Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Adhaf Soueif’ Category

 மூலம் :  An interview with Adhaf Soueif by Ahmede Hussain

எகிப்தில் பிறந்தவரான நாவலாசிரியர் அதாஃப் சோய்ப் எகிப்து மற்றும் இங்கிலாந்தில் கல்வி பயின்றவர். UK லான்கஸ்டர் பல்கலைகழகத்தில் மொழியியலில் ஆய்வறிஞர் பட்டம் பெற்ற இவர் அரசியல் மற்றும் கலாச்சார விமர்சகரும் கூட. தற்போது தமது பிள்ளைகளுடன் லண்டன் மற்றும் கெய்ரோவில் வசித்து வருகிறார்.

அவரது படைப்புகள் The Map of Love, In the Eye of the Sun என்ற நாவல்களும், Ayisha, Sandpiper என்ற சிறுகதை தொகுதிகளும் Mezzaterra : Fragments from the Common Ground என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன. மேலும் அரபு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்த Mourid Barghoutiயின் ‘I Saw Ramallah’ 2004ல் வெளியானது. அவரது The Map of Love (London, 1999) இதுவரை 16 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. புக்கர் பரிசு பரிந்துரைக்கு தேர்வான ஆறு நூல்களில் இதுவும் ஒன்று. 2007ஆம் ஆண்டு எழுத்தாளரும் பத்திரிக்கை ஆசிரியருமான அமீத் ஹுசைன் அவரிடம் கண்ட நேர்காணல் இது.

Ahmede : பெரும்பாலான மக்கள் அரபி மொழி பேசும் வட ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதியிலிருந்து வெளியாகும் ஆங்கில புனைவிலக்கியங்கள் எவ்விடம் வகிக்கின்றன?

Adhaf Soueif : பொதுவாக புனைவுகளுக்கான இடம் அல்லது இலக்கியத்திற்கான இடமென்று பார்த்தால் அது சிறுபான்மையாகவே இருக்கின்றது. எண்ணிக்கையை பற்றி சரியாக தெரியவில்லை என்றாலும் மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கு மேல் நாவல் வாசிப்போரின் எண்ணிக்கையிருந்தால் ஆச்சரியம் தான். திரைப்படங்களும் தொலைக்காட்சி தொடர்களும் தான் அதிக பிரசித்திபெற்ற ஊடகங்களாக இருக்கின்றன. தற்போது அரபு தேசங்களில் அரபிய எழுத்தாளரின் ஐரோப்பிய மொழி நாவலை வாசிப்போர் இந்த ஒரு சதவீதத்தில் மூன்றில் ஒரு பங்காக இருக்கக்கூடும்.

அதனால் பொதுவாக ஆங்கில இலக்கியம் இப்பகுதிகளில் எவ்விடம் வகிக்கின்றதென கேட்டால் பெரிதாக இல்லை என்பதே பதிலாக இருக்கும். உங்கள் கேள்வி இப்பகுதியில் இலக்கியம் வாசிப்போரின் மத்தியில் எவ்விடம் வகிக்கின்றதென்றால் நிச்சயம் அதற்கென ஒர் இடம் உண்டென கூற முடியும். விற்பனையாகும் எனது புத்தகங்களின் பெரும் பகுதி அரபிய மொழியை முதல்மொழியாக கொண்டவர்களையே சென்றடைகின்றதென்றே நம்புகிறேன். அரபு ஊடகங்களும் ஒவ்வொரு புதிய புத்தகம் வெளிவரும் போதும் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. மேலும் எகிப்திய பல்கலைக்கழக முதுகலை இலக்கிய மாணவர்கள் ‘ஆங்கிலத்தில் அரபு இலக்கியம்’ சார்ந்த தலைப்புகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர் என்று அறிகிறேன்.

Ahmede : Mourid Barghoutiயின் “I Saw Ramallah” என்ற புத்தகத்தை அரபிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்துள்ளீர். அத்தகைய சிரமமான மொழி நடையை மொழியாக்கம் செய்த அனுபவங்களை பற்றி கூற முடியுமா? அரபிய மொழியில் வாக்கிய அமைப்புகள் ஆங்கிலத்திற்கு முற்றிலும் வேறாக இருப்பதால் கடுமையான பணியாக இருந்திருக்க கூடுமல்லவா?

Adhaf Soueif : ஆமாம். Ra’aytu Ramallah மிகவும் சுவாரஸ்யமான புத்தகம். உரைநடையில் ஒரு கவிஞரின் புதிய முயற்சி. இது மிகவும் நேரடியாகவும் நெருக்கமானதாவும் தோன்றும். ஆசிரியருக்கும் தோன்றியது போலவே ஒவ்வொரு உணர்வும் வாசகனையும் தாக்கும், அதே நேரத்தில் Mourid Barghouti போன்ற கவிஞர்களிடமிருந்து எதிர்ப்பார்க்கும் மேன்மை, பக்குவமான கட்டமைப்பு உயர்ந்த செழுமையான மொழி தனது செயல்களை அறிந்திருக்கும்.

சில தவறான தொடக்கங்களுக்குப் பிறகு அதிக சாவதானம்தான் மோசமான மொழியாக்கதை தருமென்று அறியமுடிந்தது. அரபிய மொழியில் வாசிக்கும் போது ஆங்கிலத்தில் சொல்லிப்பார்த்துக்கொண்டேன். அதை அப்படியே டேப்ரிக்கார்டரில் பதிவு செய்யும் எண்ணம் உதித்தது. அரபிய மொழியின் உடனடித்தன்மையும் பொலிவும் அப்படியே பாதுகாக்கப்பட வேண்டுமென்ற அக்கறையோடு செயல்பட்டேன். இவ்வழி எனக்கு முழு திருப்தியும் அளித்தது. அதனால் பக்கங்களில் இருக்கும் வார்த்தைகளில் பார்வை நகர்ந்துக்கொண்டிருக்க ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதை அப்படியே டேப்ரிக்கார்டரில் பதிவு செய்தேன். பிறகு இருமுறை அதை திருத்தினேன். முடிந்த அளவு அதே வாக்கிய அமைப்பில் கொண்டுவர முயற்சித்தேன். சிலவற்றை மாற்றவும் நேரிட்டது.

Mourid Barghouti எனது நெருங்கிய நண்பர் என்பதால் மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்தேன். மாற்றங்களுக்கு ஒப்புக்கொண்டு மிகவும் உதவியாக இருந்தார். எடுத்துக்காட்டாக அவர் எப்போதும் தான் சந்திக்கும் மக்களை அடைமொழி இட்டே அழைப்பார். நான் டாக்டர் x ஐ சந்தித்தேன், திருமதி y சுற்றிக்காட்டினார். அரபிய மொழியில் இப்படி எழுதுவது வாக்கியத்தோடு கச்சிதமாக பொருந்திப்போகும். ஆனால் ஆங்கிலத்தில் துருத்திக்கொண்டு நிற்கும். அதனால் எல்லா அடைமொழிகளையும் நீக்கிவிட முடிவு செய்தோம். மேலும் சில எழுத்துக்கள் அலங்காரச்சொற்களால் தொடர் வாங்கியங்களாக நீளும். இப்படி எழுதுவது அரபியில் பழகிய ஒன்றென்றாலும் ஆங்கிலத்தில் அப்படி எழுதினால் சரியாக இருக்காது. அதனால் இவை எல்லாவற்றையும் மாற்றினோம். என் மொழியாக்கத்தில் வந்த ‘I saw Ramallah’ வைவிட மூலப்பிரதியான ‘Raayatu Ramallah’ மிகச்சிறந்த புத்தகம் என்றாலும் என்னளவில் நான் முயற்சி செய்தேன்.

Ahmede : உலகமுழுவதும் பரவியுள்ள மத தீவிரவாத அச்சுறுத்தலை எவ்வாறு காண்கிறீர்கள்?

Adhaf Soueif : எல்லா மத தீவிரவாத செயல்களையும் ஒரே பகுப்பாக வைத்து நாம் பேச முடியாதென்றே நம்புகிறேன். எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் கிறிஸ்தவ ஜியொனிசத்தின் செயல்பாடுகள் எகிப்தில் இயங்கும் சலாபி செயல்பாடுகளுக்கு முற்றிலும் வேறானது. அமெரிக்காவை ஆட்கொண்டிருக்கும் கிறிஸ்தவ ஜியொனிசம் அரசியல்வாதிகளால் தேவைக்கேற்றவாரு ஆதிக்கம் செலுத்தப்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. மேலும் அதன் நோக்கம் உலகப்போரை உருவாக்குவதும் உலக அழிவை நோக்கியதும்தான். யூத மத தீவிரவாதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஒரு விதத்தில் அதன் விளைவு பாலஸ்தீனியர்களிடமிருந்து நிலங்களை ஆக்கரமித்த இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களிடத்தில் கொடுமையாக, தீவிரமாக மதவெறியோடு இயங்கச்செய்தது. மற்றொரு விதத்தில் ஜியொன் இப்புவியில் உருவாக முடியாது என்றும் இஸ்ரேலிய நிலை மதங்களுக்கெதிரானதென்ற நம்பிக்கையையும் கொண்ட “நாட்சுரா கார்டி” (Natura Kartei) போன்ற யூத இயக்கங்கள் உருவாக காரணமாக இருக்கின்றது. அதீத அரசியல் பாரபட்சங்களை உணர்ந்ததாலும் இஸ்லாமிய உலகில் மேற்கத்திய கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்துவதினாலான பயத்தாலும் விருப்பமின்மையாலும் இஸ்லாமிய மததீவிரவாதம் தோன்றியது என்று நினைக்கின்றேன். உலகின் பல்வேறு பகுதிகளில் அரசியல் மற்றும் பொருளாதார செயல்கள் மதம் என்ற போர்வைக்குள் செயல்படுவது நிச்சயமாக வருத்தத்திற்குரியதே.

Ahmede : கிழக்கு ஆசிய நாடுகளில் கலையை விட சமூக வாழ்வியல் யதார்த்தமே முக்கிய பங்கு வகிக்கின்றது என்று பலரும் சொல்கின்றனர். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? நாவலாசிரியரின் பங்கு பெண்ணுரிமை பேச்சுரிமை போன்ற அடிப்படை பிரச்சனைகளில் மட்டுமே ஈடுபடவேண்டியதாக உள்ளதா?

Adhaf Soueif : ஒரு கலைஞன் தனக்கு மிகவும் விருப்பமான அல்லது மிகவும் பாதித்த கருவையே தேர்வு செய்ய வேண்டும். அப்படி தேர்வு செய்யப்படுபவை நமது வாழ்நிலம் சார்ந்ததாகவே இருக்கும். ஆனால் எல்லோருக்கும் பொதுவான மனிதம் தான் இறுதியில் எல்லோரையும் இணைக்கின்றது. அதனால் தான் ஒரு எகிப்தியன் ருஷ்யா அல்லது இந்திய அல்லது அமெரிக்க நாவல்களை வாசிக்கவும் புரிந்துக்கொள்ளவும் ரசிக்கவும் முடிகின்றது.

Ahmede : உயர்ந்த கலாச்சார பின்னணியிலிருந்து வந்த நீங்கள் எகிப்திய நாவலாசிரியர் என்று இப்போதும் அழைக்கப்படுகிறீர்கள். ஒரு அரபிய பெண்மணி என்ற வகையில் எத்தனை சுதந்திரமாக உணர்கிறீர்கள்?

Adhaf Soueif : ஆமாம். நான் ஆங்கிலத்தில் எழுதும் ஒரு எகிப்திய நாவலாசிரியர் தான். வேறு யாராக இருக்க முடியும்? மற்ற எல்லோரும் சுதந்திரமாக இருப்பது போலவே நானும் இருக்கின்றேன். என்னை ஈர்க்கும் விஷயங்களை பற்றியும், விரிவாக ஆராய வேண்டிய விஷயங்களை பற்றியும் எழுதுகின்றேன். அரபிய பெண்மணி என்பதாலோ ஒரு நாவல் ஆசிரியர் என்பதாலோ குறிப்பாக எந்த தடையும் இருப்பதாக உணரவில்லை.

Ahmede : 1900ஆம் ஆண்டை கதை காலமாக கொண்ட The Map of Love நாவலில் ஆங்கிலேய பெண்மணி எகிப்தியரிடம் காதல் கொள்வதாக அமைத்துள்ளீர்கள். வரலாற்றில் தனிமனிதனின் பங்களிப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

Adhaf Soueif : பொதுவாக எனக்கு தெரிந்த மக்கள், பேசும் சுவாரஸ்யமான மனிதர்கள் எல்லோருமே அரசியல் மற்றும் பொதுநல அக்கறைகளும் தங்கள் வாழ்விலும் மற்ற எல்லோரின் வாழ்விலும் பங்குவகிக்கின்றன என்று அறிந்து உள்ளனர் என்றே நினைக்கின்றேன். மேலும் எல்லோரின் நலனுக்காகவும் அவர்கள் பொது வாழ்வில் செயல்படக்கூடியவர்கள். பொது வாழ்வைப் பற்றிய அக்கறை இல்லாத மனிதர்கள் வெகு குறைவே. என்னால் பொது வாழ்கையிலிருந்து விலகி செயல்படும் ஒரு வாழ்வை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதுவே என் எல்லா படைப்புகளிலும் பிரதிபலிக்கின்றது என்று நினைக்கின்றேன். நான் உருவாக்கும் கதாபாத்திரங்கள் நிஜக்கதைகளிலும் உண்டு. அதனால் என் கதாபாத்திரங்கள் நிஜ உலகில் குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்திருப்பர். அக்காலகட்டங்களில் நிகழும் அரசியல் அல்லது பொதுச் சம்பவங்கள் அவர்களை பாதிக்கும், அதன் பிரதிபலிப்பாக அவர்கள் அதனை மாற்ற பாடுபடுவர்.
ஜனவரி 2007.

தமிழில் : நதியலை

நன்றி :  அகநாழிகை – ஜூன் 2010

Read Full Post »

mapஎகிப்த் நாடு ஆங்கிலேயரின் ஆட்சிப்பிடியில் இருந்த 1900 காலகட்டங்களையும், 1997 – 1998 காலகட்டங்களையும் பின்னனியாகக்கொண்டும் இரண்டு காலத்திலும் பயணிக்கின்றது இக்கதை. இப்புத்தகத்தின் பெயரை கொண்டு இது ஒரு காதல் கதையாக இருக்மென நினைத்து வாசித்தேன். ஆனால் காதலை மட்டும் சொல்லும் படைப்பாக இல்லாமல் இரு வேறு கால கட்டங்களிலுமான வரலாற்று நிகழ்வுகளை, அரசியலை, சுதந்திர போராட்டங்களை, எகிப்த் நிலத்தின் நாகரீகத்தினை, நூறாண்டுகளில் அது அடைந்த மாற்றங்களையும் பதிவுசெய்துள்ளது.

“என்னால் முடிந்தவரை அவளுக்கு புரியவைக்க முயற்சித்துவிட்டேன். ஆனால் அவளால் புரிந்துக்கொள்ள முடியவில்லை, புரிந்துக்கொள்ளவும் மாட்டாள். நம்பிக்கை இழக்காமல் எப்போதும் அவருக்காக காத்திருக்கின்றாள்” என்ற வரிகளில் மிகவும் சாதாரணமாகவே கதை தொடங்கியதெனினும் அதே வரிகளில் கதை நிறைவடையும் போது அவ்வரிகளின் தாக்கம் நம்மை முழுமையாக ஆக்கரமிக்கின்றது. எந்த ஒரு உணர்வையும் தனித்து பார்க்கும் போது அதன் வீரியத்தை முழு அளவில் உள்வாங்கிக்கொள்ள ஏதுவாய் இருப்பதில்லை. அதுவே சூழலோடும் தன்மையோடும் அறியப்படும்போது நம்மையும் அதனோடு ஒன்றி விடச்செய்கின்றது.

தாயின் உடல் நலம் சீறற்றுப்போனதால் மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுவிட, அந்நேரத்தில் ஒரு பழைய டரங்கு பெட்டியை தன் தாயின் வீட்டில் காண்டடைகிறாள் லண்டனில் வசிக்கும் இசபெல். அதில் பல காகிதங்களும், உரைகளும், கடிதங்கலும், செய்திதாள்களிலிருந்து வெட்டப்பட்ட பக்கங்களும் மேலும் சில பொருட்களையும் காண்கிறாள். அதிலுள்ள குறிப்புகள் எல்லாம் அரபி மொழியிலும், பெரன்ச்சிலும், சில ஆங்கிலத்திலும் இருக்கின்றன. தன் குடும்பத்தை பற்றிய வரலாறு அதிலிருக்கக்கூடும் என்றும் அதை அறிந்துக்கொள்ளும் ஆவலில் தன் நண்பரான உமரை அணுகுகிறாள். அவர் தன் தங்கையான எகிப்தில் வசிக்கும் அமல் இதற்கு உதவி புரிவாரென அவளிடம் அனுப்பி வைக்கிறார். அமலின் வாயிலாக நூறாண்டிற்கு முன் அவர்கள் குடும்பத்தின் நிகழ்வுகளை கதையாக நமக்கு அளித்திருக்கிறார் ஆசிரியர்.

அக்குடும்ப தலைமுறைகளின் வரைபடம் முதல் பக்கத்திலேயே கொடுத்திருப்பதால் யார் யாருக்கு எப்படி சொந்தம் என்று கதையின் ஆரம்பத்தில் ஒவ்வொரு பெயராக அறிமுகமாகும்போது அதனை குழப்பிக்கொள்ளாமல் சரியாக புரிந்துக்கொள்ள பெரிதும் உதவியாக இருக்கின்றது. 1900 ஆண்டில் தன் கணவனை இழந்த சோகத்தில் ஒரு மாறுதலுக்காக சிறிது காலம் எகிப்தில் தங்கி வர இங்கிலாந்திலிருந்து Anna வருகிறாள். தன் கணவரின் தந்தையின் மூலம் அங்கு ஆட்சிப்புரியும் ஆங்கிலேய அரசு அதிகாரிகள் பலருடனும் நட்புக்கொண்டு அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கும் விருந்துகளுக்கும் சென்று தன் பொழுதை கழிக்கிறாள். தொடர்ந்து தன் மாமனாருக்கு எழுதும் கடிதங்கள் மூலம் அந்நிகழ்வுகள் பதிவாகியிருக்கின்றன. முதல் நூறு பக்கங்கள் அவள் செல்லும் இடங்களை பற்றிய விவரனைகளாகவும் சந்தித்த மனிதர்களை பற்றியதாகவும் இருப்பதால் மிகவும் நிதானமாகவே கதை நகர்கின்றது.

சினாய் பிரதேசத்திற்கு Anna ஆண்வேடம் அணிந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது எகிப்தியர்களால் கடத்தப்பட்டு ஒரு வீட்டில் அடைக்கப்படுகின்றாள். பிறகு அவ்வீட்டில் உள்ள பெண்மணி லைலாவுடன் நட்பாகி, அவளின் அண்ணனும் Annaவும் காதலித்து ஆங்கிலேய அதிகாரிகளின் எதிர்ப்புகளுக்கிடையில் அவர்கள் திருமணம் செய்துக்கொள்கின்றனர். தன்னுடைய மொழியை, நிலத்தை, சொந்தங்களை, நண்பர்களையெல்லாம் துரந்து கணவன்மேலுள்ள காதலால், அவ்வீட்டிலுள்ள மனிதர்கள் தன் மீது காட்டும் அன்பால் அவர்களையே தன் உலகமாக்கிக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறாள். “அவனின் கடலாக இருந்தாள் நீந்துவதற்கு, அவனின் பாலைவனமாக இருந்தாள் துள்ளிகுதிப்பதற்கு, அவனின் நிலமாக இருந்தாள் உழுவதற்கு” என்று அவர்களின் காதல் விவரிக்கப்படுகின்றது.

அவள் அந்நாட்டில் வாழ்ந்த வாழ்க்கையை அக்காலகட்டத்தில் நடந்த சுதந்திர போராட்ட சம்பவங்களோடும், ஆங்கிலேயர் ஆட்சியின் பிடியில் எகிப்த் நிலமக்கள் சந்திக்க நேர்ந்த சங்கடங்களையும் பிணைத்து கச்சிதமாக பதிவாக்கியுள்ளார் ஆசிரியர். முழுமையான வரலாற்றுக்காவியமாக அல்லாமல் ஆங்காங்கே கதையோடு இணைந்த தகவல் குறிப்புகளாக Ottoman Empire, Khedive Tewfiq, Lord Cromer மேலும் Denshawai incident பற்றிய தகவல்களை கொடுத்திருப்பது எகிப்த் நாட்டு வரலாற்றை தெரிந்துக்கொள்ள நல்ல அறிமுகமாக அமைந்துள்ளது.

தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தங்கள் முன்னேற்றத்திற்காகவும் அல்லாமல் அவர்களின் ஆற்றலை எல்லாம் ஆங்கிலேயரின் சூழ்ச்சிகளை முறியடிக்கவே பயன்பட்டு வீணாக்கிக்கொண்டிருப்பதின் வருத்தத்தை கதை நெடுகிலும் காணமுடிகின்றது. சுதந்திரப்போராட்ட சம்பவங்களை பதிவித்தது மட்டுமல்லாமல் 1997 – 1998 காலகட்டங்களில் எகிப்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களையும், அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களை பற்றியும் பதிவுசெய்துள்ளார். காதல் கதையினூடாக பதிவிக்கப்படும் இச்சம்பவங்கள் மிதமான தாக்கத்தையே தருகின்றதெனினும் காலத்திற்கேற்ப அக்குறிப்புகளை புகுத்தியிருப்பது சிறப்பாக அமைந்துள்ளது. “ஒன்றுமே செய்ய முடியாத கையறு நிலையில் மோசமான காலத்தில் கொடூரமான மாட்டிக்கொண்டதாக கவலை பட்டுக்கொண்டிருக்காமல் வரலாறு அதன்போத்தில் தன்னை எழுதிச்செல்ல காத்திருத்தலே நன்று” என்று அன்றைய காலக்கட்டங்களில் எழுதிய வரிகள் இன்றும் பொருந்திப்போவதாக காட்டியிருக்கின்றார்.

தன் கணவனை இழந்த சோகத்தில் எகிப்திற்கு வந்த Anna பதினான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் தன் கணவனை இழந்து, நெருங்கிய நட்பான கணவனின் தங்கையையும் அவளின் குடும்பத்தையும் பிரிந்து மகளுடன் இங்கிலாந்து திரும்புவதாக முடிவடைகின்ற கதையை இரண்டு தலைமுறைக்கு பிறகு ஏற்படும் காதலோடும் நட்போடும் பிணைத்து தொய்வில்லாமல் வெகு சிறப்பாக நகர்த்தியிருக்கின்றார்.

இறுதி சில பக்கங்களை வந்தடைந்துவிட்ட தருணங்களில் விரைவில் இக்கதை முடிவடைந்துவிடுமே என்ற எண்ணத்தில் சற்று நிதானமாகவே நான் வாசித்துக்கொண்டிருக்க, தன் குடும்பத்தின் மூத்த தலைமுறையினறை பற்றி வாசிக்கும் கதைசொல்லியான அமல் அவர்கள் கதையை அறிந்திருந்தும் Anna வின் இறுதி பகுதிகளை வாசிக்க தாமதப்படுத்துகிறாள் என்ற வரிகளை வாசிக்கும் போது மெலிதான புன்னகையை தவிர்க்கமுடியவில்லை. நல்ல புத்தகங்களையும் நம்மை அதனுள் மூழ்கடித்துவிடும் எழுத்துக்களையும் பிரிய கடினமாகவே இருக்கின்றது. புத்தகம் முடியும் வரை அக்காகித மாந்தர்கள் நம்முடனேயே தங்கிவிடுகின்றனர். அதிலும் Annaவின் கணவர் கதாப்பாத்திரம் வெகு சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

இப்புத்தகம் 1999 புக்கர் பரிசு தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றது. அந்த ஆண்டு J.M.Coetzeeயின் Disgrace நாவல் புக்கர் பரிசை வென்றது என்றாலும் இப்புத்தகமும் முற்றிலும் வித்தியாசமான நிறைவான அனுபவத்தை தந்தது. ஆரம்பம், ஆரம்பத்தின் முடிவு, முடிவின் ஆரம்பம், முடிவு என்று நான்கு பகுதிகளாக பிரித்து அதிலுள்ள உட்பிரிவு ஒவ்வொன்றின் ஆரம்பத்திலும் கதைக்கு ஏற்ப பொன்மொழிகளையோ பாடல் வரிகளையோ மேற்கோள் காட்டியிருப்பது சிறப்பு.

இக்கதையின் ஆசிரியரான Adhaf Soueif இந்நாவலின் மூலம் பிரபலமாக அறியப்பட்டார் என்று சொல்லப்படுகின்றது. இவர் கட்டுரை தொகுப்புகள், நாவல்கள், சிறுகதை தொகுப்புகள் வெளியிட்டது மட்டுமல்லாமல் அரபு-ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகின்றார். இவரை பற்றி இங்கு வாசிக்கலாம்.

Book : The Map of Love
Author : Ahdaf Soueif
Pages : 516
First Edition : 1998

Read Full Post »