நூல் : பெய்யெனப் பெய்யும் மழை
கவிஞர் : வைரமுத்து
முதற்பதிப்பு : 1999
நான் படித்த கவிஞர் வைரமுத்துவின் கவிதை தொகுப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது ‘பெய்யெனப் பெய்யும் மழை’. மொத்தம் 54 கவிதைகள் உள்ளன. எல்லாக்கவிதைகளுமே அருமையான கவிதைகள். இதில் உள்ள சில கவிதைவரிகள் திரையிசைப்பாடலாகவும் வந்திருக்கிறது.
முன்னுரையிலிருந்து ரசித்த சில வரிகள்….
காலம் மரணத்தை நியாயப்படுத்தும்போது கவிதை
வாழ்க்கையை நியாயப்படுத்துகிறது .
***
கவிதை இந்த உலகத்தைக் காணச் சொல்கிறது – ஒரு
குழந்தையின் கண்கொண்டு. ஆனால் வாழ்ச் சொல்கிறது – ஒரு ஞானியின் மனம் கொண்டு.
***
வியத்தல் ஒன்றுதான் நம் வாழ்வைச் சலிக்கவிடாததாய்
உணர்ச்சிக்கு நிறம் கூட்டுவதாய் – ஒவ்வொரு நாளையும் தீட்டிக் கொடுப்பதாய்த் திகழ்கிறது.
நேராய்ச் செல்லும் நதியை விட வளைந்து செல்லும் நதியில்
வசீகரம் அதிகம் இருப்பதுமாதிரி – வியக்கக் தெரிந்த வாழ்வுக்கு ருசி அதிகம்.
வாழ்வை வியக்கச் சொல்கிறது கவிதை; வியக்கச் சொல்லிக்
கொடுக்கிறது கவிதை.
***
எந்தக்காலத்திலும் எல்லா உயிர்களுக்கும் வாழ்க்கையென்பது
புல்வெளியில் நடந்து பூப்பறிப்பதாய் இருப்பதில்லை.
உடல்சார்ந்த தேவைகளாலும் மனம் சார்ந்த தேவைகளாலும்
மனித வாழ்க்கை
எப்பொழுதும் சிக்கலான பின்னல்வலைக்குள் சிக்கியிருக்கிறது.
பாசி படர்ந்த குளம் இந்த உலகம்.
அதன் நடுவே பூத்திருக்கும் வசீகரத் தாமரை வாழ்க்கை.
காலமெல்லாம் கவிதை செய்து கொண்டேயிருக்கிறது
பாசி அறுக்கும் அல்லது பாசி விலக்கும் வேலையை.
***
விஞ்ஞானம் விளக்குவைத்துத் தேடுவதை
கண்களை மூடிக் கண்டறிகிறது கவிதை.
***
வேறெந்த நூற்றாண்டிலும் இல்லாத அளவுக்கு
தூரங்களும் இதயங்களும் சுருங்கிப்போன இந்தத்
தொலைதொடர்பு யுகத்தில் நழுவிக்கொண்டிருக்கும்
மனிதத்தை அலறியடித்தோடி இறுக்கிப் பிடிக்கும்
கடமையை என் கவிதைகளுக்குக் கற்றுக் கொடுத்துக்
கொண்டிருப்பவனாய் என்னை கருதுகிறேன்.
இனிவரும் மழையில் நனைந்து பார்க்க, இனி
மலரப்போகும் மலர்களில் மனம் கரைய, வானவில்
ரசிக்க, வாழ்வின் வலி தாங்க, இலையுதிர்காலக்
கிளைகளில் முட்டும் முதல் தளிருக்குக் காத்திருக்க,
புயல்களை எதிர்பார்க்க, பூகம்பங்களை எதிர்கொள்ள,
சக உயிர்களை நேசிக்க, சேமித்த கண்ணீரை அன்புக்குச்
செலவழிக்கக் கற்றுத் தரும் கடமை இருக்கிறது
கவிதைக்கு.
அந்தக் கடமை சுமந்து நடக்கின்றன என் கவிதைகளும்
– வைரமுத்து
************************************
இத்தொகுப்பில் நான் ரசித்த கவிவரிகள் அடுத்த பதிவில் தொடரும்.
நதியலை
umkalodi naanum rasitten
Nice
வணக்கம் நண்பரே, கவியரசு வைரமுத்து அவர்களின் ஏதாவது ஒரு புதுக்கவிதை அனுப்ப முடியுமா? வாழ்க்கையைப் பற்றியதாக இருக்க வேண்டும். என்னிடம் இருந்தவை தொலைந்து போயின. எனது மகனுக்குப் பள்ளிக் கூடத்தில் பபோட்டிக்குத் தேவைப் படுகிறது. கிடைப்பின் மகிழ்ச்சி. நன்றிகள்.!