Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நேர்காணல்’ Category

கான்ஸ், ப்ரான்ஸ்
21 மே 2010

தொன்னூறுகளில் கலைப்படங்களின் நட்சத்திரமான கியரோஸ்டமி கடந்த பத்து ஆண்டுகளாக நிழற்படத்துறையிலும் (still photography) திரைப்பட பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகிறார். இவர் Taste of Cherry படத்திற்கு கான்ஸ் திரைப்படவிழாவின் முக்கிய விருதான Palme d’Or விருதை 1997ஆம் ஆண்டு வென்றவர். ஜூலியட் பினோச்சும் வில்லியம் ஷிமல்லும் நடித்துள்ள இவரது சமீபத்திய படமான ‘Certified Copy’ கான்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட உள்ளது. சில தந்திரமான பிரதிபளிப்புக்களும் நம்பிக்கைகளை பற்றிய தத்துவ எண்ணங்களும் தொன்னூறுகளில் வெளியான ‘close-up’ படத்தைப்போன்றே இருந்தாலும் முதன் முதலில் இரானிற்கு வெளியே படமாக்கப்பட்ட ‘ceritified copy’ சிறந்த படமாக இருக்கின்றது.

இவ்வருட கான்ஸ் திரைப்பட விழாவின் போஸ்டர்களில் முக்கிய முகமான பினோச்சிற்கு இப்படம் மிகச்சிறந்த பெயரை பெற்றுத்தரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இவர் ப்ரான்ஸ், ஹாலிவுட்டைக்கடந்து தாய்வான் இயக்குனரான Hou Hsiao-hsien மற்றும் இஸ்ரேல் இயக்குனரான Amos Gitaiயின் படங்களிலும் நடித்துள்ளார். அடுத்து நடிக்கப்போவது சீன இயக்குனரான Jia Zhangkeயின் படம் என்கிறார்.

ஊடகங்களுக்கான திரையிடலில் சில எதிர் விமர்சனங்களை கண்டிருந்தாலும் ‘Certified Copy’ மிகுந்த உற்சாகமான வரவேற்பையும் கான்ஸ் திரைப்படவிழாவில் முன்னனி இடத்தை வகிக்கக்கூடிய எதிர்ப்பார்ப்பையும் பெற்றுள்ளது.

இவ்வருட கான்ஸ் திரைப்பட தேர்வுகளின் நடுவர்களில் ஒருவராக இருந்திருக்க வேண்டிய இரானிய இயக்குனரான ஜாபர் பனஹி டெஹரான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையை பற்றி கியரோஸ்டமி மிகுந்த வருத்தத்துடன் பேசினார். பனஹியை கௌரவிக்கும் வகையில் எல்லா திரைப்பட போட்டி திரையிடல்களிலும் அவருக்கான இருக்கை காலியாகவே இருக்குமென அறியப்படுகின்றது.

திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட அப்பாஸ் கியரோஸ்டமியுடன் டென்னிஸ் லிம் கண்ட நேர்காணலிலிருந்து ஒரு பகுதி :

கேள்வி : இங்கு இருக்கும்போது ஜாபர் பனஹியை ஆதரித்தும் இரானிய அரசை கண்டனம் செய்தும் குரல்லெழுப்புகின்றீர். டெஹரானில் வசிக்கும் நீங்கள் உங்களின் அடுத்தப் படத்தையும் இரானிலேயே படம்பிடிக்க தீர்மானித்துள்ளீர். இதனால் எழப்போகும் விளைவுகளை பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா?

பதில் : எனது படப்பிடிப்பு அனுமதியை ரத்து செய்து பல வருடங்கள் ஆகிவிட்டன. மேலும் எனது படங்கள் இரானில் வெளியிடப்படுவதில்லை. அதற்கு மேல் அவர்கள் வேறு என்ன செய்யமுடியும். ஆரம்பத்தில் ஜாபர் பனஹியின் பாஸ்போர்டை எடுத்துக்கொண்டது போல் என்னிடத்தும் நடத்துக்கொள்ளலாம் என்ற நினைக்கின்றேன்….தெரியவில்லை என்ன நடக்குமென்று.

கேள்வி : ‘Certified copy’ என்ற படம் தங்களின் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் வேறானது என்று பலரும் கூறுகின்றனர். நீங்களும் அப்படி கருதுகிறீர்களா?

பதில் : நான் என்னுடைய உழைப்பை பற்றிய முழுமையான கருத்தைக்கொண்டவனல்ல. ஒவ்வொரு படமாக செய்கின்றேன். இந்த நேரத்தில் இப்படம் மிகவும் நெருக்கமானதாக இருக்கின்றது. அதனால் இது என் கண்ணை மறைக்கின்றது, என்ன செய்தேன் என்பதை என்னால் சரியாக பார்க்க முடியவில்லை. உதாரணத்திற்கு ‘The wind will carry us’ (1999) படத்தை உருவாக்கியபோது பார்த்தேன். பிறகு சமீபத்தில் மீண்டும் அதை கண்டெடுத்தேன். பத்து வருடங்கள் கழித்து வேறு பார்வைகள் கொண்டு வேறு விதமாக அதை என்னால் பாக்கக்கூடுமெனத் தோன்றியது. தற்பெருமையாக கருதவேண்டாம். எனக்கு அப்படம் பிடித்திருந்தது. வேறொருவரின் படமாக என்னால் அதை பார்க்க முடிந்தது.

கேள்வி : இரானிற்கு வெளியில் நீங்கள் படமாக்கிய முதல் திரைப்படம் இது. எப்போதும் தொழில் முறை நடிகர்கள் அல்லாதவர்களை வைத்து வேலை செய்யும் நீங்கள், இத்திரைப்டத்தில் தேர்ந்த நடிகர்களை கொண்டு அவர்களை ஒரு மொழியல்ல மூன்று மொழிகள் பேசவைத்து இயக்கியிருக்கின்றீர்கள். எழுதி இயக்கும் முறைகளில் இத்தடவை எதாவது வித்தியாமான வழிகளை கையாண்டீர்களா?

பதில் : எப்போதும் போல் பார்ஸியில் எழுதினேன். நடிகர்கள் வெவ்வேறு மொழிகளில் பேசவேண்டும் என்பதைபற்றியோ, மொழிபெயர்க்கப்படவேண்டும் என்பதை பற்றியோ முதலில் கவனம் செலுத்தவில்லை. படப்பிடிப்பின் போதும் சூழல்கள் தான் வேறாக இருந்ததே தவிர செயல்முறைகள் அடிப்படையில் ஒன்றாகவே இருந்தன. ஜூலியட் போன்ற நட்சத்திரங்களுடன் வேலை செய்வது சற்று பதற்றமாக இருந்தது. புதியதாவகவும் வித்தியாசமாகவும் இருக்குமென்று நினைத்தேன். ஆனால் எங்களுக்கிடையில் நல்ல புரிதல் இருந்தது. அவர் தேர்ந்த தொழில் முறை நடிகை என்றாலும் அப்படி நடந்துக்கொள்ளவில்லை.

கேள்வி : அவர் தேர்ந்த தொழில் முறை நடிகை என்றாலும் அப்படி நடந்துக்கொள்ளவில்லை என்று எந்த விதத்தில் கூறுகிறீர்கள்?

பதில் : தொழில் முறை நடிகர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவார்கள் செல்வார்கள். இதயரீதியாக அல்லாமல் தொழில் ரீதியாகவே அனுகுவார்கள். இரான் உட்பட எல்லா இடங்களிலும் பெரும்பாலான நடிகர்கள் அப்படிதான் நடந்துக்கொள்வர்கள். ஆனால் ஜூலியட் அப்படி இல்லை. அவர் அவராகவே இருந்தார். அவரின் அருமையான திறமைகளையும் அனுபவங்களையும் வெளிக்கொணர்ந்தார். என்னுடன் முன்பு பணிபுரிந்தவர்கள் நடந்துக்கொண்டது போலவே இவரும் இருந்தார். இதயபூர்வமாக நடித்தார்.

கேள்வி : தற்போது முடிக்கப்பட்ட இப்படம் அதன் மூல திரைகதைக்கு சமீபமானதாக இருக்கின்றதா அல்லது படப்பிடிப்பின் போது மாற்றங்கள் செய்யப்பட்டனவா?

பதில் : வரிசை படியே படப்பிடிப்பு நடத்தினோம். முதல் பகுதி முழுவதுமாக எழுதப்பட்டிருந்ததால் அதன்வழியிலேயே பயணித்தோம். இரண்டாவது பகுதியை ஒவ்வொரு நாளும் மீண்டும் எழுதினோம். சில காட்சிகளை நீக்கினோம் சிலவற்றை முழுவதுமாக மாற்றி அமைத்தோம்.

கேள்வி : உங்களுடைய பல படங்களில் காரில் நீண்ட வசனங்கள் பேசுவதாக அமைந்துள்ளன. அதுபோல் ‘Certified Copy’யிலும் ஆரம்பக்கட்ட காட்சிகளுண்டு. The Taste of cherryயிலும் நீங்களே கண்ணில் படாத ஓட்டுனராகவோ பயணியாகவோ காரோட்டும் காட்சிகளில் நடித்திருந்தீர்கள். இப்படத்திலும் அப்படிப்பட்ட காட்சிகளை அமைத்துள்ளீர்களா?

பதில் : இம்முறை மிகவும் நேர்த்தியான தேர்ந்த நடிகர்கள் என்பதால் நான் புகைப்பட இயக்குனருடனும், ஒலி நிபுனருடனும், மொழிபெயர்ப்பாளருடனும் பின் இறுக்கையில் ஒளிந்திருந்தேன். நான் அங்கு இருக்கவேண்டிய அவசியமிருக்கவில்லை. Taste of cherryயில் கேமராவிற்கு முன் தனியாக நிற்கும் நடிகர்களுக்கு நான் உடன் இருக்கவேண்டிய தேவை இருந்தது.

என்னுடைய அடுத்த படமும் ஒரு சாலைப்படம் தான். என்னுடைய ‘Ten on 10’ படத்தில் ஏன் இது போன்ற கார் ஓட்டும் காட்சிகளை வைக்கின்றேன் என்று விளக்குவேன். காரில் இருப்பது எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கின்றது. கேமராவின் இருப்பை மிகக்குறைவாகவே உணரவைக்கும் இடங்களில் காரும் ஒன்று. மறக்கமுடியாத படங்களில் ஒன்றான ஸ்பீல்பெர்கின் ‘Duel’ படம் ஹிட்ச்காகின் படங்களை நினைவுபடுத்தினாலும் ஹிட்ச்காகின் படங்களை விட இது எனக்கு மிகவும் பிடித்தமானது.

என்னை காரில் ஒரு கேமராவுடனும் பூட்டிவிடுவதானால் கூடவே ஒரு நடிகையும் இருந்தால் நான் ஆட்சேபிக்கவேமாட்டேன். காரை விட்டு வெளியேற மாட்டேன் என்று உறுதியளிப்பேன். இரானிற்கு திரும்பும் போது பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டால் என்னை சிறையில் அடைக்காமல் காரில் பூட்டிவிடும்படி சொல்லலாம் அவர்களிடம்.

பிகு : இவ்வருடம் ‘Uncle Boonmee Who Can Recall His Past Lives’ என்ற தாய் படம் கான்ஸ் திரைப்பட விழாவின் முக்கிய விருதான the Palme d’Or ஐ பெற்றுள்ளது. Certified Copyயில் நடித்த ஜூலியட் பினோச்சிற்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது

மூலம் :
http://artsbeat.blogs.nytimes.com/2010/05/21/a-double-bill-with-binoche-and-kiarostami/

மொழிபெயர்ப்பு : நதியலை

நன்றி : உன்னதம் ஜூன் 2010 இதழ்

Read Full Post »

 மூலம் :  An interview with Adhaf Soueif by Ahmede Hussain

எகிப்தில் பிறந்தவரான நாவலாசிரியர் அதாஃப் சோய்ப் எகிப்து மற்றும் இங்கிலாந்தில் கல்வி பயின்றவர். UK லான்கஸ்டர் பல்கலைகழகத்தில் மொழியியலில் ஆய்வறிஞர் பட்டம் பெற்ற இவர் அரசியல் மற்றும் கலாச்சார விமர்சகரும் கூட. தற்போது தமது பிள்ளைகளுடன் லண்டன் மற்றும் கெய்ரோவில் வசித்து வருகிறார்.

அவரது படைப்புகள் The Map of Love, In the Eye of the Sun என்ற நாவல்களும், Ayisha, Sandpiper என்ற சிறுகதை தொகுதிகளும் Mezzaterra : Fragments from the Common Ground என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன. மேலும் அரபு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்த Mourid Barghoutiயின் ‘I Saw Ramallah’ 2004ல் வெளியானது. அவரது The Map of Love (London, 1999) இதுவரை 16 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. புக்கர் பரிசு பரிந்துரைக்கு தேர்வான ஆறு நூல்களில் இதுவும் ஒன்று. 2007ஆம் ஆண்டு எழுத்தாளரும் பத்திரிக்கை ஆசிரியருமான அமீத் ஹுசைன் அவரிடம் கண்ட நேர்காணல் இது.

Ahmede : பெரும்பாலான மக்கள் அரபி மொழி பேசும் வட ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதியிலிருந்து வெளியாகும் ஆங்கில புனைவிலக்கியங்கள் எவ்விடம் வகிக்கின்றன?

Adhaf Soueif : பொதுவாக புனைவுகளுக்கான இடம் அல்லது இலக்கியத்திற்கான இடமென்று பார்த்தால் அது சிறுபான்மையாகவே இருக்கின்றது. எண்ணிக்கையை பற்றி சரியாக தெரியவில்லை என்றாலும் மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கு மேல் நாவல் வாசிப்போரின் எண்ணிக்கையிருந்தால் ஆச்சரியம் தான். திரைப்படங்களும் தொலைக்காட்சி தொடர்களும் தான் அதிக பிரசித்திபெற்ற ஊடகங்களாக இருக்கின்றன. தற்போது அரபு தேசங்களில் அரபிய எழுத்தாளரின் ஐரோப்பிய மொழி நாவலை வாசிப்போர் இந்த ஒரு சதவீதத்தில் மூன்றில் ஒரு பங்காக இருக்கக்கூடும்.

அதனால் பொதுவாக ஆங்கில இலக்கியம் இப்பகுதிகளில் எவ்விடம் வகிக்கின்றதென கேட்டால் பெரிதாக இல்லை என்பதே பதிலாக இருக்கும். உங்கள் கேள்வி இப்பகுதியில் இலக்கியம் வாசிப்போரின் மத்தியில் எவ்விடம் வகிக்கின்றதென்றால் நிச்சயம் அதற்கென ஒர் இடம் உண்டென கூற முடியும். விற்பனையாகும் எனது புத்தகங்களின் பெரும் பகுதி அரபிய மொழியை முதல்மொழியாக கொண்டவர்களையே சென்றடைகின்றதென்றே நம்புகிறேன். அரபு ஊடகங்களும் ஒவ்வொரு புதிய புத்தகம் வெளிவரும் போதும் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. மேலும் எகிப்திய பல்கலைக்கழக முதுகலை இலக்கிய மாணவர்கள் ‘ஆங்கிலத்தில் அரபு இலக்கியம்’ சார்ந்த தலைப்புகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர் என்று அறிகிறேன்.

Ahmede : Mourid Barghoutiயின் “I Saw Ramallah” என்ற புத்தகத்தை அரபிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்துள்ளீர். அத்தகைய சிரமமான மொழி நடையை மொழியாக்கம் செய்த அனுபவங்களை பற்றி கூற முடியுமா? அரபிய மொழியில் வாக்கிய அமைப்புகள் ஆங்கிலத்திற்கு முற்றிலும் வேறாக இருப்பதால் கடுமையான பணியாக இருந்திருக்க கூடுமல்லவா?

Adhaf Soueif : ஆமாம். Ra’aytu Ramallah மிகவும் சுவாரஸ்யமான புத்தகம். உரைநடையில் ஒரு கவிஞரின் புதிய முயற்சி. இது மிகவும் நேரடியாகவும் நெருக்கமானதாவும் தோன்றும். ஆசிரியருக்கும் தோன்றியது போலவே ஒவ்வொரு உணர்வும் வாசகனையும் தாக்கும், அதே நேரத்தில் Mourid Barghouti போன்ற கவிஞர்களிடமிருந்து எதிர்ப்பார்க்கும் மேன்மை, பக்குவமான கட்டமைப்பு உயர்ந்த செழுமையான மொழி தனது செயல்களை அறிந்திருக்கும்.

சில தவறான தொடக்கங்களுக்குப் பிறகு அதிக சாவதானம்தான் மோசமான மொழியாக்கதை தருமென்று அறியமுடிந்தது. அரபிய மொழியில் வாசிக்கும் போது ஆங்கிலத்தில் சொல்லிப்பார்த்துக்கொண்டேன். அதை அப்படியே டேப்ரிக்கார்டரில் பதிவு செய்யும் எண்ணம் உதித்தது. அரபிய மொழியின் உடனடித்தன்மையும் பொலிவும் அப்படியே பாதுகாக்கப்பட வேண்டுமென்ற அக்கறையோடு செயல்பட்டேன். இவ்வழி எனக்கு முழு திருப்தியும் அளித்தது. அதனால் பக்கங்களில் இருக்கும் வார்த்தைகளில் பார்வை நகர்ந்துக்கொண்டிருக்க ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதை அப்படியே டேப்ரிக்கார்டரில் பதிவு செய்தேன். பிறகு இருமுறை அதை திருத்தினேன். முடிந்த அளவு அதே வாக்கிய அமைப்பில் கொண்டுவர முயற்சித்தேன். சிலவற்றை மாற்றவும் நேரிட்டது.

Mourid Barghouti எனது நெருங்கிய நண்பர் என்பதால் மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்தேன். மாற்றங்களுக்கு ஒப்புக்கொண்டு மிகவும் உதவியாக இருந்தார். எடுத்துக்காட்டாக அவர் எப்போதும் தான் சந்திக்கும் மக்களை அடைமொழி இட்டே அழைப்பார். நான் டாக்டர் x ஐ சந்தித்தேன், திருமதி y சுற்றிக்காட்டினார். அரபிய மொழியில் இப்படி எழுதுவது வாக்கியத்தோடு கச்சிதமாக பொருந்திப்போகும். ஆனால் ஆங்கிலத்தில் துருத்திக்கொண்டு நிற்கும். அதனால் எல்லா அடைமொழிகளையும் நீக்கிவிட முடிவு செய்தோம். மேலும் சில எழுத்துக்கள் அலங்காரச்சொற்களால் தொடர் வாங்கியங்களாக நீளும். இப்படி எழுதுவது அரபியில் பழகிய ஒன்றென்றாலும் ஆங்கிலத்தில் அப்படி எழுதினால் சரியாக இருக்காது. அதனால் இவை எல்லாவற்றையும் மாற்றினோம். என் மொழியாக்கத்தில் வந்த ‘I saw Ramallah’ வைவிட மூலப்பிரதியான ‘Raayatu Ramallah’ மிகச்சிறந்த புத்தகம் என்றாலும் என்னளவில் நான் முயற்சி செய்தேன்.

Ahmede : உலகமுழுவதும் பரவியுள்ள மத தீவிரவாத அச்சுறுத்தலை எவ்வாறு காண்கிறீர்கள்?

Adhaf Soueif : எல்லா மத தீவிரவாத செயல்களையும் ஒரே பகுப்பாக வைத்து நாம் பேச முடியாதென்றே நம்புகிறேன். எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் கிறிஸ்தவ ஜியொனிசத்தின் செயல்பாடுகள் எகிப்தில் இயங்கும் சலாபி செயல்பாடுகளுக்கு முற்றிலும் வேறானது. அமெரிக்காவை ஆட்கொண்டிருக்கும் கிறிஸ்தவ ஜியொனிசம் அரசியல்வாதிகளால் தேவைக்கேற்றவாரு ஆதிக்கம் செலுத்தப்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. மேலும் அதன் நோக்கம் உலகப்போரை உருவாக்குவதும் உலக அழிவை நோக்கியதும்தான். யூத மத தீவிரவாதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஒரு விதத்தில் அதன் விளைவு பாலஸ்தீனியர்களிடமிருந்து நிலங்களை ஆக்கரமித்த இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களிடத்தில் கொடுமையாக, தீவிரமாக மதவெறியோடு இயங்கச்செய்தது. மற்றொரு விதத்தில் ஜியொன் இப்புவியில் உருவாக முடியாது என்றும் இஸ்ரேலிய நிலை மதங்களுக்கெதிரானதென்ற நம்பிக்கையையும் கொண்ட “நாட்சுரா கார்டி” (Natura Kartei) போன்ற யூத இயக்கங்கள் உருவாக காரணமாக இருக்கின்றது. அதீத அரசியல் பாரபட்சங்களை உணர்ந்ததாலும் இஸ்லாமிய உலகில் மேற்கத்திய கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்துவதினாலான பயத்தாலும் விருப்பமின்மையாலும் இஸ்லாமிய மததீவிரவாதம் தோன்றியது என்று நினைக்கின்றேன். உலகின் பல்வேறு பகுதிகளில் அரசியல் மற்றும் பொருளாதார செயல்கள் மதம் என்ற போர்வைக்குள் செயல்படுவது நிச்சயமாக வருத்தத்திற்குரியதே.

Ahmede : கிழக்கு ஆசிய நாடுகளில் கலையை விட சமூக வாழ்வியல் யதார்த்தமே முக்கிய பங்கு வகிக்கின்றது என்று பலரும் சொல்கின்றனர். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? நாவலாசிரியரின் பங்கு பெண்ணுரிமை பேச்சுரிமை போன்ற அடிப்படை பிரச்சனைகளில் மட்டுமே ஈடுபடவேண்டியதாக உள்ளதா?

Adhaf Soueif : ஒரு கலைஞன் தனக்கு மிகவும் விருப்பமான அல்லது மிகவும் பாதித்த கருவையே தேர்வு செய்ய வேண்டும். அப்படி தேர்வு செய்யப்படுபவை நமது வாழ்நிலம் சார்ந்ததாகவே இருக்கும். ஆனால் எல்லோருக்கும் பொதுவான மனிதம் தான் இறுதியில் எல்லோரையும் இணைக்கின்றது. அதனால் தான் ஒரு எகிப்தியன் ருஷ்யா அல்லது இந்திய அல்லது அமெரிக்க நாவல்களை வாசிக்கவும் புரிந்துக்கொள்ளவும் ரசிக்கவும் முடிகின்றது.

Ahmede : உயர்ந்த கலாச்சார பின்னணியிலிருந்து வந்த நீங்கள் எகிப்திய நாவலாசிரியர் என்று இப்போதும் அழைக்கப்படுகிறீர்கள். ஒரு அரபிய பெண்மணி என்ற வகையில் எத்தனை சுதந்திரமாக உணர்கிறீர்கள்?

Adhaf Soueif : ஆமாம். நான் ஆங்கிலத்தில் எழுதும் ஒரு எகிப்திய நாவலாசிரியர் தான். வேறு யாராக இருக்க முடியும்? மற்ற எல்லோரும் சுதந்திரமாக இருப்பது போலவே நானும் இருக்கின்றேன். என்னை ஈர்க்கும் விஷயங்களை பற்றியும், விரிவாக ஆராய வேண்டிய விஷயங்களை பற்றியும் எழுதுகின்றேன். அரபிய பெண்மணி என்பதாலோ ஒரு நாவல் ஆசிரியர் என்பதாலோ குறிப்பாக எந்த தடையும் இருப்பதாக உணரவில்லை.

Ahmede : 1900ஆம் ஆண்டை கதை காலமாக கொண்ட The Map of Love நாவலில் ஆங்கிலேய பெண்மணி எகிப்தியரிடம் காதல் கொள்வதாக அமைத்துள்ளீர்கள். வரலாற்றில் தனிமனிதனின் பங்களிப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

Adhaf Soueif : பொதுவாக எனக்கு தெரிந்த மக்கள், பேசும் சுவாரஸ்யமான மனிதர்கள் எல்லோருமே அரசியல் மற்றும் பொதுநல அக்கறைகளும் தங்கள் வாழ்விலும் மற்ற எல்லோரின் வாழ்விலும் பங்குவகிக்கின்றன என்று அறிந்து உள்ளனர் என்றே நினைக்கின்றேன். மேலும் எல்லோரின் நலனுக்காகவும் அவர்கள் பொது வாழ்வில் செயல்படக்கூடியவர்கள். பொது வாழ்வைப் பற்றிய அக்கறை இல்லாத மனிதர்கள் வெகு குறைவே. என்னால் பொது வாழ்கையிலிருந்து விலகி செயல்படும் ஒரு வாழ்வை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதுவே என் எல்லா படைப்புகளிலும் பிரதிபலிக்கின்றது என்று நினைக்கின்றேன். நான் உருவாக்கும் கதாபாத்திரங்கள் நிஜக்கதைகளிலும் உண்டு. அதனால் என் கதாபாத்திரங்கள் நிஜ உலகில் குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்திருப்பர். அக்காலகட்டங்களில் நிகழும் அரசியல் அல்லது பொதுச் சம்பவங்கள் அவர்களை பாதிக்கும், அதன் பிரதிபலிப்பாக அவர்கள் அதனை மாற்ற பாடுபடுவர்.
ஜனவரி 2007.

தமிழில் : நதியலை

நன்றி :  அகநாழிகை – ஜூன் 2010

Read Full Post »