Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘வைரமுத்து’ Category

அமர்களம் படத்தில் வரும் ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ & ‘மேகங்கள் எனைத் தொட்டுப்போனதுண்டு’ என்ற இரு பாடல்களும் வைரமுத்துவின் ‘தமிழுக்கு நிறம் உண்டு’ என்ற தொகுப்பில் இருக்கும் ‘கேள் மனமே கேள்’ & ‘பெயர் சொல்ல மாட்டேன்’ கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்ட சில வரிகளாகும். இவ்விரு கவிதைகளில் எனை மிகவும் கவர்ந்தது ‘பெயர் சொல்ல மாட்டேன்’.

பெயர் சொல்ல மாட்டேன்
———————————-

மேகங்கள் எனைத்தொட்டுப் போனதுண்டு – சில
மின்னல்கள் எனை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு – மனம்
சில்லென்று சிலபொழுது சிலிர்ததுண்டு
மோகனமே உன்னைப்போல என்னையாரும் – என்
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என்நெஞ்சில் உன்னைப்போல – எரி
அமிலத்தை வீசியவர் எவரும் இல்லை

கண்மணியே உன்னைக்காண வைத்ததாலே – என்
கண்களுக்கு அபிஷேகம் நடத்துகின்றேன்
பொன்மகளே நீ போகும் பாதையெல்லாம் – தினம்
பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்
விண்வெளியின் மேலேறி உந்தன் பேரை – காதல்
வெறிகொண்டு கூவுதற்கு ஆசை கொண்டேன்
பெண்ணழகே உனைத்தாங்கி நிற்பதாலே – இந்தப்
பிரபஞ்சம் வாழ்கவென்று பாடுகின்றேன்

விதையோடு தொடங்குதடி விருட்சமெல்லாம் – துளி
விந்தோடு தொடங்குதடி உயிர்கள் எல்லாம்
சதையோடு தொடங்குதடி காமம் எல்லாம் – ஒரு
தாலாட்டில் தொடங்குதடி கீதமெல்லாம்
சிதையோடு தொடங்குதடி ஞானமெல்லாம் – சிறு
சிந்தனையில் தோன்றுதடி புரட்சியெல்லாம்
கதையோடு தோன்றுமடி இதிகாசங்கள் – உன்
கண்ணோடு தொடங்குதடி எனது பாடல்

உலகத்தின் காதலெல்லாம் ஒன்றே ஒன்றே – அது
உள்ளங்கள் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் முத்தமெல்லாம் ஒன்றே ஒன்றே – அது
உதடுகளில் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் உயிரெல்லாம் ஒன்றே ஒன்றே – அது
உடல்கள் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் சுகமெல்லாம் ஒன்றே ஒன்றே – என்
உத்தரவுக் கிணங்கிவிடு புரிந்து போகும்

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே – அடி
தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் – உன்
செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் – அது
தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்?
எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன் – அடி
எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையிலே பேசிக் கொண்டே – என்
இரவுகளைக் கவிதைகளாய் மொழிபெயர்த்தேன்

பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே – என்
பிரியத்தை அதனால்நான் குறைக்கமாட்டேன்
சரிந்துவிடும் அழகென்று தெரியும் பெண்ணே – என்
சந்தோஷக் கலைகளைநான் நிறுத்த மாட்டேன்
எரிந்துவிடும் உடலென்று தெரியும் பெண்ணே – என்
இளமைக்குத் தீயிட்டே எரிக்க மாட்டேன்
மரித்துவிடும் உறுப்பென்று தெரியும் பெண்ணே – என்
வாழ்வில் நான் ஒரு துளியும் இழக்கமாட்டேன்

கண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்றில் – என்
காதல்மனம் துண்டுதுண்டாய் உடையக் கண்டேன்
துண்டுதுண்டாய் உடைந்த மனத்துகளை எல்லாம் – அடி
தூயவளே உனக்குள்ளே தொலைத்து விட்டேன்
பொன்மகளே உனக்குள்ளே தொலைத்ததெல்லாம் – சுக
பூஜைகொள்ளும் நேரத்தில் தேடிப் பார்த்தேன்
கண்மணிஉன் கூந்தலுக்குள் கொஞ்சம் கண்டேன் – உன்
கால்விரலின் பிளவுகளில் மிச்சம் கண்டேன்

கோடிகோடி ஜீவன்கள் சுகித்த பின்னும் – இன்னும்
குறையாமல் வீசுதடி காற்றின் கூட்டம்
கோடிகோடி ஜீவன்கள் தாகம் தீர்த்தும் – துளி
குறைந்தொன்றும் போகவில்லை காதல் தீர்த்தம்
மூடிமூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் – மண்ணை
முட்டிமுட்டி முளைப்பதுதான் உயிரின் சாட்சி
ஓடிஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே – நாம்
உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி

– வைரமுத்து (தொகுப்பு – தமிழுக்கு நிறம் உண்டு)

Read Full Post »

இந்தப் பிரபஞ்சம் முழுக்கக் கொட்டிக் கிடக்கும் வாழ்க்கை அவனைக்கூப்பிடுகிறது.  ஆனால், வாழ்க்கைக்கு எதிரான திசையிலேயே அவன் உதிரம் கசியும் கால்களோடு ஓடிக்கொண்டேயிருக்கிறான்.  தேன் கொள்ளப் போகும் ஈக்களுக்குத் தேனே சமாதியாகிவிடுவது மாதிரி, இந்த நூற்றாண்டுமனிதன் தன் தேவைகளைத் தேடுவதிலேயே ஆயுளைத் தீர்த்து விடுகிறான். 
*****
ஞானத்தின் உச்சம் பேரின்பமென்றால்,
அறியாமையின் உச்சமும் அதுவேதானோ?
*****
அடுத்த கிரகங்களின் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டோமே….
பூமியில் எல்லாம் பார்த்தாகிவிட்டதா? 
இன்னும் பார்க்கப்படாத பூக்கள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன.
*****
சட்டங்களைச் சூழ்நிலைகள் தீர்மானிக்கின்றன;
தர்மங்களை மனோநிலைகள் தீர்மானிக்கின்றன.
*****
இளமையைக் கல்விக் கூடங்களில் தொலைத்துவிட்டு
இதயத்தை விரக்தியில் தொலைத்துவிட்டு
பகலை பூமியில் தொலைத்துவிட்டு
இரவை வானத்தில் தொலைத்துவிட்டு
சின்னச் சின்னக் கனவுகளை
சிகரெட் புகையில் தொலைத்துவிட்டு,
தன்னையே தனக்குள் தொலைத்துவிட்டு
வாழ்ந்து கொண்டிருக்கிறது ஒரு வாலிபர் கூட்டம். 
*****
அறிவு தன் முயற்சியை நிறுத்திவிட்ட இடத்தில்தான்
மூட நம்பிக்கை முளைக்கிறது.
*****
எந்தக் கலை வாழ்க்கையிலிருந்து வரிக்கப்பட்டதோ
அது ஜீவனுள்ளதாய் பிறக்கும்.
அல்லது,
எந்தக்கலை ஜீவனுள்ளதாய் பிறக்கிறதோ
அது வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டதாய் இருக்கும்..
*****
காதல் கவிதைகள் ஒரு மொழியின் சிறகுகள்.
எந்த மொழியிலும் காதல் கவிதையைத் தொட்டால் மட்டும் அதன் உயிர் கைகளில் ஒட்டிக் கொள்கிறது.
காரணம் –
வாழும் காதலர்கள் வாழ்ந்த காதலர்களுக்கு ரத்ததானம் வழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.
*****
தனக்குள் இருக்கும் ஒன்றைத் தனக்கு வெளியே தேடும் தேடல்தான் காதல்.
*****
வாழ்க்கையின் வெற்றிடத்தைக் காதலால் நிரப்புங்கள்.
வாழ்க்கை என்ற வார்த்தைக்கு அர்த்தத்தைக் காதல் அகராதியில் கண்டுபிடியுங்கள்.
காதலியின் உள்ளங்கையில் கவிதை எழுதுங்கள்.
காதல் கவிதைகளால் தமிழின் எடையை அதிகரியுங்கள்,
காதல் மனிதனின் வரமல்லவா?
கவிதை மொழியின் உரமல்லவா?
*****
சப்தம் கடந்த சங்கீதம் காண
வார்த்தை கடந்த கவிதைத்தேட
வர்ணம் கடந்த ஓவியம் பேண
மனசை ஆற்றுப்படுத்துங்கள். 

– வைரமுத்து

Read Full Post »

நூல் – இதனால் சகலமானவர்களுக்கும் (கட்டுரை தொகுப்பு)
ஆசிரியர் – வைரமுத்து
முதற்பதிப்பு – 1992

வாசித்த வைரமுத்துவின் கட்டுரை தொகுப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது ‘இதனால் சகலமானவர்களுக்கும்’.  அதன் முன்னுரை…

மனிதர்களே!

இருபத்தோராம் நூற்றாண்டின் கருக்கலில் நாம் இருக்கிறோம்.
இனி நம் பகலுக்குச் சூரிய வெளிச்சம் மட்டும் போதாது.
இந்த ஞாலம் துலங்க ஞாபதீபம் ஏற்றுங்கள்.

உதிரும் பழமைகள் உதிரட்டும்.
துளிர்க்கும் புதுமைகள் துளிர்க்கட்டும்.
ஆனால், பழமைகளை ஆவேசமாய்த் துறக்கும் அவசரத்தில் ஆடைகளையும் அவிழ்த்தெறிந்து விடாதீர்கள். 

உங்கள் வாழ்க்கையில் சிந்தி விழுகிற சிலமணி நேரங்களை அறிவுக்காகச் சேமியுங்கள்.

எதிர்ப்புகளை எதிர்கொள்ளுங்கள்.
பாறைகளை எதிர்க்கவில்லையேல் ஓடைகளுக்குச் சங்கீதமில்லை.

துயரங்களை ஜீரணித்துவிடுங்கள். 
தங்கள் மீது விழும் வெயிலை ஜீரணிப்பதால்தான் மண்ணுக்கு நிழல் தருகின்றன மரங்கள். 

அவசரப்படாதீர்கள்
அங்கீகாரம் அவ்வளவு எளிதில்லை.
இங்கே மலர்களுக்குதான் முதல் மரியாதை.
வேர்கள் வெளிவருவதேயில்லை

தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல.
தென்னங்கீற்றின் வீழ்ச்சிதான் தென்னை மரத்தின் வளர்ச்சி.

சுறுசுறுப்பாயிருங்கள்.
ஓடிக் கொண்டேயிருக்கும் நீரில்தான் ஆக்சிஜன் அதிகம்.

எல்லோரையும் மதியுங்கள்.
சமுத்திரத்தில் எந்தத்துளி முதல் துளியோ –
எவருக்குத் தெரியும்.

உங்கள் பெருமைகளை நீங்கள் அல்ல -ஊர் பேசட்டும்.
பூக்களின் புகழ் பரப்பும் பொறுப்பைக் காற்றுதானே ஏற்றுக் கொள்கிறது.

இந்த உலகமென்னும் கிண்ணத்தில் இயற்கை இன்பத்தை மட்டுமே ஊற்றி வைத்திருக்கிறது. 
மகிழ்ச்சி…மகிழ்ச்சி…மகிழ்ச்சியைத் தவிர இந்த விரிந்த பிரபஞ்சத்தில் வேறில்லை.

துன்பம் என்பது அறியாமை.
துன்பம் என்பது அறிவின்மை.

அறிவில் நிமிருங்கள்.
அன்பில் நெகிழுங்கள்.
உழைப்பில் உயருங்கள்.

பிறகு பாருங்கள்.

இந்தப்பூவுலகமே புறாச்சிறகடியில் கண்ணயரும் குஞ்சைப் போல உங்களுக்குக் கதகதப்பாய் இருக்கும்.

– வைரமுத்து

ரசித்த வரிகள் அடுத்த பதிவில் தொடரும். 

நதியலை

Read Full Post »

‘பெய்யெனப் பெய்யும் மழை’ தொகுப்பில் ரசித்த கவிவரிகள்…

ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ
****
வாழ்வெனும் கடலை
மூச்சுமுட்டக் குடி

ஊன் உருக்கு
உள்ளொளி பெருக்கு

மெய்ப்பதம் தேடு
ஏழாம் அறிவுக்கு ஏற்று மனிதரை

உலகம் உன்மீது திணித்த
முன் முடிபுகள் அழி
****
நீயென்று கருதிய
நீயழிந்தொழிய
நீயல்லாத நீதான் நீ
****
மலையைப் பறித்துக் கடலில் எறிந்தது
மலை பறித்த பள்ளத்தில்
கடல் அள்ளி ஊற்றியது
பூகோளம் தெரியாத பூகம்பம்!
****
ஒரே கல்லில் துவைத்துத் துவைத்துச்
சாயம் போயின வார்த்தையின் நிறங்கள்

வார்த்தை மாறினால்
வாழ்க்கை மாறும்

முதலில்
வாழ்க்கையிலிருந்து
வார்த்தையை மீட்போம்
பின்னர்
அர்த்தத்திலிருந்து
வார்த்தையை மீட்போம்

வாழ்வின் நீள அகலம் கருதி
வார்த்தைகளிலும் நாம்
மழித்தல் நீட்டல் செய்வோம்

எதிர்மறை வார்த்தைகள்
உதிர்ந்து போகட்டும்

உடன்பாட்டு மொழிகள்
உயிர் கொண்டெழட்டும்

பழைய வார்த்தைகள் பறித்துப் பறித்துப்
புதிய நிலத்தில் பதியன்போடுவோம்

புளித்த வார்த்தைகள் மாறும்போது
சலித்த வாழ்க்கையும்
சட்டென்று மாறும்
****
எப்போதெல்லாம் நான்
சாகவில்லையென்பதற்குச்
சாட்சி கோரப்படுகிறதோ

அப்போதெல்லாம்
எழுதத் தோன்றும்
****
உடைந்தகுடம் வழியே
வழிந்தோடும் தண்ணீர்
வாழ்வு
ஒவ்வொரு சொட்டும்
உறிஞ்சற்பாலது
****
மொழியாய் முதிர்ந்தது ஒலி
கவியாய் முதிர்ந்தது மொழி
என்னவாய் முதிரும் கவி?

கண்காணாக் கடவுள்
தான்தோன்றியாகுமெனின்
கண்காணும் பிரபஞ்சம்
தான்தோன்றியாகாதா?

உணர்வுள்ள காலை
மரணம்வரப் போவதில்லை
மரணமுற்ற காலை
உணர்விருக்கப் போவதில்லை
சாவுகுறித்தஞ்சுவதேன் சகோதரா?

உண்டாக்கும் அனைத்தையும்
உள்வாங்கும் பூமிக்குத்
தாயெனும் பட்டம் தகுமா?

கேள்விகள் நல்லவை
சூன்யத்தில் பூப்பூப்பவை
வாழ்வைச் சலிக்கவிடாதவை
****
தயிருக்கு வெளியே
வெண்ணெய் திரளாது
வாழ்வுக்கு வெளியே
ஞானம் பிறவாது
****
அடைத்துக்கிடக்கும் ஐம்பூதங்களைத்
திறக்கத்தானே ஐம்புலன்கள்
சாவிகளுக்கே பூட்டுகளிட்டால்
சாத்தியப்படுமா அனுபூதி?
****
ஆளை வீழ்த்தும் பள்ளங்கள் – பல
அவமானங்கள் காயங்கள்
நாளை வருமென அறிந்தாலும் – என்
நடையின் வேகம் நான் குறையேன்

ஞாலம் கருதினும் கைகூடும் – அடி
நானும் அவனும் ஒருகட்சி
காலம் ஒருநாள் சொல்லட்டும் – நான்
கடலை எரித்த தீக்குச்சி
****

Read Full Post »

நூல் : பெய்யெனப் பெய்யும் மழை
கவிஞர் : வைரமுத்து
முதற்பதிப்பு : 1999

நான் படித்த கவிஞர் வைரமுத்துவின் கவிதை தொகுப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது ‘பெய்யெனப் பெய்யும் மழை’. மொத்தம் 54 கவிதைகள் உள்ளன. எல்லாக்கவிதைகளுமே அருமையான கவிதைகள். இதில் உள்ள சில கவிதைவரிகள் திரையிசைப்பாடலாகவும் வந்திருக்கிறது.

முன்னுரையிலிருந்து ரசித்த சில வரிகள்….

காலம் மரணத்தை நியாயப்படுத்தும்போது கவிதை
வாழ்க்கையை நியாயப்படுத்துகிறது .
***
கவிதை இந்த உலகத்தைக் காணச் சொல்கிறது – ஒரு
குழந்தையின் கண்கொண்டு. ஆனால் வாழ்ச் சொல்கிறது – ஒரு ஞானியின் மனம் கொண்டு.
***
வியத்தல் ஒன்றுதான் நம் வாழ்வைச் சலிக்கவிடாததாய்
உணர்ச்சிக்கு நிறம் கூட்டுவதாய் – ஒவ்வொரு நாளையும் தீட்டிக் கொடுப்பதாய்த் திகழ்கிறது.
நேராய்ச் செல்லும் நதியை விட வளைந்து செல்லும் நதியில்
வசீகரம் அதிகம் இருப்பதுமாதிரி – வியக்கக் தெரிந்த வாழ்வுக்கு ருசி அதிகம்.
வாழ்வை வியக்கச் சொல்கிறது கவிதை; வியக்கச் சொல்லிக்
கொடுக்கிறது கவிதை.
***
எந்தக்காலத்திலும் எல்லா உயிர்களுக்கும் வாழ்க்கையென்பது
புல்வெளியில் நடந்து பூப்பறிப்பதாய் இருப்பதில்லை.
உடல்சார்ந்த தேவைகளாலும் மனம் சார்ந்த தேவைகளாலும்
மனித வாழ்க்கை
எப்பொழுதும் சிக்கலான பின்னல்வலைக்குள் சிக்கியிருக்கிறது.
பாசி படர்ந்த குளம் இந்த உலகம்.
அதன் நடுவே பூத்திருக்கும் வசீகரத் தாமரை வாழ்க்கை.
காலமெல்லாம் கவிதை செய்து கொண்டேயிருக்கிறது
பாசி அறுக்கும் அல்லது பாசி விலக்கும் வேலையை.
***
விஞ்ஞானம் விளக்குவைத்துத் தேடுவதை
கண்களை மூடிக் கண்டறிகிறது கவிதை.
***
வேறெந்த நூற்றாண்டிலும் இல்லாத அளவுக்கு
தூரங்களும் இதயங்களும் சுருங்கிப்போன இந்தத்
தொலைதொடர்பு யுகத்தில் நழுவிக்கொண்டிருக்கும்
மனிதத்தை அலறியடித்தோடி இறுக்கிப் பிடிக்கும்
கடமையை என் கவிதைகளுக்குக் கற்றுக் கொடுத்துக்
கொண்டிருப்பவனாய் என்னை கருதுகிறேன்.

இனிவரும் மழையில் நனைந்து பார்க்க, இனி
மலரப்போகும் மலர்களில் மனம் கரைய, வானவில்
ரசிக்க, வாழ்வின் வலி தாங்க, இலையுதிர்காலக்
கிளைகளில் முட்டும் முதல் தளிருக்குக் காத்திருக்க,
புயல்களை எதிர்பார்க்க, பூகம்பங்களை எதிர்கொள்ள,
சக உயிர்களை நேசிக்க, சேமித்த கண்ணீரை அன்புக்குச்
செலவழிக்கக் கற்றுத் தரும் கடமை இருக்கிறது
கவிதைக்கு.
அந்தக் கடமை சுமந்து நடக்கின்றன என் கவிதைகளும்
– வைரமுத்து
************************************

இத்தொகுப்பில் நான் ரசித்த கவிவரிகள் அடுத்த பதிவில் தொடரும்.

நதியலை

Read Full Post »

போடி போடி கல்நெஞ்சி!

மார்புக்கு ஆடை
மனசுக்கு பூட்டு

ஒரே பொழுதில்
இரண்டும் தரித்தவளே!

காதல் தானடி
என்மீதுனக்கு?

பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்?

தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?

நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?

இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்

இமைகளின் தாழ்வில் –
உடைகளின் தளர்வில் –

என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் –

வாக்கியம் உட்காரும்
நீளத்தில் –
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் –

சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில்

வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் –

நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை.

சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்?

நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்

உண்டென்றால்
உண்டென்பேன்
இல்லையென்றால்
இல்லையென்பேன்

இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி

உள்ளாடும் காதலை
ஒளிக்கவே பார்க்கிறாய்

காதலில்
தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட
விரயமாதல் கூடாது

காலப் பெருங்கடலில்
நழுவி விழும் கணங்களை
மீண்டும் சேகரிக்க
ஒண்ணுமா உன்னால்

இந்தியப் பெண்ணே!
இதுவுன்
பலவீனமான பலமா?
பலமான பலவீனமா?

என்
வாத்தியக்கூடம்வரை
வந்தவளே

உன் விரல்கள்
என் வீணைதடவ வந்தனவா?

இல்லை
புல்லாங்குழல் துளைகளைப்
பொத்திப்போக வந்தனவா?

என் நந்தவனத்தைக்
கிழித்துக்கொண்டோடிச்
சட்டென்று வற்றிவிட்ட நதி நீ

உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது

நீ வணங்கிப் பிரிந்தவேளை
என் இரவு நடுங்கியது

பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
காதலையே அறிவித்தாய்

இருபதா? முப்பதா?
எத்தனை நிமிடம்?
என் மார்பு தோய்ந்து நீ
அழுததும் தொழுததும்

என் பாதியில்
நீ நிறையவும்
உன் பாதியில்
நான் நிறையவும்
வினாடித்துகள் ஒன்று
போதுமே சிநேகிதி

நேரம் தூரம் என்ற
தத்துவம் தகர்த்தோம்

நிமிஷத்தின் புட்டிகளில்
யுகங்களை அடைத்தோம்

ஆலிங்கனத்தில்
அசைவற்றோம்

உணர்ச்சி பழையது
உற்றது புதியது

இப்போது
குவிந்த உதடுகள்
குவிந்தபடி
முத்தமிட நீயில்லை

தழுவிய கைகள்
தழுவியபடி
சாய்ந்து கொள்ள நீயில்லை

என் மார்புக்கு வெளியே
ஆடும் என் இதயம்
என் பொத்தானில் சுற்றிய
உன் ஒற்றை முடியில்

உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்குது
முட்டி அழுத்தி நீ
முகம்பதித்த பள்ளத்தில்

தோட்டத்துப் பூவிலெல்லாம்
நீ விட்டுப்போன வாசம்

புல்லோடு பனித்துளிகள்
நீவந்துபோன அடையாளமாய்க்
கொட்டிக் கிடக்கும்
கொலுசுமணிகள்

நம் கார்காலம்
தூறலோடு தொடங்கியது
வானவில்லோடு நின்றுவிட்டது

உன் வரவால்
என் உயிரில் கொஞ்சம்
செலவழிந்து விட்டது

இந்த உறவின் மிச்சம்
சொல்லக்கூடாத
சில நினைவுகளும்

சொல்லக்கூடிய
ஒரு கவிதையும்.

– வைரமுத்து

Read Full Post »