென்கின்றார். Remains of the day கதாபாத்திரத்தின் நினைவுகள் சில முக்கிய நிகழ்வுகளை, தவறுகளை, தவறவிட்ட தருணங்களை, குற்ற உணர்வுகளை நினைவு கூறுகின்றது. ஆனால் Never let me go கதாபாத்திரத்தின் நினைவுக்கூறல் மிகுந்த கருணைமிக்கவை. அந்நினைவுகள் அவளுக்கு ஒரு ஆறுதளாக நிம்மதியாக தேற்றுதலாக அமைகின்றது. தனக்கு நெருக்கமாக தன்னுடனிருந்தவர்கள் ஒவ்வொருவராக மடிந்துபோக தன்முன் இருக்கும் வெறுமை உலகில் அவளுக்கு துணையாக இருப்பது அந்நினைவுகளே என்கிறார்.

Never let me go வின் கதை களம் மிக நுட்பமானதும் முக்கியமானதும் கூட. ஆனால் அவை மிக மேலோட்டமாகவே கையாளப்பட்டிருக்கின்றது. கதைசொல்லியின் வாயிலாக விரியும் இக்கதை அவள் அறிந்த தெரிந்துக்கொண்ட சிறு பகுதியை மட்டுமே கதையாக உருவாக்கியிருக்கின்றது. இவர்களை உருவாக்கும் அமைப்பை பற்றியோ அவற்றின் செய்லபாட்டு முறைகளோ பேசப்படவில்லை. உறுப்புகளின் தானத்தை பற்றி மீண்டும் மீண்டும் பேசப்பட்டாலும் அவைகளின் outline மட்டுமே கூறப்படுகின்றது. சிகிச்சைகளும் அதில் ஏற்படும் சிக்கல்களும் ஓரிரு வரிகளில் அடங்கிவிடுகின்றன.

‘Times’ தேர்வு செய்த நூறு சிறந்த நாவல்களில் ‘Never let me go’ இடம்பெற்றுள்ளது. 2005 புக்கர் தேர்வு பட்டியலில் இந்நாவலும் இருந்தது. ஆனால் தற்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் John Banville ‘The Sea’ நாவல் புக்கர் பரிசை வென்றது. கடந்த ஆண்டு ‘Never Let me go’ திரைப்படமாகவும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இஷிகுரோவின் பிற படைப்புகள் A Pale view of hills, An artist of the floating world, The Unconsoled & When we were orphans. 2000 ஆம் ஆண்டு புக்கர் பரிசு தேர்வு பட்டியலில் When we were orphans இருந்தது. இஷிகுரோ இரு படங்களுக்கு திரைகதையும் எழுதியிருக்கின்றார் – The Saddest Music in the World & The White Countess. ஆறு நாவல்களுக்கு பிறகு 2009ல் Nocturnes சிறுகதை தொகுப்பு வெளியானது. இதிலுள்ள ஐந்து சிறுகதைகளுமே இசையுடனும் இரவுடனும் தொடர்புடையது.

நன்றி : 361˚ சிற்றிதழ்

Read Full Post »

Too Much Happiness  என்ற தலைப்பிற்காகவே வாங்கிய சிறுகதை தொகுப்பு இது.  இத்தொகுப்பை வாசித்த பிறகுதான் ஆலிஸ் மண்ரோ பற்றிய தகவல்களை இணையத்தில் தேடி படிக்கக்தூண்டியது.  கனடிய சிறுகதை எழுத்தாளரான இவர் 2009ஆம் ஆண்டு தனது இலக்கிய பணிக்காக புக்கர் பரிசையும் மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார்.  1968ஆம் ஆண்டு இவரது முதல் சிறுகதை தொகுப்பான Dance of the happy shades வெளியானது. 

Too Much Happiness தொகுப்பில் உள்ள பத்து சிறுகதைகளுமே வித்தியாசமானவை.  எங்கோ ஓரிடத்தில் தொடங்கி முன்னும் பின்னும் நகர்ந்து எதிர்பாராவிதத்தில் சட்டென முடிவடைந்துவிடுகின்றன.  ஆனால் பெரும்பாலும் எல்லா கதைகளிலுமே மரணம் தவராமல் நிகழ்ந்துவிடுகின்றது.  மேலும் நாம் கதையின் முக்கிய நிகழ்வாக கருதும் விஷயங்கள் ஓரிரு வரிகளில் அல்லது ஒரு பத்தியில் நின்றுவிடுகின்றன.  உதாரணத்திற்கு மூன்று பிள்ளைகளின் கொலை இப்படி விவரிக்கப்படுகின்றது.

Dimitri still in his crib, lying sideways. Barbara Ann on the floor beside her bed, as if she’d got out or been pulled out. Sasha by the kitchen door—he had tried to get away. He was the only one with bruises on his throat. The pillow had done for the others.

அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவத்தை மூன்றே எளிமையான வரிகளில் எழுதி நம்மை உரையச்செய்கின்றார்.  இவ்வரிகளுக்கு முன்னரும் பின்னரும் இச்சம்பவத்தை பற்றிய எந்த விவரனைகளும் இல்லை.  சில கதைகளின் கடைசி வரியும் கூட அவ்வாறே எழுதியிருக்கின்றார்.  காதல், நட்பு, துரோகம், பயம், அன்பு போன்ற உணர்வுகளைக்கொண்ட பொதுவான கதைகலம் தான் என்றாலும் சொல்லப்படும் விதம் வித்தியாசமானவை. 

இத்தொகுப்பில் உள்ள கதைகளில் வெகுவாக கவர்ந்தவை Dimension, Too Much Happiness, Wenlock Edge & Face.  இவரின் சில சிறுகதைகள் The New Yorker இதழில் வாசிக்க கிடைக்கின்றன. 

இத்தொகுப்பின் கடைசி கதையான Too Much Happiness ரஷ்ய கணித மேதையும் நாவலாசிரியருமான சோபியாவை பற்றியது (Sofia Vasilyevna Kovalevskaya) சற்றே நீளமான கதை என்றாலும் மிக முக்கியமான சிறுகதை.  சோபியாவை பற்றிய புத்தமும் (‘Beyond the Limit : The Dream of Sofya Kovalevskaya – 2002”) படமும் (Sofya Kovalevskaya – 1985) கூட வெளியாகியுள்ளன.  மேலும் சோபியாவை பற்றி அறிந்துக்கொள்ள Little Sparrow : A Potrait of Sophia Kovalesvky – 1983 புத்தகத்தை இத்தொகுப்பின் நன்றியுரையில் ஆலிஸ் மண்ரோ பரிந்துரைத்திருக்கின்றார். 

2006ஆம் ஆண்டில் வெளியான “The View from the castle rock” தொகுப்பை தனது இறுதி படைப்பாக அறிவித்திருந்தார்.  மூன்றாண்டுகள் கழித்து 2009ஆம் ஆண்டில் Too much happiness வெளியானது.  இவரது “The Bear Came Over the Mountain” சிறுகதை “Away from her” என்ற திரைப்படமாக  வெளியாகி பல விருதுகளை வென்றது.  இக்கதையும் New Yorkerல் வாசிக்க கிடைக்கின்றது.

பிகு : Too much happiness முழு தொகுப்பை இங்கும் வாசிக்கலாம்.

Read Full Post »

மூன்றாண்டுகளாக புத்தக அலமாரியில் உறங்கிக்கொண்டிருந்த புத்தகத்தை எதேச்சயாய் எடுத்து தூசிதட்டி வாசிக்க துவங்க, சில பக்கங்கள் வாசித்ததுமே ஏன் இத்தனை நாளாக இப்புத்தகத்தை படிக்காமல் விட்டுவிட்டோமென தோன்றும் அளவிற்கு அத்தனை அருமையாக சொல்லப்பட்டிருக்கின்றது இக்கதை. பசிபிக் கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து தப்பித்த ஒரு பதினாறு வயது சிறுவனின் கதையிது.

The Map of Love நாவலில் ஒரு வரி ‘We always know how the story ends. What we don’t know is what happens along the way’ என்று வரும். அப்படிதான் இக்கதையும் பதினாறு வயதில் நடந்த சம்பவத்தை அவர் நாற்பது வயது கடந்த பிறகு விவரிப்பதாக அமைந்திருப்பதால் நிச்சயம் கடலிலிருந்து தப்பித்து கரையேறிவிடுவார் எனத்தெரிந்தும் எவ்வித சாத்தியக்கூறும் இல்லாமல் போகும்போது இது எப்படி நிகழ்ந்தேறியதென அறிந்துக்கொள்ளும் ஆவல் இக்கதையை தொடர்ந்து வாசிக்க தூண்டுதலாய் அமைந்திருக்கின்றது.

முதல் பாகத்தில் இழையோடும் நகைச்சுவை சமயங்களில் வாய்விட்டுச் சிரிக்கச்செய்தது. தனது பெயரான Piscineனை Pissing என்று உச்சரிக்கப்படுவதாலான சங்கடங்களையும், சரியாக உச்சரிக்கப்படாததால் தன் பெயரை சுருக்கி Pi என்று வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தையும், அதற்கு பிறகு மூன்று புள்ளி ஒன்று நான்கு என்று அழைக்கப்படுவதால் கிடைக்கும் நிம்மதியையும் யதார்த்த நகைச்சுவையோடு கலந்து சொல்லப்பட்டிருக்கின்றது.

உதாரணத்திற்கு ‘வார்த்தையின் ஒலி மறைந்துப்போகும் ஆனால் அது உண்டாக்கிய வலி ஆவியாகிப்போனப்பின்னும் மூத்திரத்தின் வாடை தங்கிவிடுவது போல் தங்கிவிடும்’ என்ற வரியை வாசிக்கும்போது சிரிப்பும் பரிதாபமும் ஒருமித்து தோன்றியது. பையின் தந்தை விலங்கியல் பூங்காவின் நிர்வாகியதலால் விலங்குகளை பற்றி பலவும் தெரிந்துக்கொள்கிறார். பூங்காவை நிர்வகிக்கும் முறைகளும் விலங்குகளின் பழக்கவழக்கங்களும், அவைகளை திருப்தியோடு வைத்துக் கொள்ளவேண்டிய அவசியங்களும் மிகுந்த அக்கறையோடு விரிவாக பகிரப்பட்டுள்ளது.

விலங்குகளை சுதந்திரமாக காடுகளில் சுற்றித்திரியவிடாது கூண்டுகளில் அடைத்து வைப்பது அவைகளை துன்புறுத்துதலாகும் என்ற பொதுவான கருத்திற்கு மாற்று கருத்தை வளியுறுத்துகின்றார். விலங்குகள் தங்கள் பழக்கங்களின் அடிப்படையிலேயே வாழ்கின்றன எனவும் அதன் தேவைகள் எல்லாம் எவ்விடத்தில் பூர்த்தியாகின்றனவோ, அதுவே எவ்விடத்தில் நீடித்து தினந்தோறும் கிடைக்கின்றனவோ அவ்விடத்தில் அவை திருப்தியோடு இருக்கும் என்றும் விளக்கியுள்ளார்.

இரண்டாம் பாகம் முழுவதும் பசிபிக் கடலும் கடல்வாழ் உயிரினங்களையும் கொண்டு சிறிதும் தேக்கமின்றி வெகு சிறப்பாக நகர்த்தியிருக்கின்றார். கடலின் பிரம்மாண்டத்தை இரவு பகல் மாற்றங்களுக்கேற்ப விவரித்திருக்கும் விதம் பயத்தையும் வியப்பையும் ஒருமித்து ஏற்படுத்துகின்றது. தங்கள் மேற்கொண்ட கடல் பயணத்தில் கப்பல் மூழ்கிவிட தான் மட்டும் படகில் நான்கு விலங்குகளுடன் விடப்பட்ட நிலையில் தன்னை காப்பாற்றிக்கொள்ள 227 நாட்கள் கடலில் அச்சிறுவன் மேற்கொள்ளும் வெவ்வேறு விதமான முயற்சிகள் தாம் இரண்டாம் பாகம் முழுவதும். படகு பயணத்தின் முதல் வாரத்திலேயே மூன்று விலங்குகள் வலியது வெல்லுமென்ற முறையில் ஒவ்வொன்றாக கொல்லப்படுகின்றன. பின் மீதமிருக்கும் சிங்கமும் சிறுவனும் அச்சிறிய படகில் அத்தனை நாட்கள் ஒன்றாக துயரம், பசி, வேதனை, பயம், வலி என எல்லா கஷ்டங்களுக்கிடையேயும் எப்படி தப்புகிறார்கள் என்பதை சிறப்பாக சொல்லியிருக்கின்றார். இவன் தப்புவதற்கு முக்கிய காரணம் அக்கடலில் தான் உயிரிழக்கப்போவதில்லையென்றும் முயன்ற வரை முயற்சிக்க வேண்டும்மென்ற அச்சிறுவனின் அபார நம்பிக்கை தான். நம்பிக்கையை பற்றி பேசும்போது இப்படிச் சொல்கிறார்.

 “They go as far as the legs of reason will carry them and then they leap”

“To choose doubt as a philosophy of life is akin to choosing immobility as a means of transportation”

இப்புத்தகத்தில் நாம் அறிந்துக்கொள்வதற்கான தகவல்கள் ஏராளமாக இருக்கின்றன. இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்றானபின் மனித மனம் அடையும் மாற்றங்கள் வியப்பானவை. அவை விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றது. கடலில் கடற்றாழைகள் அடர்த்தியாக வளர்ந்து ஒரு தீவு போல் பரந்திருக்கும் இடத்தில் அவன் கழிக்கும் நாட்கள் Cast Away திரைப்படத்தை நினைவுபடுத்தியது.

பாண்டிச்சேரியில் துவங்கும் இக்கதை பையின் வாழ்க்கை முறைகளையும், விலங்கியல் பூங்காவில் விலங்குகளுடனான உறவையும், எல்லா மதங்களிலும் அவன் கொண்ட அதீத ஈடுபாடுகளும் அதனால் பல மனிதர்களுடன் கொண்ட நெருங்கிய தொடர்பும், வெயிலிலும் மழையிலும் கடலில் வாடும் பொழுதுகளில் நம்பிக்கையிழக்காமல் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகளும் நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கின்றதென்றாலும் இப்புத்தகத்தின் வெகுசிறப்பம்சமே நாம் எதிர்பாரா வகையில் கதையை முடித்த விதம்தான். இதைபற்றி எழுதுவதை விட வாசித்து அறிந்துக்கொள்வதே மேலானது. 

இந்நாவல் 2002ஆம் ஆண்டில் புக்கர் பரிசை வென்றது. இக்கதையை திரைப்படமாக்கும் முயற்சிகளும் தொடர்கின்றன.

Book : Life of Pi
Author : Yann Martel
Pages : 336
First Edition : 2001

Read Full Post »

mapஎகிப்த் நாடு ஆங்கிலேயரின் ஆட்சிப்பிடியில் இருந்த 1900 காலகட்டங்களையும், 1997 – 1998 காலகட்டங்களையும் பின்னனியாகக்கொண்டும் இரண்டு காலத்திலும் பயணிக்கின்றது இக்கதை. இப்புத்தகத்தின் பெயரை கொண்டு இது ஒரு காதல் கதையாக இருக்மென நினைத்து வாசித்தேன். ஆனால் காதலை மட்டும் சொல்லும் படைப்பாக இல்லாமல் இரு வேறு கால கட்டங்களிலுமான வரலாற்று நிகழ்வுகளை, அரசியலை, சுதந்திர போராட்டங்களை, எகிப்த் நிலத்தின் நாகரீகத்தினை, நூறாண்டுகளில் அது அடைந்த மாற்றங்களையும் பதிவுசெய்துள்ளது.

“என்னால் முடிந்தவரை அவளுக்கு புரியவைக்க முயற்சித்துவிட்டேன். ஆனால் அவளால் புரிந்துக்கொள்ள முடியவில்லை, புரிந்துக்கொள்ளவும் மாட்டாள். நம்பிக்கை இழக்காமல் எப்போதும் அவருக்காக காத்திருக்கின்றாள்” என்ற வரிகளில் மிகவும் சாதாரணமாகவே கதை தொடங்கியதெனினும் அதே வரிகளில் கதை நிறைவடையும் போது அவ்வரிகளின் தாக்கம் நம்மை முழுமையாக ஆக்கரமிக்கின்றது. எந்த ஒரு உணர்வையும் தனித்து பார்க்கும் போது அதன் வீரியத்தை முழு அளவில் உள்வாங்கிக்கொள்ள ஏதுவாய் இருப்பதில்லை. அதுவே சூழலோடும் தன்மையோடும் அறியப்படும்போது நம்மையும் அதனோடு ஒன்றி விடச்செய்கின்றது.

தாயின் உடல் நலம் சீறற்றுப்போனதால் மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுவிட, அந்நேரத்தில் ஒரு பழைய டரங்கு பெட்டியை தன் தாயின் வீட்டில் காண்டடைகிறாள் லண்டனில் வசிக்கும் இசபெல். அதில் பல காகிதங்களும், உரைகளும், கடிதங்கலும், செய்திதாள்களிலிருந்து வெட்டப்பட்ட பக்கங்களும் மேலும் சில பொருட்களையும் காண்கிறாள். அதிலுள்ள குறிப்புகள் எல்லாம் அரபி மொழியிலும், பெரன்ச்சிலும், சில ஆங்கிலத்திலும் இருக்கின்றன. தன் குடும்பத்தை பற்றிய வரலாறு அதிலிருக்கக்கூடும் என்றும் அதை அறிந்துக்கொள்ளும் ஆவலில் தன் நண்பரான உமரை அணுகுகிறாள். அவர் தன் தங்கையான எகிப்தில் வசிக்கும் அமல் இதற்கு உதவி புரிவாரென அவளிடம் அனுப்பி வைக்கிறார். அமலின் வாயிலாக நூறாண்டிற்கு முன் அவர்கள் குடும்பத்தின் நிகழ்வுகளை கதையாக நமக்கு அளித்திருக்கிறார் ஆசிரியர்.

அக்குடும்ப தலைமுறைகளின் வரைபடம் முதல் பக்கத்திலேயே கொடுத்திருப்பதால் யார் யாருக்கு எப்படி சொந்தம் என்று கதையின் ஆரம்பத்தில் ஒவ்வொரு பெயராக அறிமுகமாகும்போது அதனை குழப்பிக்கொள்ளாமல் சரியாக புரிந்துக்கொள்ள பெரிதும் உதவியாக இருக்கின்றது. 1900 ஆண்டில் தன் கணவனை இழந்த சோகத்தில் ஒரு மாறுதலுக்காக சிறிது காலம் எகிப்தில் தங்கி வர இங்கிலாந்திலிருந்து Anna வருகிறாள். தன் கணவரின் தந்தையின் மூலம் அங்கு ஆட்சிப்புரியும் ஆங்கிலேய அரசு அதிகாரிகள் பலருடனும் நட்புக்கொண்டு அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கும் விருந்துகளுக்கும் சென்று தன் பொழுதை கழிக்கிறாள். தொடர்ந்து தன் மாமனாருக்கு எழுதும் கடிதங்கள் மூலம் அந்நிகழ்வுகள் பதிவாகியிருக்கின்றன. முதல் நூறு பக்கங்கள் அவள் செல்லும் இடங்களை பற்றிய விவரனைகளாகவும் சந்தித்த மனிதர்களை பற்றியதாகவும் இருப்பதால் மிகவும் நிதானமாகவே கதை நகர்கின்றது.

சினாய் பிரதேசத்திற்கு Anna ஆண்வேடம் அணிந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது எகிப்தியர்களால் கடத்தப்பட்டு ஒரு வீட்டில் அடைக்கப்படுகின்றாள். பிறகு அவ்வீட்டில் உள்ள பெண்மணி லைலாவுடன் நட்பாகி, அவளின் அண்ணனும் Annaவும் காதலித்து ஆங்கிலேய அதிகாரிகளின் எதிர்ப்புகளுக்கிடையில் அவர்கள் திருமணம் செய்துக்கொள்கின்றனர். தன்னுடைய மொழியை, நிலத்தை, சொந்தங்களை, நண்பர்களையெல்லாம் துரந்து கணவன்மேலுள்ள காதலால், அவ்வீட்டிலுள்ள மனிதர்கள் தன் மீது காட்டும் அன்பால் அவர்களையே தன் உலகமாக்கிக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறாள். “அவனின் கடலாக இருந்தாள் நீந்துவதற்கு, அவனின் பாலைவனமாக இருந்தாள் துள்ளிகுதிப்பதற்கு, அவனின் நிலமாக இருந்தாள் உழுவதற்கு” என்று அவர்களின் காதல் விவரிக்கப்படுகின்றது.

அவள் அந்நாட்டில் வாழ்ந்த வாழ்க்கையை அக்காலகட்டத்தில் நடந்த சுதந்திர போராட்ட சம்பவங்களோடும், ஆங்கிலேயர் ஆட்சியின் பிடியில் எகிப்த் நிலமக்கள் சந்திக்க நேர்ந்த சங்கடங்களையும் பிணைத்து கச்சிதமாக பதிவாக்கியுள்ளார் ஆசிரியர். முழுமையான வரலாற்றுக்காவியமாக அல்லாமல் ஆங்காங்கே கதையோடு இணைந்த தகவல் குறிப்புகளாக Ottoman Empire, Khedive Tewfiq, Lord Cromer மேலும் Denshawai incident பற்றிய தகவல்களை கொடுத்திருப்பது எகிப்த் நாட்டு வரலாற்றை தெரிந்துக்கொள்ள நல்ல அறிமுகமாக அமைந்துள்ளது.

தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தங்கள் முன்னேற்றத்திற்காகவும் அல்லாமல் அவர்களின் ஆற்றலை எல்லாம் ஆங்கிலேயரின் சூழ்ச்சிகளை முறியடிக்கவே பயன்பட்டு வீணாக்கிக்கொண்டிருப்பதின் வருத்தத்தை கதை நெடுகிலும் காணமுடிகின்றது. சுதந்திரப்போராட்ட சம்பவங்களை பதிவித்தது மட்டுமல்லாமல் 1997 – 1998 காலகட்டங்களில் எகிப்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களையும், அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களை பற்றியும் பதிவுசெய்துள்ளார். காதல் கதையினூடாக பதிவிக்கப்படும் இச்சம்பவங்கள் மிதமான தாக்கத்தையே தருகின்றதெனினும் காலத்திற்கேற்ப அக்குறிப்புகளை புகுத்தியிருப்பது சிறப்பாக அமைந்துள்ளது. “ஒன்றுமே செய்ய முடியாத கையறு நிலையில் மோசமான காலத்தில் கொடூரமான மாட்டிக்கொண்டதாக கவலை பட்டுக்கொண்டிருக்காமல் வரலாறு அதன்போத்தில் தன்னை எழுதிச்செல்ல காத்திருத்தலே நன்று” என்று அன்றைய காலக்கட்டங்களில் எழுதிய வரிகள் இன்றும் பொருந்திப்போவதாக காட்டியிருக்கின்றார்.

தன் கணவனை இழந்த சோகத்தில் எகிப்திற்கு வந்த Anna பதினான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் தன் கணவனை இழந்து, நெருங்கிய நட்பான கணவனின் தங்கையையும் அவளின் குடும்பத்தையும் பிரிந்து மகளுடன் இங்கிலாந்து திரும்புவதாக முடிவடைகின்ற கதையை இரண்டு தலைமுறைக்கு பிறகு ஏற்படும் காதலோடும் நட்போடும் பிணைத்து தொய்வில்லாமல் வெகு சிறப்பாக நகர்த்தியிருக்கின்றார்.

இறுதி சில பக்கங்களை வந்தடைந்துவிட்ட தருணங்களில் விரைவில் இக்கதை முடிவடைந்துவிடுமே என்ற எண்ணத்தில் சற்று நிதானமாகவே நான் வாசித்துக்கொண்டிருக்க, தன் குடும்பத்தின் மூத்த தலைமுறையினறை பற்றி வாசிக்கும் கதைசொல்லியான அமல் அவர்கள் கதையை அறிந்திருந்தும் Anna வின் இறுதி பகுதிகளை வாசிக்க தாமதப்படுத்துகிறாள் என்ற வரிகளை வாசிக்கும் போது மெலிதான புன்னகையை தவிர்க்கமுடியவில்லை. நல்ல புத்தகங்களையும் நம்மை அதனுள் மூழ்கடித்துவிடும் எழுத்துக்களையும் பிரிய கடினமாகவே இருக்கின்றது. புத்தகம் முடியும் வரை அக்காகித மாந்தர்கள் நம்முடனேயே தங்கிவிடுகின்றனர். அதிலும் Annaவின் கணவர் கதாப்பாத்திரம் வெகு சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

இப்புத்தகம் 1999 புக்கர் பரிசு தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றது. அந்த ஆண்டு J.M.Coetzeeயின் Disgrace நாவல் புக்கர் பரிசை வென்றது என்றாலும் இப்புத்தகமும் முற்றிலும் வித்தியாசமான நிறைவான அனுபவத்தை தந்தது. ஆரம்பம், ஆரம்பத்தின் முடிவு, முடிவின் ஆரம்பம், முடிவு என்று நான்கு பகுதிகளாக பிரித்து அதிலுள்ள உட்பிரிவு ஒவ்வொன்றின் ஆரம்பத்திலும் கதைக்கு ஏற்ப பொன்மொழிகளையோ பாடல் வரிகளையோ மேற்கோள் காட்டியிருப்பது சிறப்பு.

இக்கதையின் ஆசிரியரான Adhaf Soueif இந்நாவலின் மூலம் பிரபலமாக அறியப்பட்டார் என்று சொல்லப்படுகின்றது. இவர் கட்டுரை தொகுப்புகள், நாவல்கள், சிறுகதை தொகுப்புகள் வெளியிட்டது மட்டுமல்லாமல் அரபு-ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகின்றார். இவரை பற்றி இங்கு வாசிக்கலாம்.

Book : The Map of Love
Author : Ahdaf Soueif
Pages : 516
First Edition : 1998

Read Full Post »

amsterdam
 
இங்கு சந்தித்து தழுவிக்கொண்ட இரு நண்பர்கள் சென்று விட்டனர் அவரவரின்  சொந்த தவறுக்காகவே –  W.H.Auden.  
 
இவ்வாசகத்தை முதல் பக்கத்தில் கொண்டு தொடங்கும் கதை இவ்வரிகளையே கதையாகவும் கொண்டுள்ளது.  தங்கள் காதலியும் தோழியுமான மோலியின் இறுதிச்சடங்கில் பங்குபெறும் இருநண்பர்கள் அவளின் இறப்பிற்காகவும், சிறிது சிறிதாக அவளின் மூளை செயலிழந்து தான் யார் என்பதையே அறியாமல் இறந்த விதத்திற்காகவும் வருந்துகின்றனர். 
 
அதற்கு பிறகு தங்களின் உடல் நிலை குறித்து அவர்களுக்கு பயம் எழுகின்றது.  தன் காதலி இறந்த நிலையை என்றுமே தானும் சந்திக்கக்கூடாது என்று யோசித்த நண்பர் மற்றொருவரை அழைத்து அப்படி ஒரு நிலமை தனக்கு ஏற்படுமாயின் இயற்கையான மரணம் ஏற்படும் வரை காத்திருக்காமல் தன்னைத்தானே அழித்துக்கொள்ள அவர் உதவ வேண்டுமென்று கேட்கிறார்.  தனக்கும் அப்படி ஒரு நிலை உருவாகின் இவர் உதவுவார் என்றால் தானும் உதவுவதாக ஒப்புக்கொள்கிறார். 
 
பிறகு இருவரும் சற்றே நிம்மதி அடைகின்றனர்.  தங்கள் வேலையில் மும்முரமாக உழைக்கின்றனர்.  ஒருவர் இசையமைப்பாளர், மற்றவர் செய்தித்தாளின் ஆசிரியர்.  முன்னவர் எத்தனைக்கு எத்தனை தனிமையான வாழ்வு வாழ்கிறாரோ அதற்கு நேரெதிராக தனக்கென ஒரு ஐந்து நிமிட இடைவெளிகூட இல்லாமல் தொடர்ந்து உழைப்பவர் மற்றொருவர்.  இடையிடையே சர்ச்சைகளும் சமரசங்களும் அவர்களிடம் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றது.  இப்படி கதை நகர்ந்துக்கொண்டிருக்க….யாருடைய சாவிற்கு யார் உதவ போகிறார்கள், இவர்கள் மரணம் எப்படி நிகழும் என்பதுதான் கதை. 
 
‘Atonement’ கதையை ஏற்கெனவே படமாக பார்த்து பிடித்திருந்ததாலும் , ‘Enduring Love’ கிடைக்காததாலும், ‘Saturday’ புத்தகத்தை பற்றி ஒன்றும் அறிந்திருக்கவில்லையென்பதாலும் வெறும் புக்கர் பரிசை நம்பி இப்புத்தகத்தை வாங்கி வாசித்தப்பிறகு ஒரு சாதாரண பொழுதுபோக்கு நாவலை வாசித்த அனுபவமே மிஞ்சியது.  இன்னும் சில பக்கங்களில் சுவாரிஸ்யமாக மாறும் என்ற நம்பிக்கையில் பக்கங்களை திருப்பிக்கொண்டிருக்க…… அதே நம்பிக்கையில் கடைசி பக்கம் வரை வந்து கதையும் முடிந்துவிட்டது.  
 
இவர் எழுதிய பத்து நாவல்களிலும் இரண்டு சிறுகதை தொகுப்புகளிலிருந்தும் எட்டு கதைகள்  படமாக்கப்பட்டிருக்கின்றன என்பது தனிச்சிறப்பு.    இந்நாவல் 1998ஆம் ஆண்டு புக்கர் பரிசை வென்றது. 

 

Book :  Amsterdam
Author : Ian Mc Ewan
Pages : 193
First Edition : 1998

Read Full Post »

Title : Disgrace
Author : J.M.Coetzee
Pages : 220
Year : 1999

First UK edition cover

புக்கர் பரிசை வென்ற இந்நாவலின் கதை தென்னாப்ரிக்காவில் நிகழ்கிறது.  பேராசிரியராக பணிப்புரியும் 52 வயதான டேவிட் லூரி, இரண்டு முறை விவாகரத்தாகிபின் தனித்து வாழ்கிறார்.  கல்லூரியில் தன்வகுப்பில் பயிலும் மாணவியிடத்து காதல்வயப்பட்டு அவளுடன் உறவுகொள்கிறார்.  இதனை அறிந்த அவள் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகிகளிடம் புகார் கொடுக்க, டேவிட் லூரி வேலையிலிருந்து விலகும் சூழல் உருவாகிறது.  தன்செயலுக்காக வருந்தவில்லையெனினும் தற்காத்துக்கொள்ளவும் எந்த முயற்சியும் எடுக்காமல் நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டு வெளியேறுகிறார். 

நாட்டுப்புறத்தில் சிறிய பண்ணை வைத்திருக்கும் தன் மகளிடம் சிறிது காலம் தங்கிவரச் செல்கிறார்.  நகர்புறங்களின் வாசங்களுக்குச் சற்றும் சம்பந்தமேயல்லாது விலங்குகளுடனும், விவசாயத்துடனும் கழியும் தன் மகளின் வாழ்வைக் கண்டு கவலையுறுகிறார்.  அவ்விடத்தில் தங்கும் டேவிட் லூரியின் வாழ்க்கை எவ்வாறு தொடர்கிறது, அதனால் அவர் மனதில் ஏற்படும் மாற்றங்களென விரிகிறது இக்கதை. 

ஆசிரியர் தன் அற்புத நடையில் எளிமையாகவும் அதே சமயம் அழுத்தமிகுந்த வாக்கிய அமைப்பிலும், டேவிட் லூரியை கதையின் ஆரம்பத்தில் ஒரு சராசரி மனிதனாக விவரித்து, தன் மகளுடன் செலவழிக்கும் நாட்களில் பாசமிகு தந்தையாகவும், நாட்டுப்புற வாழ்வோட தன்னை சகஜப்படுத்திக்கொள்வதையும், அப்பகுதியிலுள்ள மிருகமருத்துவமனையில் தன்னார்வலச்சேவகராக பணிபுரியும் நேசமிகுந்தவராகவும், கல்லூரி மாணவியின் பெற்றோர்களை சில மாதங்களுக்கு பிறகு சென்று சந்தித்து மன்னிப்புக்கோறும் மனிதாபிமானமிக்கவராகவும், இறுதியில் தன் வாழ்க்கை முறையையே மகளுக்காக மாற்றிக்கொள்ளும் பரிதாபத்திற்குரியவருமாக விவரித்திருக்கிறார்.
 
தன் மகளுக்கு வேறொரு பாதுகாப்பான ஊரில் அவளின் வாழ்கையை அமைத்துத்தருவதாக டேவிட் லூரி பலமுறை கூறியும், இதுதான் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையெனில் இங்கேயே இருந்து அவதியுற்று அதை ஏற்று வாழ்வதுதான் வாழ்க்கையென பிடிவாதமாக இருக்கும் மகள், சில துயரங்களுக்கு பிறகும் அப்படி இருப்பதற்காக சொல்லும் காரணங்கள் அத்தனை வலுவானதாக இல்லையெனினும் அவளின் நிலை மனதை நெருடுகிறது.  நல்லவேலையாக தனித்து வாழாது எத்தனை வயதானபின்பும் நம் சமுதாயத்தில் பெரும்பாலானோர் உறவுகளைச் சார்ந்தே வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்ற ஆசுவாசம் புத்தகத்தை வாசித்து முடிக்கையில் பெருமிதத்தோடு தலைதூக்குகிறது.  இறுதியில் செத்த விலங்கினிடத்தும் நேசத்தோடு அன்புசெலுத்தும் டேவிட் லூரி, வாழ்க்கையை நிபந்தனைகளற்று ரசிக்கப்படுவதாகவும் ஏற்றுக்கொள்ளப்படுவதாவும் முடிக்கப்பட்டிருப்பது அபாரம். 

இந்நாவலில் சில வாக்கியங்கள் நேரே சென்று உள்மனதை தாக்குகிறது, அவற்றில் சில இங்கு…

“The irony does not escape him – that the one who comes to teach learns the keenest of lessons, while those who come to learn learn nothing.”

“No emotion, or none but the deepest, the most unguessed-at : a ground bass of contentedness like the hum of traffic that lulls the city – dwells to sleep, or like the silence of the night to country folk.” 

“In my experience, poetry speaks to you either at first sight or not at all.  A flash of revelation and a flash of response like lightning, like falling in love.”

“Yet we cannot live our daily lives in realm of pure ideas, cocooned from sense experience.  The question is not, How can we keep the imagination pure, protected from the onslaughts of reality?  The question has to be, Can we find a way for the two to co-exist?” 

“Yes, When all else fails, philosophize.”

“The perfective, signifying an action carried through to its conclusion.  How far away it all seems! I live, I have lived, I lived.”

“Watchfulness became the watch word : the watchfulness of all over all.  Purgation was replaced by the purge.” 

“Evening falls.  They are not hungry, but they eat.  Eating is a ritual, and rituals make things easier.” 

“Should he mourn?  It is proper to mourn the death of beings who do not practice mourning among themselves?  Looking into his heart, he can find only a vague sadness.” 

“No matter, he thinks : let the dead bury their dead.” 

“One gets used to things getting harder; One ceases to be surprised that what used to be as hard as hard can be grows harder yet.”

இரண்டுமுறை புக்கர் பரிசை வென்ற முதல் நபர் J.M.Coetzee, 2003ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசும் பெற்றார். J.M.Coetzeeயின் பிற நாவல்கள் (நன்றி-விக்கிபீடியா) :  
Dusklands (1974)
In the Heart of the Country (1977)
Waiting for the Barbarians (1980)
Life & Times of Michael K (1983)
Foe (1986)
Age of Iron (1990)
The Master of Petersburg (1994)
Elizabeth Costello (2003)
Slow Man (2005)
Diary of a Bad Year (2007)

–  நதியலை

Read Full Post »