உலகெங்கிலும் உள்ள பெண் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் ஒரு புதிய தளமாக Belletrista வெளியாகியுள்ளது. நானும் பெண் என்பதாலேயே பெண்களால் துவங்கப்படும் புதிய முயற்சிகள் தெரியவரும் போது மகிழ்ச்சியுடன் கலந்த உற்சாகம் பிறந்துவிடுகிறது. Words Without Borders மூலம் இத்தளம் பற்றிய செய்தி அறிமுகமானதும் உடனே சென்று பார்வையிட்டேன். எத்தனை புத்தகங்கள் எத்தனை எழுத்தாளர்கள், முதல் இதழிலேயே இத்தனை அறிமுகங்களா என்று பிரமிப்பாக இருந்தது.
பெண் எழுத்தாளர்களின் புத்தக விமர்சனங்கள், உலகெங்கிலும் உள்ள பெண் எழுத்தாளர்களின் சமீபமாக வெளிவந்த அல்லது வெளிவர இருக்கும் புத்தகங்கள் பற்றிய தகவல்கள், சிறப்பு கட்டுரை & கதை பக்கங்கள், மேலும் நேர்காணல்கள், கலந்துரையாடல்கள், இலக்கிய செய்திகளின் தொகுப்புகள் என எல்லாம் ஓரிடத்தில் வாசிக்க கிடைப்பது பெரும்மகிழ்ச்சியளிப்பதாய் இருக்கின்றது.
முதல் இதழில் வெளியாகியுள்ள 16 புத்தக விமர்சனங்களில் இந்தியப்பெண்மணி லாவண்யா சங்கரனின் முதல் சிறுகதை தொகுப்பான The Red Carpet : Bangalore stories பற்றிய விமர்சனம் வந்துள்ளது. விமர்சனம் என்ற முறையில் இல்லாமல் நூலை பற்றிய சிறு குறிப்பாகவே பெரும்பாலான பதிவுகள் அமைந்திருக்கின்றன. புதிய புத்தக அறிமுகங்களில் சகித்திய அகெதமி விருது பெற்ற Sashi Deshpande வின் In the country of Deceit என்ற நூல் இடம்பெற்றுள்ளது.
இவ்விதழின் மூலம் Afghan Women’s Writing Project என்ற வலைதளம் பற்றி தெரியவந்தது. இது அப்கான் பெண்களுக்கான எழுத்துப்பயிற்சி களமாக அமைந்திருக்கின்றது. இத்தளத்தின் குறிக்கோளும் இயக்கமும் பற்றி இங்கு வாசிக்கலாம். ‘தற்கொலை செய்து கொள்ள எங்கள் கிராமத்தில் அடுக்குமாடி கட்டிடங்கள் இல்லாததாலும், விஷம் இல்லாததாலும் இவள் ஆணிகளை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்தாள்’ என்ற வரிகளை வாசிக்கும் போது அதிர்ச்சியாகவே இருந்தது. பெரும்பாலான கட்டுரைகள் அவ்வாராகவே இடம்பெற்றிருக்கின்றன. இப்பதிவில் வெளியாகிய ரோயாவின் ஒரு கவிதை தமிழில்….
ஆப்பிள் தோட்டம்
என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாய்
நம் அண்டைவீட்டுத் தோட்டத்தில்
நான் பயத்தோடு இருந்ததை நீ அறியவில்லை
ஒரு அப்பிளை திருடினேன்
தோட்டக்காரன் கோபத்தோடு
என்னை துரத்திக்கொண்டு ஓடிவந்தான்
உன் கைகளில் அப்பிள் இருப்பதை கண்டு
என்னை திரும்பிப்பார்த்தான்
நீ கடித்த ஆப்பிள் உன் கைகளிலிருந்து நழுவியது
சென்றுவிட்டாய்…
வருடங்கள் கடந்தும்
உன் காலடித்தடங்கள்
என்னுள் பதிந்திருக்கின்றன
காயப்படுத்துகின்றன
ஏனென்று வியக்கிறேன்
பெண் எழுத்தாளர்களின் இப்புதிய முயற்சிகள் பாராட்டுக்குரியவை. இவர்கள் தொடர்ந்து இதே வேகத்துடன் செயல்படவும், பல படைப்புகளை வெளிகொண்டுவரவும், உலகெங்கிலும் உள்ள ஏராளமான பெண் எழுத்தாளர்களை உலகிற்கு அறியத்தரவும் வாழ்த்துவோம்.