இவ்விடம்
அதிகம் பரிச்சயமில்லையெனினும்
இங்கிருந்து கிளம்புவதென்பது
வீண் துக்கத்தினை உண்டாக்குகிறது
நீ என்னைத்
தீவினையின் எல்லையில் விட்டு
முன்னகர்ந்து செல்வதை அனுசரித்து
தடைசெய்ய மனமின்றி விலகிச் செல்கிறேன்
இடங்களும் மனிதர்களும் உருவாக்கும்
இந்த உறவும் பிரிவும்
படர்வதற்குள் கிளம்புகிறேன்
என் ஆதிகாலக் குகை வாழ்விற்கு
எல்லோருக்கும் போலவே
இங்கிருந்து எடுத்துச் செல்ல
ஞாபகங்கள் உண்டு
விட்டுச்செல்லத்தான் எதுவுமில்லை
விட்டுச் செல்கிறேன்
புறக்கணிப்பின் வெறுமையை
நிராகரிக்கும் வலிமை என்னிடம் எப்போதுமிருந்ததில்லை
என்கிற சிறு குறிப்பை
– சல்மா (தொகுப்பு – ஒரு மாலையும் இன்னொரு மாலையும்)
அருமையான கவிதை.
நன்றி
அன்பரே,
தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள். உஙகள் பதிவை இத்தனை நாள் பார்க்காமல் இருந்ததற்கு வருந்துகிறேன்….
இந்த கவிதையை இங்கு பார்த்ததும் இதை உங்களிடம் கேட்க வேண்டும் என்று தோன்றியது…
சமகாலக் கவிதைகளை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. மிக மிக எளிய நடையில் இருந்தாலும் அதன் பொருளை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை….
தங்களுக்கு சமகால கவிதைகள் பிடிக்குமென நம்புகிறேன்…. ஒரு கவிதையை எப்படி ரசிப்பது என்று கேட்பது எவ்வளவு அபத்தம் என எனக்குத் தெரியும்… இருந்தாலும் உங்களிடம் கேட்கிறேன்.. சமகால கவிதைகளின் அழகை புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில்…
அன்புடன்,
அரவிந்தன்
நன்றி அரவிந்தன். எனக்கு கவிதைகளை பற்றி அதிகமொன்றும் தெரியாது. கவிதை தொகுப்புகளை தேடி வாசிக்கிறேன். புரிந்ததை, பிடித்ததை ரசிக்கிறேன். புரியாததை விட்டுவிடுகிறேன், சிலகாலம் கழித்து மறுவாசிப்பில் புரியக்கூடும் என்ற நம்பிக்கையில் 🙂
🙂