Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Naguib Mahfouz’ Category

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் நகிப் மஹ்ஃபூஸ் (Naguib Mahfouz) 1965ல் வெளியான ‘The Beggar’ சமீபத்தில் வாசித்தேன். அரசியல் தன்மைகள் கொண்ட எழுத்துகளுக்கு எகிப்தில் நிலவிய பலத்த தடைகளும் நிராகரிப்புகளும் நிறைந்த காலகட்டங்களில் வெளிவந்த இந்நாவல் அரசியல், காமம், தேடல், எகிப்திய புரட்சி முதலியவற்றை மேலோட்டமாகவே தொட்டிருக்கின்றது. மாறாக இவரது பல நாவல்கள் எகிப்திய வரலாற்றையும், புரட்சிகளையும், அந்நாட்டு கலாச்சாரங்களையும் விரிவாக பேசுபவை.

வழக்கறிஞரான ஒமர் அத்துறையில் பேரும் பணமும் சம்பாதித்து யாவரும் மதிக்கும் நிலையை அடைந்த பின்னர் ஒரு பிடிப்பற்ற தன்மையை உணருகின்றார். இத்தனை காலம் தன்னுடனிருந்த குடும்பம், தொழில், நண்பர்கள் என எதன்மீதும் நாட்டமில்லாமல் வேறெதையோ தேடுகின்றது அவரது மனது. வாழ்கையின் அர்த்தமின்மை அவருக்கு சலிப்பூட்டுகின்றது. நாற்பத்தைந்து வயதடைந்த அவருக்கு மத்திய வயது நெருக்கடி ‘Mid life crisis’ பெரும் பாரமாகிவிடுகின்றது.

தனது நண்பரும் மருத்துவருமானவரிடன் ஆலோசனை கேட்க அவர் உடலுக்கு ஒரு குறையுமில்லயென்றும் தொடர்ந்து நடைபயிற்சி மேற்கொள்ளவும் சரியான உணவு முறையும் பின்பற்றுமாறும் பொதுவான ஆலோசனைகளையே வழங்குகின்றார். சில நாட்கள் பணியிலிருந்து ஓய்வெடுத்து குடும்பத்துடன் வெளியூர் எங்காவது பயணம் மேற்கொள்ளச்சொல்கின்றார். இவை ஒன்றும் பயனளிக்காமல் தொடர்ந்து அமைதியின்மையையும் போதாமையையும் ஒமர் உணருகின்றார். வேலையும் வீடும் சலிக்கத்துவங்குகின்றன. அர்த்தமற்ற வாழ்வை வாழ்வதாகவும் தனக்கு வேறெதோ ஒன்று தேவையெனவும் அத்தேவை எதுவென தெரியாமல் குழம்புகின்றார்.

பிறகு காதலும் காமமும் மட்டுமே தன் வாழ்வை அர்த்தப்படுத்த முடியுமென நினைக்கின்றார். இரவு விடுதிகளில் நடனமாடும் பெண்களுடன் உறவு கொள்த்துவங்குகிறார். காதலித்து கலப்பு திருமணம் செய்துக்கொண்ட தன் மனைவியையும் பதின்ம வயது மகளையும், இளைய மகனையும் பிரிந்து தன் வீட்டைவிட்டு வெளியேறி வேறு பெண்ணுடன் சிலகாலம் தங்குகின்றார். இதுவே தன் தேவையாக இருந்திருக்கின்றது என்றும் அவ்வுறவே தன்னை திருப்திப்படுத்தும் என்றும் அப்பெண்ணின் காதலில் திளைக்கின்றார். ஆனால் அவர் மனதிற்கு அவை தற்காலிக நிவாரணத்தையே அளிக்கின்றது. நாளடைவில் அவளும் சலிக்கத்துவங்கிவிடுகின்றாள்.

இக்கதையை வாசிக்கும்போது குஷ்வந்த் சிங்கின் The Company of Women (1999) நினைவிற்கு வந்தது. அக்கதையில் கதாநாயகனின் தேவை பெண்ணின் உடல் மட்டுமேயாக இருந்தது. அவன் அணுகும் ஒவ்வொரு பெண்ணை பற்றியும், உடல் உறவுகளை பற்றியும் விரிவாக வெளிப்படையாகவே எழுதியிருப்பார் ஆசிரியர். தனது எண்பத்தி மூன்று வயதில் இந்நாவலை எழுதத்துவங்கி எண்பத்தி ஐந்து வயதில் இதனை வெளியிட்டார். முதிர்ந்த வயதில் இத்தகைய நாவலை வெளியிட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு மட்டுமல்லாமல் வெவ்வேறு பெண்களுடன் கலவுவதையும் அதீத காமவிச்சையையும் பேசும் ஒரு போர்னோ நாவலென்றே பலராலும் இப்புதினம் விமர்சிக்கப்பட்டது.

ஆனால் ‘The Beggar’ நாவலில் ஒமர் தன் தேவை இன்னதென்றே அறியாமல் பெண்ணின் வாயிலாக அதை கண்டடையவும் திருப்திக்கொள்ளவும் விழைகின்றார். வெவ்வேறு பெண்களாக தேடி எல்லாம் சலிப்படைந்து மீண்டும் தன் வீட்டிற்கே திரும்புகின்றார். தன் இளவயது விருப்பமான கவிதை எழுதுதல் தன்னை குணப்படுத்தலாமமென முயற்சித்து அதிலும் தோல்வியே காண்கின்றார். மனது ஒரு நிலைக்கொள்ளாமல் தவித்தபடியே இருக்க தனது அலுவலகத்தை சிறையிலிருந்து விடுதலையாகி வரும் தன் இளவயது நண்பனிடன் ஒப்படைத்துவிட்டு மீண்டும் எல்லோரையும் விட்டு தனித்து வாழ துவங்குகின்றார்.

சோஷியலிஸத்தை தொடாத நகிப் மஹ்ஃபூஸின் கதைகள் இல்லையென்றே சொல்கிறார்கள். தற்போது வாசிக்கும் அவரின் Karnak Cafeயிலும் எகிப்த்திய புரட்சி, சோஷியலிஸத்தை பேசுகின்றார். சில பக்கங்களே கடந்திருப்பதால் இப்புத்தகத்தை பற்றி பிறகு. இப்புதினத்திலும் ஒமர் தனது கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் இணைந்து தீவிர சோஷியலிஸவாதிகளாக இருந்து தனது நண்பனின் கைதிற்கு பிறகு கட்டாய மாற்றங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொள்கின்றார். மத்திய வயது நெருக்கடிகளில் சிக்கிய ஒமருக்கு அதிலிருந்து வெளிவர சரியான வழிகள் புலப்படாத நிலையில் அவரது மனம் பிறழ்துவிடுவதாக முடிகின்றது கதை. விரிவான தகவல்களோ குறிப்புகளோ அன்றி ஒற்றைத்தன்மையுடன் மேலோட்டமாகவே பேசப்பட்டிருக்கும் இப்புதினம் வாசிக்க வெகுசாதாரணமாகவே இருந்தது.

Read Full Post »