உரையாடல்களே இல்லாமல் முழுவதுமே எண்ணவோட்டங்களாகக் கொண்டு கதையை இத்தனை சுவாரிஸ்யமாக நகர்த்திவிட முடியுமா என்று ஆச்சரியமாக உள்ளது. முழுக்க முழுக்க அகத்தைக்கொண்டே எழுதப்பட்ட கதையிது. ‘நனவோடை எழுத்து’ (The Stream of Consciousness) என்ற இவ்வுத்தி மிகவும் ஈர்க்கக்கூடியதாக உள்ளது.
ஆறு நண்பர்கள்….ஒருவருடைய சிந்தனை முடிய அடுத்தவருடையது தொடங்குகிறது. அவர்களுடைய பள்ளிப்பருவத்தி்லிருந்து துவங்கி முதுமை வரை கதை நகர்கிறது சிந்தனையிலேயே. கால மாற்றங்கள் பற்றியும், நிகழ்வுகளை பற்றியும் எண்ணங்களின்வாயிலாகவே அறியத்தருகிறார் ஆசிரியர்.
பள்ளி பருவம் முடிந்து இருமுறை (இருபதுகளில் ஒரு முறையும் மத்திய வயதில் ஒரு முறையும்) அனைவரும் சேர்ந்து ஓரிடத்தில் சந்தித்துக்கொள்கிறார்கள். அப்பொழுதும் கூட உரையாடல்களே இல்லாமல் எண்ணவோட்டங்களாவே சிறப்பாக நகர்த்திச்சென்றிருக்கிறார். தொடர்வோட்டத்தில் ஒருவர் ஓடிச்சென்று அடுத்தவர் கையில் கொடுக்க அதை அவர் ஏந்திச்சென்று மற்றொருவர் கையில் ஒப்படைப்பார். அப்படியாகத்தான் இந்த ஆறு நபர்களின் எண்ணவோட்டங்களும் ஒருவரில் இருந்து அடுத்தவருக்கு நகர்கிறது. ஏழாவதாக இன்னுமொரு நண்பர் இருக்கிறார். அவரை பற்றிய தகவல்கள் மற்ற ஆறு நபர்களின் எண்ணங்களிலிருந்தே அறிந்துக்கொள்ள முடிகிறது. அவர் இடையில் இறந்தும் விடுகிறார்.
கால நகர்வுக்கேற்ப அவர்களின் சிந்தனைகளும் தெளிவாக மெருகேறிக்கொண்டே வருகிறது. பள்ளிப்பருவத்திற்கு பிறகு அவர்கள் நெருக்கமாக யாரையும் சந்திக்கவில்லையா என்று எண்ணத்தோன்றுகிறது. கதை முழுவதும் வேறு எவறொருவரை பற்றிய அவர்களின் சிந்தனையும் அதிகமாகப்பதியப்படவில்லை. ஒவ்வொரு பருவமாக அவர்கள் கடந்து சொல்லும் போதும் எல்லா எண்ணங்களும் தங்களைப்பற்றியதாகவும் தங்களின் பள்ளி நண்பர்களைபற்றியதாகவுமே பெரும்பாலும் அமைந்திருக்கிறது.
கதை முழுக்க முழுக்க கவித்துவத்தால் நிரம்பி உள்ளது. புத்தகத்தை திறந்து எந்த ஒரு பத்தியை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம். நமக்கு தேவையான ஏதோ ஒன்று நிச்சயம் அப்பத்தியில் மிளிறும். இது ஒரு முறை வாசித்து மறக்கக்கூடிய புத்தகமாக இல்லை. மீண்டும் மீண்டும் இதை வாசிக்க வேண்டும். அதுவும் கடைசி அத்தியாயமான ஒரே ஒருவர் மட்டும் நம்மிடம் உரையாடும்போது அப்படியே நெகிழச்செய்கிறது. அலைகளைப்போலவே ஓயாமல் அடித்துக்கொண்டிருக்கிறது இப்புத்கத்திலுள்ள வரிகளும்.
இக்கதையை சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை ஒன்பது அத்தியாயங்களாக பிரித்து வாழ்வின் ஒவ்வொரு மாற்றத்தையும் உணர்வையும் அற்புதமாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். அபாரமான மொழிநடையில் எத்தனை விதமான எண்ணவெளிப்பாடுகள். புத்தகம் முழுக்க அடிக்கோடுகளால் நிரம்பின. அவசியம் இப்படியான புத்தகங்களை தமிழிலும் வாசிக்க வேண்டும் இதே மொழிவளத்தோடு. யார் யாரிடம் பேசுகிறார்கள் என்று ஆரம்ப சில பக்கங்களில் குழப்பமாக இருந்தாலும் சில பக்கங்களை கடந்ததுமே அந்த எழுத்துடன் நம்மால் பயணிக்க முடிகிறது. மேலும் அவ்வெழுத்துக்கள் புத்தகத்தை மூடியபிறகும் நம்முடன் தொடர்ந்து வருகிறது.
Book : The Waves
Author : Virginia Woolf
Pages : 231
First Edition : 1931
Author : Virginia Woolf
Pages : 231
First Edition : 1931
வெர்ஜீனியா உல்ஃப் பற்றிய குறிப்புகளை கவிஞர் சுகுமாரனின் இக்கட்டுரையில் வாசிக்கலாம். http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=438
இப்புத்தகத்தை இணையத்தில் வாசிக்க விருப்பமுள்ளவர்கள் இங்கு சென்று வாசிக்கலாம். http://gutenberg.net.au/ebooks02/0201091h.html