Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Yann Martel’ Category

மூன்றாண்டுகளாக புத்தக அலமாரியில் உறங்கிக்கொண்டிருந்த புத்தகத்தை எதேச்சயாய் எடுத்து தூசிதட்டி வாசிக்க துவங்க, சில பக்கங்கள் வாசித்ததுமே ஏன் இத்தனை நாளாக இப்புத்தகத்தை படிக்காமல் விட்டுவிட்டோமென தோன்றும் அளவிற்கு அத்தனை அருமையாக சொல்லப்பட்டிருக்கின்றது இக்கதை. பசிபிக் கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து தப்பித்த ஒரு பதினாறு வயது சிறுவனின் கதையிது.

The Map of Love நாவலில் ஒரு வரி ‘We always know how the story ends. What we don’t know is what happens along the way’ என்று வரும். அப்படிதான் இக்கதையும் பதினாறு வயதில் நடந்த சம்பவத்தை அவர் நாற்பது வயது கடந்த பிறகு விவரிப்பதாக அமைந்திருப்பதால் நிச்சயம் கடலிலிருந்து தப்பித்து கரையேறிவிடுவார் எனத்தெரிந்தும் எவ்வித சாத்தியக்கூறும் இல்லாமல் போகும்போது இது எப்படி நிகழ்ந்தேறியதென அறிந்துக்கொள்ளும் ஆவல் இக்கதையை தொடர்ந்து வாசிக்க தூண்டுதலாய் அமைந்திருக்கின்றது.

முதல் பாகத்தில் இழையோடும் நகைச்சுவை சமயங்களில் வாய்விட்டுச் சிரிக்கச்செய்தது. தனது பெயரான Piscineனை Pissing என்று உச்சரிக்கப்படுவதாலான சங்கடங்களையும், சரியாக உச்சரிக்கப்படாததால் தன் பெயரை சுருக்கி Pi என்று வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தையும், அதற்கு பிறகு மூன்று புள்ளி ஒன்று நான்கு என்று அழைக்கப்படுவதால் கிடைக்கும் நிம்மதியையும் யதார்த்த நகைச்சுவையோடு கலந்து சொல்லப்பட்டிருக்கின்றது.

உதாரணத்திற்கு ‘வார்த்தையின் ஒலி மறைந்துப்போகும் ஆனால் அது உண்டாக்கிய வலி ஆவியாகிப்போனப்பின்னும் மூத்திரத்தின் வாடை தங்கிவிடுவது போல் தங்கிவிடும்’ என்ற வரியை வாசிக்கும்போது சிரிப்பும் பரிதாபமும் ஒருமித்து தோன்றியது. பையின் தந்தை விலங்கியல் பூங்காவின் நிர்வாகியதலால் விலங்குகளை பற்றி பலவும் தெரிந்துக்கொள்கிறார். பூங்காவை நிர்வகிக்கும் முறைகளும் விலங்குகளின் பழக்கவழக்கங்களும், அவைகளை திருப்தியோடு வைத்துக் கொள்ளவேண்டிய அவசியங்களும் மிகுந்த அக்கறையோடு விரிவாக பகிரப்பட்டுள்ளது.

விலங்குகளை சுதந்திரமாக காடுகளில் சுற்றித்திரியவிடாது கூண்டுகளில் அடைத்து வைப்பது அவைகளை துன்புறுத்துதலாகும் என்ற பொதுவான கருத்திற்கு மாற்று கருத்தை வளியுறுத்துகின்றார். விலங்குகள் தங்கள் பழக்கங்களின் அடிப்படையிலேயே வாழ்கின்றன எனவும் அதன் தேவைகள் எல்லாம் எவ்விடத்தில் பூர்த்தியாகின்றனவோ, அதுவே எவ்விடத்தில் நீடித்து தினந்தோறும் கிடைக்கின்றனவோ அவ்விடத்தில் அவை திருப்தியோடு இருக்கும் என்றும் விளக்கியுள்ளார்.

இரண்டாம் பாகம் முழுவதும் பசிபிக் கடலும் கடல்வாழ் உயிரினங்களையும் கொண்டு சிறிதும் தேக்கமின்றி வெகு சிறப்பாக நகர்த்தியிருக்கின்றார். கடலின் பிரம்மாண்டத்தை இரவு பகல் மாற்றங்களுக்கேற்ப விவரித்திருக்கும் விதம் பயத்தையும் வியப்பையும் ஒருமித்து ஏற்படுத்துகின்றது. தங்கள் மேற்கொண்ட கடல் பயணத்தில் கப்பல் மூழ்கிவிட தான் மட்டும் படகில் நான்கு விலங்குகளுடன் விடப்பட்ட நிலையில் தன்னை காப்பாற்றிக்கொள்ள 227 நாட்கள் கடலில் அச்சிறுவன் மேற்கொள்ளும் வெவ்வேறு விதமான முயற்சிகள் தாம் இரண்டாம் பாகம் முழுவதும். படகு பயணத்தின் முதல் வாரத்திலேயே மூன்று விலங்குகள் வலியது வெல்லுமென்ற முறையில் ஒவ்வொன்றாக கொல்லப்படுகின்றன. பின் மீதமிருக்கும் சிங்கமும் சிறுவனும் அச்சிறிய படகில் அத்தனை நாட்கள் ஒன்றாக துயரம், பசி, வேதனை, பயம், வலி என எல்லா கஷ்டங்களுக்கிடையேயும் எப்படி தப்புகிறார்கள் என்பதை சிறப்பாக சொல்லியிருக்கின்றார். இவன் தப்புவதற்கு முக்கிய காரணம் அக்கடலில் தான் உயிரிழக்கப்போவதில்லையென்றும் முயன்ற வரை முயற்சிக்க வேண்டும்மென்ற அச்சிறுவனின் அபார நம்பிக்கை தான். நம்பிக்கையை பற்றி பேசும்போது இப்படிச் சொல்கிறார்.

 “They go as far as the legs of reason will carry them and then they leap”

“To choose doubt as a philosophy of life is akin to choosing immobility as a means of transportation”

இப்புத்தகத்தில் நாம் அறிந்துக்கொள்வதற்கான தகவல்கள் ஏராளமாக இருக்கின்றன. இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்றானபின் மனித மனம் அடையும் மாற்றங்கள் வியப்பானவை. அவை விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றது. கடலில் கடற்றாழைகள் அடர்த்தியாக வளர்ந்து ஒரு தீவு போல் பரந்திருக்கும் இடத்தில் அவன் கழிக்கும் நாட்கள் Cast Away திரைப்படத்தை நினைவுபடுத்தியது.

பாண்டிச்சேரியில் துவங்கும் இக்கதை பையின் வாழ்க்கை முறைகளையும், விலங்கியல் பூங்காவில் விலங்குகளுடனான உறவையும், எல்லா மதங்களிலும் அவன் கொண்ட அதீத ஈடுபாடுகளும் அதனால் பல மனிதர்களுடன் கொண்ட நெருங்கிய தொடர்பும், வெயிலிலும் மழையிலும் கடலில் வாடும் பொழுதுகளில் நம்பிக்கையிழக்காமல் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகளும் நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கின்றதென்றாலும் இப்புத்தகத்தின் வெகுசிறப்பம்சமே நாம் எதிர்பாரா வகையில் கதையை முடித்த விதம்தான். இதைபற்றி எழுதுவதை விட வாசித்து அறிந்துக்கொள்வதே மேலானது. 

இந்நாவல் 2002ஆம் ஆண்டில் புக்கர் பரிசை வென்றது. இக்கதையை திரைப்படமாக்கும் முயற்சிகளும் தொடர்கின்றன.

Book : Life of Pi
Author : Yann Martel
Pages : 336
First Edition : 2001

Read Full Post »